Saturday, December 12, 2009

மெகா பிக்சல் என்றால் என்ன?

சென்ற காம்போசிஷன் பதிவில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தேன். இப்போது தான் ஆரம்பித்து இருப்பதனால் சில எளிய கான்செப்ட்ஸ் மட்டுமே சொல்லப் போகிறேன். எளிய கான்செப்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு அப்புறமா எனக்குத் தெரிஞ்ச சில முக்கியமானவற்றை எளிமையாகச் சொல்கிறேன். இந்த இணையத்தில் புகைப்படக் கலை பற்றி வரும் பதிவுகள், SLR வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இல்லை. சாதாரண கேமரா வைத்திருப்பவர்களுக்கும் தான். எனவே கேமராவை வாங்கும் போது நாம் நினைக்கும் அம்சங்களை இப்போது பார்ப்போம். இதில் உங்களுக்கு என்ன அம்சங்கள் தேவைப் படுகிறது என்பது உங்களுக்குத் தான் தெரியும் என்பதால், நான் அவற்றை விளக்குவதோடு நிறுத்திக் கொண்டு, என்ன வேண்டும் என்பதை உங்களிடத்தில் விட்டு விடுகிறேன்.

இன்று நாம் மெகா பிக்சல் பற்றி பார்ப்போம். இது தான் நாம் அனைவரையும் ஈர்ப்பது. ஆனால் மெகா பிக்சல் என்றால் என்ன என்பதை பார்போம். மெகா பிக்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், பிக்சல் என்றால் என்ன என்பதைப் பார்போம். நமது புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியைத் தான் பிக்சல் என்று குறிப்பிடுகிறோம். நாம் நமது கணினியில் Display Properties-இல் resolution-ஐ மாற்றும் போது என்ன நடக்கிறது. நாம் 1024x768 அல்லது 800x600 அல்லது வேறொரு resolution வைத்திருப்போம். 1024x768 என்று இருக்கும் போது நமது கணினியில் 1024x768=786432 பிக்சல்கள் (அதாவது புள்ளிகள்) இருக்கிறது என்று பொருள். அதே 800x600 என்று இருக்கும் போது 800x600=480000 பிக்சல்கள் தான் இருக்கும். ஒரு மெகா பிக்சல் என்பது 1000000 (ஒரு மில்லியன்) பிக்சல்கள் ஆகும். எனவே நமது கணினியின் மெகா பிக்சல் 786432/1000000 = 0.79 மெகா பிக்சல் தான். அதாவது ஒரு மெகா பிக்சலை விட குறைவு.

சரி இனி நாம் நமது கேமராவின் மெகா பிக்சலைப் பற்றி பார்ப்போம். ஒரு கேமரா 8 மெகா பிக்சல் என்று இருக்கிறது எனக் கொள்வோம். 8MP (MP: Mega Pixel) என்பது 8000000 பிக்சல்களாகும். அதாவது நமது கேமராவின் சென்சரில் (sensor) 8000000 பிக்சல்களை சேமிக்க (to save) முடியும். கேமராவின் சென்சர் பரப்பளவு மெகாபிக்சலுக்கேற்ப மாறுவதில்லை. அதாவது 1024x768ஆக இருந்தாலும், 800x600ஆக இருந்தாலும் எப்படி நமது மானிட்டெரின் பரப்பளவு மாறுவதில்லையோ அதேப் போல் மெகா பிக்சல்கள் நமது கேமரா சென்சரின் பரப்பளவை மாற்றுவதில்லை. ஆனால் என்ன மாறுகிறது? பிக்சல்களின் எண்ணிக்கை தான் மாறுகிறது. சரி பிக்சல்களின் எண்ணிக்கை மாறுவதால் என்ன நடக்கிறது?

நமது சாதாரண போஸ்ட் கார்டில் சுமார் 475x335 பிக்சல்கள் இருப்பதாக நினைப்போம் (சரியான எண்ணிக்கை தெரியவில்லை, இது வெறும் உதாரணம் மட்டுமே). 475x335=159125 பிக்சல்கள் அதாவது 0.16 MP. ஆக 0.16 மெகா பிக்சலில் எடுக்கும் புகைப்படம் ஒரு போஸ்ட் கார்டின் அளவில் பார்த்தால் நன்றாகத் தான் தெரியும். ஆனால் இதையே ஒரு A4 அளவு (சுமார் 950x672) காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் கண்டிப்பாக சரியாக இருக்காது. ஒரு A4 அளவு புகைப்படத்திற்குக் குறைந்த பட்சம் 950x672=638400 அதாவது 0.64 மெகா பிக்சல் இருக்க வேண்டும். இப்போது மெகா பிக்சல் பற்றி ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

8MP என்பது நமது மானிட்டரின் அளவைக் காட்டிலும் கிட்டத் தட்ட 3 மடங்கு அதிகம். இந்த மூன்று மடங்கை குறைத்து தான் நமது மானிட்டரில் பார்க்கிறோம். எனவே நமது கணினியில் பார்க்கும் போது படங்கள் 8MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும், 10MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும் நமக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியப் போவதில்லை. எப்போது வித்தியாசம் தெரியும் என்றால், நாம் இதை ப்ரிண்ட் செய்யும் போது தான், அதுவும் A4 காகித்தில் பிரிண்ட் செய்தால் தெரியாது, 8MP காதிதத்தில் அதாவது சுமார் 4000x2000 பிக்சல்* அதாவது 125cm x 62.5cm அதாவது அகலம் ஒன்றேகால் மீட்டர், உயரம் கிட்டத் தட்ட முக்கால் மீட்டர் அளவு காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த அளவுக்குப் படங்களை ப்ரிண்ட் செய்யப் போகிறோம். இன்றைய உலகில் நாம் அனைவரும் புகைப்படங்களைக் கணினியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அல்லது A4 அளவு காகிதத்தில் தான் ப்ரிண்ட் செய்யப் போகிறோம். புகைப்படங்களைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்பவர்கள், அதாவது திருமணங்களில் புகைப்படங்கள் எடுப்பவர்கள் அல்லது போஸ்டர்கள் தயார் செய்பவர்கள் தான் மெகா பிக்சலைப் பற்றி அதிக அளவில் ஆராய வேண்டியிருக்கிறது.

என்னுடைய கேமரா வெறும் 10.1 மெகா பிக்சல் தான். எனக்குத் தெரிந்து சோனி எரிக்சன் மொபைலில் 12MP இருக்கிறது. சோனி DSLRல் 24.6MP இருக்கிறது. மெகா பிக்சலின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இனி கேமராவை வாங்கும் போது உங்களுக்கு இது முக்கியமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் புகைப்படங்களைப் ப்ரிண்ட் செய்யப் போவதில்லை என்றால் 10MP போதுமானது. என்னைக் கேட்டால் 8MPக்கும் - 10MPக்கும் அதிக வித்தியாசம் தெரியப்போவதில்லை. கேமரா வாங்கும் போது மெகா பிக்சலின் பங்கு இத்துடன் முடிவு பெறுகிறது.

கேமரா வாங்கும் போது நாம் பார்க்க வேண்டிய அம்சங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அனைத்தும் இந்தப் பதிவில் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் மெகா பிக்சல் மட்டுமே பதிவைப் பெரிதாக்கியதால் அடுத்த அம்சங்கள் அடுத்தடுத்தப் பதிவுகளில் வரும்.

*பிக்சலிலிருந்து செண்டி மீட்டருக்கு மாற்றுவதை நமது ms paintல் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.


டிஸ்கி: எனக்குத் தெரிந்ததை எளிமையாக சொல்லியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்.

Thursday, December 03, 2009

Photographers Invited - புகைப்படபோட்டிக்கு அழைப்பு.

Translated into English towards the end.

இம்முறை அழகான தலைப்பு நமது PiTல். இதுவரை தனித்தனியாக போட்டியில் கலந்து கொண்டிருந்த நமக்கு இம்முறை ஒரு குழுவாக பணியாற்ற ஒரு புது சந்தர்ப்பம். தலைப்பு 'நம் நகரம்'. ஒரு குழுவில் குறைந்தது இரண்டு பேராவது இருக்க வேண்டுமாம். அவர்கள் வசிக்கும் நகரத்தைப் பற்றி புகைப்படங்களை எடுக்க வேண்டும். ஐம்பதிலிருந்து நூற்றிருபது புகைப்படங்கள் வரை எடுத்து ஒரு ஆல்பத்தை உருவாக்கித் தர வேண்டும். கடைசி நாள் பிப்ரவரி 28. இப்படிப்பட்ட குழுப் போட்டி இது தான் முதன் முறையாக நடத்தப் படுவதால், விதிமுறைகளும் இடையிடையே மாற்றப்படலாம். சில விதிமுறைகள் புதிதாக சேர்க்கப்படலாம். கடைசியில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள்/ஆல்பம் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு நமது வட்டாரங்களில் விற்கப்பட்டு, அதில் வரும் பணம் ஏதேனும் (இந்திய) தொண்டுநிறுவனத்திற்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


சரி இனி விஷயத்திற்கு வருவோம். நான் தற்போது (இதில் 'தற்போது' என்பது மிக முக்கியம்:-) ) லண்டனில் வசித்து வருவதால், நான் லண்டனை ஆல்பமாக்கும் குழுவை உருவாக்க நினைக்கிறேன். ஒரு வேளை குழு ஏற்கனவே உருவாகியிருந்தால், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு குழுவில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் இருந்தால் நல்லது. அதற்கும் மேலாக நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் நாம் வேலையை பிரித்துக் கொண்டு, இரண்டு அல்லது அதற்கு மேல் குழுக்களாக பிரிந்து பணிபுரிந்து கடைசியில் ஆல்பத்தை ஒன்று படுத்தலாம்.

இதில் என்னோடு 'லண்டன்' ஆல்பத்தில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் அவர்கள் இதுவரை எடுத்த புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்தை பின்னூட்டவும். டிசெம்பர் 20ஆம் தேதிற்குள் குழுவை அமைத்து விட்டால் பாதி வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

Folks, we have a photo competition in place. The topic is 'My City', more precisely London, in this case. We have to shoot 50 to 120 photos which depicts London before 28-Feb-2010. Interested do comment with your contact details, I will get in touch with more information personally.

Regards,
Kiran Gosu.

Wednesday, December 02, 2009

காம்போசிஷன் - 2

காம்போசிஷன் பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் பதிவும் காம்போசிஷன் பற்றியது தான். சென்ற பதிவில் எப்படி எல்லாம் படங்களை எடுக்கக்கூடாதென்று சொல்லியிருந்தேன் அல்லவா? இம்முறை படங்களை எப்படி எடுத்தால் கண்களைக் கவரும் என்பதை பார்ப்போம்.
இதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் முன்பே சொன்னது போல், புகைப்படம் எடுப்பது ஒரு கலை தான். எனவே இங்கே நான் சொல்லும் விதிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் இவற்றைப் பின்பற்றினால், கண்களை ஈர்க்கும் என்பது நிச்சயம்.
"The so-called rules of photographic composition are, in my opinion, invalid, irrelevant and immaterial" - Ansel Adams

காம்போசிஷனை பற்றி தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வொன்றையும் முழுவதுமாக சொல்லிக் குழப்புவதற்கு பதிலாக சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன். சந்தேகங்களைப் பின்னூட்டமிடவும்.

மிக முக்கியமான விதி ஒன்று Rule of Thirds. நமது புகைப்படத்தை ஒன்பது கட்டங்களாக பிரித்துக் கொள்ளுங்கள், அதாவது மேலிருந்து கீழாக இரண்டு கோடுகளும், இடமிருந்து வலமாகவும் இரண்டு கோடுகளும் வரைந்துக் கொள்ளவும். இப்போது 3X3 மேட்ரிக்ஸ் கிடைக்கும் அல்லவா? அனைத்துக் கட்டங்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும், அதாவது கோடுகளின் இடைவெளி சமமாக இருக்க வேண்டும். இப்போது இதிலிருக்கும் நான்கு கோடுகளின் மீதோ அல்லது அந்தக் கோடுகள் சேரும் புள்ளிகளின் மீதோ தான் நமது கண்கள் தானாக செல்லும். இந்தப் புள்ளிகளை Power Points என்று சொல்வதுண்டு. எனவே நாம் நினைக்கும் சப்ஜெக்ட் இந்தப் புள்ளிகள் இருக்கும் இடத்தில் இருத்தல் நலம். நாம் திரைப்படங்கள் பார்க்கும் போது கூட இதை கவனித்திருக்கலாம். (இல்லையென்றால் இனி கவனிக்கவும்). கீழிருக்கும் புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

புகைப்படம் - நன்றி விக்கிபீடியா







ஆனால் அனைத்துப் படங்களிலும் Rule of Thirds பயன் படுத்த முடியுமா என்றால், முடியாது. காரணம் சில படங்களுக்கு symmetry தேவைப் படுகிறது. அப்படிப் பட்ட இடங்களில் Rule of Thirds பயன் படுத்த முடியாது. இவ்வாரு சிமெட்ரியாக எடுப்பது ஒருவகையான காம்போசிஷன் தான்.







தவறான உதாரணம்


சரி இப்போது மேலே பார்த்த படத்தை வைத்துக் கொண்டு இன்னொரு காம்போசிஷன் விதியையும் சொல்லிவிடுகிறேன். - Leading Lines என்பது இதற்கான பெயர். நாம் பார்க்கும் காட்சிகளில் பெரும்பாலும் கோடுகள் இருக்கின்றன. உதாரணதிற்கு ரயில் தடம், கரண்ட் கேபிள், ஜன்னல் கம்பிகள், மரக் கிளைகள், நேர் ரோடுகள் இப்படிப்பட்டவை. இவற்றை நாம் பார்க்கும் போது நமது கண்கள் நம்மை அறியாமலேயே அந்தக் கோடுகளை நூல் பிடித்தாற் போல் பிடித்துக் கொண்டு கோட்டின் அடுத்த முனைக்குக் கொண்டு சென்றுவிடும். இப்படியிருக்கும் போது நமது சப்ஜெக்ட் எங்கிருக்க வேண்டும்? ஆம் கோட்டின் அடுத்த முனையில் தான். [டோரா கார்டூன் பார்ப்பது போல் இருக்கா? :) ]. கீழே இருக்கும் படங்களைப் பார்த்தால் உங்களுக்குப் புரிந்துவிடும்.





காம்போசிஷனில் இன்னொரு சின்ன விதியும் உள்ளது. இப்போது நாம் நேர் கோடுகளைப் பார்த்தோம் இல்லையா? அதே போல் வளைந்த கோடுகளும் ['S' வடிவிலான வளையங்கள்] மனித கண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். உதாரணத்திற்கு வளைந்து ஓடும் நதிகள், ரோடுகள்.



வளைந்து ஓடும் நதிகளைப் பற்றிச் சொல்லும் போது இன்னொரு விதியும் சொல்லிவிடுகிறேன். அதாவது நமது சப்ஜெக்ட் வலப்பக்கத்திலிருந்து இடமாக போவது போல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது சப்ஜெக்டை வலப்பக்கம் வைத்து விட்டு இடப் பக்கம் நிறைய இடம் இருப்பது போல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது நமது சப்ஜெக்ட் இடப் பக்கம் போவது போல் தெரியும். அதுமட்டுமின்றி நமது ஃப்ரேமிற்கு ஒரு முழுமை கிடைக்கும். அப்படியின்றி வலப்பக்கம் போகும் சப்ஜெக்டை வலதோரத்தில் வைத்தால், இதோ சற்று நேரத்தில் சப்ஜெக்ட் நமது ஃப்ரேமிலிருந்து சென்று விடுவது போல் தோன்றும், அதுமட்டுமின்றி காலியாக இருக்கும் வலப்பக்கம் ஃப்ரேமில் 'ஏதோ மிஸ்ஸிங' போன்றது போல் இருக்கும். இந்த காம்போசிஷனை 'Movement into the Majority of the Frame' என்று சொல்வதுண்டு.



தவறான உதாரணம்


Monotonous Content என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது ஒரே மாதிரியானவற்றை ஒன்றாக வைத்து படம் எடுப்பது, உதாரணதிற்கு புற்கள், கூழாங்கற்கள்.






இவை மட்டும் தானா விதிகள் என்றால், இல்லை என்பது தான் என்னுடைய பதில். நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று - நாம் நமது புகைப்படத்தில் எதைக் காட்டவேண்டும் என்று நினைக்கிறோமோ, அது மட்டும் தான் நமது புகைப்படத்தைப் பார்ப்பவர்களுக்குத் தெரியவேண்டும். அவர்களின் கண்கள் எங்கு பார்த்தாலும், அவர்களின் கண்களை ஈர்த்துக் கொண்டு வந்து 'இதோ நான் இங்குட்டு இருக்கேன்', என்று சொல்வது போல் இருக்க வேண்டும் நமது புகைப்படங்கள்.

எல்லாவற்றிலும் மிக முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. பல சமயங்களில் அழகான ஒரு சப்ஜெக்டிற்கு முன்பு படுகேவலமான நமது முகத்தை வைத்து சப்ஜெக்டை அசிங்கப்படுத்துவது நமது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதைத் தவிர்ப்பது என்பது நம்மால் முடியாத ஒன்று தான். ஆனால் இது தான் முக்கியாமன விதி. சொல்லியாச்சு, இனி படங்களை எடுங்க.

Saturday, November 21, 2009

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு - 2

முதல் பகுதி

அதான் E கிடைத்துவிட்டதே என்ற சந்தோசம் ஒரு இரு நிமிடங்கள் கூட இருந்திருக்கவில்லை. யாரோ இரண்டு பேர் அவர்களுக்கு வந்த சீட்டுகளை மாற்றிக் கொண்டு விட்டதால் ஆரம்பித்தது அவலம். வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயம். முடிந்தது இனி என முடிவானது. மறுபடியும் நான் செல்லும் போது அங்கு ஒரே சீட்டு தான் இருந்தது. 'கமான் டேக் ஒன்' என்று எனது வயிறெறிச்சலை கட்டிக் கொண்டார். இருந்த ஒன்றை எடுத்துக் கொண்டேன். அதில் L என்றிருக்க நடக்க ஆரம்பித்தேன் தூரத்தில் இருக்கும் பட்டறையை நோக்கி.

இங்கே நான் சில விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும். எனது அக்கா கல்லூரியில் எனக்கு இரண்டு வருட சீனியர். அவர் Electricals and Electronics Engg [EEE] டிபார்ட்மெண்ட். அவர் அதிபுத்திசாலி என்பதால் அவருக்கு அவருடைய டிபார்ட்மெண்ட் HODயிடம் மிக நல்லப் பெயர். எனக்கு அங்கிருக்கும் மிஷன்களின் பெயர்கள் கூட சரிவரத் தெரியாது. எந்த கேள்விற்கு எங்கே போய் எந்த மிஷனை ஓட்ட வேண்டும் என்பது கூட சரிவரத் தெரியாது. அன்று எங்களுக்கு வைவாவிற்கு வந்தவர் EEEயின் HOD தான். அக்காவின் தயவில் ஏற்கனவே எனக்கு அவரிடம் நல்ல பெயர் இருந்து வந்தது.

அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குலுக்கல், வழக்கம் போல் கடைசியாக மீதமிருந்த ஒன்று தான் எனக்கு. கடைசியாக மிச்சமிருந்த ஒரு சீட்டை எடுத்தேன். ஏதோ ஷண்ட் மோட்டார் பற்றிய கேள்வி என்று நினைக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன்? இதை எளிதாக செய்து கிழிக்கலாம் என்றா? அதெல்லாம் இல்லை. இதே ஷண்ட் மோட்டார் தான் என்னுடைய மாடல் பரிட்சையிலும் வந்தது. அதனால் இந்த ஷண்ட் மோட்டார் எங்கே இருக்கிறது என்பது மட்டும் தெரியும். சரியாக அங்கே சென்று நின்று கொண்டேன். அப்போது லேப் அசிஸ்டெண்ட் ஒருவர், 'ஏன்பா அங்க நிக்குற? அங்க போலாம்ல' என்றார். அவ்வளவு தான். சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. நான் சரியான மிஷனில் தான் நிற்கிறேனா என்று. ஒரு முறை அவர் சொன்ன மிஷினைப் பார்த்தேன். அது அச்சு அசலாக இருந்தது. 'சார்...' என்று இழுக்க, 'சரி இது தான் உன்னோட ராசியான இடம்னா நின்னுகோ, இரண்டும் ஒரே ஷண்ட் மோட்டார் தான்', என சொன்ன பிறகு தான் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டேன். சரியான இடத்தில் தான் நிற்கிறோம் என. இனி இருக்கும் வயர்களை எங்கே மாட்ட முடியும் என்று லாஜிக்காக யோசித்து (இதில் யோசித்து யோசித்து செய்த ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன்) அங்கே இங்கே என்று மாட்டிவிட்டு, குல தெய்வங்களை எல்லாம் ஒன்றிற்கு நாற்பதேழு முறை வேண்டிக் கொண்டு மோட்டாரை ஆன் செய்தேன். இருக்கும் மீட்டர்களில் உள்ள எண்களை எழுதி, ஒரு முறை கேள்வியைப் படித்து, அதிலிருந்து ஷண்ட் மோட்டர் எதற்கு தேவைப் படுகிறது என்று தெரிந்துக் கொண்டு அதையே எழுதி, ஒரு வழியாக செய்து முடித்தேன். அடுத்தது வைவா.

வைவாவில் HODயும் எனது ஆசிரியையும் இருந்தார்கள். எனது ஆசிரியைக்கு எனது அக்கா பற்றி தெரியாது. எனது அக்காவிற்கு ஆசிரியையை விட அதிகமாகவே தெரியும் என்பது வேறு கதை. ஒருவேளை எனது அக்காவைப் பற்றி தெரிந்திருந்தால் அமைதியாக இருந்திருக்கக் கூடும். தெரியாததனால், 'சார் இவனைக் கொஞ்சம் நல்லா கேள்வி கேளுங்க சார், ரொம்ப தான் பேசறான்', என்று HODயிடம் சொல்ல, அவர், 'ச்சே இந்தப் பையனுக்கு எல்லாமே தெரியும்' என்று அவர் சொல்ல எனக்குப் பீதியில் இங்கும் அங்குமாய் படித்தவை எல்லாம் மறந்தே போனது.

பின்னர் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மாட்டைப் பற்றி கேட்டால், மரத்தைப் பற்றி சொல்லிவிட்டு 'அந்த மரத்தில் தான் எசமான் அந்த மாட்டைக் கட்டி வெச்சிருந்தாங்க' என்பது போல் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அவர் கேட்டதில் இன்னும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் கேள்வி - saturation.

'வாட் ஈஸ் சேச்சுரேஷன்' என்று கேட்டார்.
படித்ததையெல்லாம் மறந்தாச்சு. இதில் படிக்காததை எப்படிச் சொல்ல? அமைதியாகவே இருந்தேன்.
அவரே சொன்னார், 'இப்போ நீ எல்லாத்தையும் படிச்சுட்டு வந்திருக்கே...'
'ஆமாம் சார்'
'இப்படி த்ரெஷோல்ட் லெவெலுக்கு அதிகமா படிச்சா ஒரு நேரத்துல அதுக்கு மேல படிக்க முடியாது'
'ஆமாம் சார்'
'ஒரு லெவெலுக்கு மேல போக முடியாத போறது தான் சேச்சுரேஷன்'
'ஆமாம் சார்'
'நீ அந்தளவுக்கு படிச்சதுனால தான் இப்போ உனக்கு எதுவுமே நினைவுல இல்ல'
'ஆமாம் சார்'

என்ன நினைத்தாரோ தெரியவில்லை மார்க் மட்டும் நல்லாவே வந்திருந்தது.

ஒரு கட்டுரையில் படித்த நினைவு - நமக்கு என்ன வேண்டும் என்று பூவா தலையா போடும் போது, நாணயத்தை சுண்டிவிட்டு, அதை பிடித்துப் பார்ப்பதற்கு முன்பே, நமது மனதில் பூ அல்லது தலை இதில் இரண்டில் ஒன்று வேண்டும் என நினைத்திருப்போம். மனதில் எது வேண்டும் என்பது நாணயத்தைச் சுண்டி விடுவதற்கு முன்பே நமக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது பூ விழுந்ததா, தலை விழுந்ததா என்று பார்க்கத் தேவையில்லை. உண்மையில் சாய்ஸே தேவையில்லை.

Friday, November 20, 2009

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

ஒன்றிலிருந்து பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருப்பதைச் சொல்கிறேன், உங்கள் ராசியை அலசுகிறேன் என்றபடி நமக்கு எத்தனையோ மெயில்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி வரும் மெயில்களுக்கு நான் நினைக்கும் எண் எப்போதும் 'ஒன்று' தான். 'ஒன்று' எனக்கு பிடித்த எண்னா? அப்படி எல்லாம் இல்லை. ஒருவேளை முப்பத்தேழுலிருந்து நாற்பத்திமூன்றுக்குள் ஒரு எண்னை நினைக்கச் சொன்னால், நான் முப்பத்தேழு தான் நினைப்பேன். ஏன்னா நமக்கும் சாய்சுக்கும் ஆகவே ஆகாது...

எனக்கு இருபது வயதிருக்கும் போது நான் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். ஹி ஹி ஹி... போதும் உங்க தூள் பட டயலாக். வழக்கமாக ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருப்பார்கள். ப்ராக்டிகல்ஸ் பரிட்சை வரும் போது வகுப்பை நான்காகப் பிரித்து பதினைந்து பதினைந்துகளாக பிரித்து மேய்ப்பது பாரம்பரிய வழக்கம்.

அன்றைக்கும் அப்படித் தான். ForTran மற்றும் COBOL ப்ராக்டிகல்ஸ். பன்னிரண்டாவது வரை அப்பாவின் ஆசையின் பெயரில் பயாலஜியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் கணினியைத் தொட்டது எல்லாம் கல்லூரியில் தான். முதன் முதலாக கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் என்பது உள்ளூர பயம் இருந்தது. பயம் எல்லாம் கொடுத்த வேலையை செய்யத் தெரியுமா என்றெல்லாம் இல்லை. நாங்க எல்லாம் நல்லா படிக்கிற பயலுக. ஆமா... பயமெல்லாம் தெரிந்த ப்ரோக்ராமை குறிப்பிட்ட நேரத்தில் கீ-போர்டில் எழுத்துக்களைத் தேடித் தேடி டைப் அடித்து முடிக்க முடியுமா என்று தான். அன்று அனைவரும் இருக்கும் ப்ரோக்ராம்களை படித்துக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கீ போர்டில் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அனைத்து கேள்விகளும் ஒவ்வொரு தாளில் மறைத்து வைத்திருப்பார்கள். நாம் குலுக்கல் முறையில் நமக்கு கிடைப்பதை எடுத்துக் கொண்டு அதிலுள்ள கேள்விக்கான ப்ரோகிராமை எழுத வேண்டும். நேரம் நெருங்க நாங்கள் வரிசையில் நிற்க, முதலில் நிற்பவன் அங்கிருக்கும் பதினைந்து தாள்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிலுள்ள ஒரு கேள்விக்கு ப்ரோக்ராம் எழுத வேண்டும். எனது எண் பதினைந்து, நான் வரிசையில் கடைசி. நான் செல்லும் போது ஒரே ஒரு கேள்வித் தாள் தான் பாக்கி இருக்கும். இதில் ஆசிரியரின் நக்கல் வேறு. 'சூஸ் ஒன்லி ஒன்' என்று சிரித்தார். 'என்னத்த சூஸ்றது' என்று நினைத்து விட்டு மிஞ்சிய ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று ப்ரோக்ராமைக் கணினியில் அடிக்க ஆரம்பித்தேன். கடினமானது தான். பதினைந்து பேரில் முதலில் முடித்தது நான் தான். அது மட்டுமின்றி சரியாக முழுமையாக எழுதியதும் நான் மட்டும் தான்.

பின்னர் ஒரு முறை Electricals & Electronics லேப். எலக்ட்ரிகல்ஸ் என்பது (எனக்குப் புரிந்த வரை, இதையே முதன்மையாக படித்தவர்கள் பின்னூட்டத்தில் தாறு மாறாக விளக்கவும்) ACயில் இயங்குபவை. எலக்ட்ரானிக்ஸ் என்பது DCயில் இயங்குபவை. சரி அதெல்லாம் இப்போது தேவையில்லை. என்னைப் பொருத்த வரையில் எலக்ட்ரிகல்ஸ் என்பது மெகானிக் ஷெட் போலிருக்கும் ஒரு பட்டறையில் பெரியப் பெரிய மோட்டார்கள், ட்ரான்ஸ்பார்மர்களுடன் வயர்களுடன் வண்டி ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் என்பது சிப், டையோட், ரெசிஸ்டர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். நான் ஒன்பதாவது படிக்கும் போதே எலக்ட்ரானிக்ஸ் பற்றி அக்காவிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதால் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிகல்ஸை விட சுலபமானது தான்.

அன்றும் பதினைந்து பேர் தான். எட்டு பேருக்கு எலக்ட்ரானிக்சும், ஏழு பேருக்கு எலக்ட்ரிகல்சும் என்று முடிவெடுத்து துண்டுச் சீட்டில் E (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் L (எலக்ட்ரிகல்ஸ்) எழுதி வைத்தது ஆசிரிய பட்டாளம். முதலில் எந்த லேப் என்பது முடிவு செய்து அதன் பின்னர் அதில் என்ன கேள்வி என்பது அந்தந்த லேபிற்குச் சென்று முடிவு செய்யலாம் என்று நினைத்தார்கள் போலும். 'கம் அண்ட் பிக் யுவர் சிட்', என்றார் அங்கிருக்கும் ஒரு ஆசிரியர். வரிசையில் அப்போது யாரும் நிற்காததால் ஓடும் பஸ்சில் துண்டைப் போடு சீட்டு பிடிப்பது போல் அனைவரும் அலரி அடித்துக் கொண்டு எடுக்க, நான் தேடிப் பார்த்து Lலை விடுத்து E எடுத்துக் கொண்டேன். இனி சுலபம் தான்.

பதிவு பெரியதாக போய்க் கொண்டிருப்பதினால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் தொடரும்.

Thursday, November 12, 2009

காம்போசிஷன்

இது புகைப்படங்கள் எடுப்பதைப் பற்றிய பதிவு. இனிமேல் இது போன்ற பதிவுகள் தொடரலாம். ஆமாங்க நேரமும், ஐடியாவும், உங்கள் ஆதரவும் இருந்தால் மட்டுமே இது தொடரும். புகைப்படங்கள் எடுப்பதைப் பற்றி நான் எழுதுவதற்கான காரணங்கள் பல. எனக்குள் புகைப்பட ஆர்வம் இருப்பதாலும், இப்படிப் பதிவுகளாக எழுதுவதால் நானும் மேலும் படிக்க முடியுமென்பதாலும், இப்படியாவது பதிவுகள் எனது ப்ளாக்கில் ஓடட்டும் என்றும் பல காரணங்கள்.
ஒரு முக்கிய முன்குறிப்பு - இங்கு நான் எழுதுவது அனைத்தும் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, அதைக் கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை.
சரி இனி பதிவிற்குச் செல்லலாம்.

முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு கலை, அறிவியல் கண்டிப்பாக இல்லை. எனவே தான் அப்படியொரு முன்குறிப்பு.

இந்தப் பதிவு காம்போசிஷனைப் பற்றியது. காம்போசிஷன் என்றால் என்ன? நாம் ஒரு மெயிலை கம்போஸ் செய்கிறோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். மெயிலை கம்போஸ் செய்யும் போது, To, CC, BCC, Subject, Body, Signature போன்ற சமாச்சாரங்களைச் சரியாக அடிக்க வேண்டும், அதாவாது எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்கு இருந்தால் நலம். CCயில் இருப்பவர் Toவில் போட்டாலும் மெயில் சரியாகச் செல்லத் தான் போகிறது. ஆனால் அது சரியான முறை அல்ல. ஒரு முறை எனது அலுவலகத்தில், எனது டீமைச் சார்ந்த ஒருவன் Subjectல் 'Hi, this is Venkat' என்று அடித்து ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ரிலேடட் மெயிலை அனுப்பினான். மெயில் எனக்கு வரத் தான் செய்தது. ஆனால் அவன் என்னிடம் வந்து சொன்ன பிறகு தான் நான் படித்தேன். எனவே காம்போசிஷன் மிக முக்கியம். அதே சமயம் இதுவும் ஒரு கலை தானே.

சரி இனி புகைப்பட உதாரணங்களுக்குச் செல்வோம்.
நாம் ஒரு புகைப்படம் எடுக்கப்போகிறோம் என்றால் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது புகைப்படத்தின் சப்ஜெக்ட். நமது புகைப்படத்தைக் காண்பவர்களின் கண்கள் நாம் நினைத்த சப்ஜெக்டை மட்டுமே பார்க்கும் வண்ணமாகச் செய்ய வேண்டும். அவர்களின் கண்கள் நாம் நினைத்த சப்ஜெக்டை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும்.

நாம் ஒரு லேண்ட்ஸ்கேப் ஒன்றினை எடுக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொள்வோம். ஒரு லேண்ட்ஸ்கேப் என்பது பரந்து விரிந்த ஒரு நிலம்/மலை. இதில் சப்ஜெக்ட் என்று சொல்வதற்கு முக்கியமாக ஒன்றும் இல்லை. முழு புகைப்படமும் சப்ஜெக்ட் தான். இப்படிப்பட்ட புகைப்படங்களில் நமது நிழலோ அல்லது வேறொருவது நிழலோ மிகத் துல்லியமாக இருந்தால், பார்ப்பவர்களின் கண்கள் கண்டிப்பாக திசை மாறும்.

சில நேரங்களில் நாம் நிழலை மட்டும் புகைப்படம் எடுக்க நினைத்து தேவையில்லாமல் ஒரு ஓரத்தில் நமது கால்களோ, கைகளோ வந்து தொலைக்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது.


சில சமயம் நாம் ஏதாவது ஒரு சப்ஜெக்டை எடுக்க நினைக்கும் போது நடுவில் ஒரு சிலர் வருவது தடுக்க முடியாதது. அப்படிப்பட்ட இடங்களில் நாம் அவர்களை க்ராப் செய்தோ அல்லது அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகோ அல்லது அவர்களிடம் கேட்டுக் கொண்டு அவர்களை விலக்கி புகைப்படம் எடுக்க வேண்டும். கீழே இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு காலத்தில் நான் எடுத்தது தான். நாயை மட்டுமே எடுக்க வேண்டும் என நினைத்து எடுக்கப்பட்டது தான், ஆனால் கூடவே ஒருவரின் பின்புறமும், இன்னொருவரின் கால்களும் வந்திருக்கிறது. காண்பவர்களின் கண்கள் இனி நாயை விட்டு திசை மாறுவது இயல்பே.



நாம் புகைப்படம் எடுக்கும் போது சப்ஜெக்டின் அருகே இருக்கும் பொருட்கள் நமது சப்ஜெக்டின் வடிவத்தையோ, பொருளையோ மாற்றிவிடுகிறது. உதாரணதிற்கு... படங்கள் இல்லை, எழுதுகிறேன், புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் ஒரு விளக்குக் கம்பத்திற்கு முன் நின்று கொண்டிருக்கிறார் எனக் கொள்வோம். அவரைப் புகைப்படம் எடுக்கும் போது அந்தக் கம்பம் அவரது தலைக்கு மேலே இருந்தால் தலையிலிருந்து முளைப்பது போல் காட்சியளிக்கும்.

பதிவு பெரியதாகிக் கொண்டே போகிறது. சரி இந்தப் பதிவில் எப்படி எல்லாம் புகைப்படம் எடுக்கக்கூடாதென்பது தெளிவாக(?) விளக்கியுள்ளேன். கேள்விகள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். தெரிந்தால் பதிலளிக்கிறேன். தெரியவில்லையெனில், வாங்க கத்துக்கலாம்.

அடுத்தப் பதிவு எப்படி எடுத்தால் காண்பவர்களின் கண்களை ஈர்க்க முடியும் என்று பார்க்கலாம்.

Wednesday, October 14, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

இந்த வீடியோ எனக்கு மெயிலில் வந்தது. உங்களிடம் இந்த வீடியோ முழுவதுமாக இருந்தால் சொல்லுங்க. பார்த்தே தீர வேண்டும் :-)


Friday, October 09, 2009

அவனோட கதை - காதலுக்கு மரியாதை

இது அவனோட கதை. இதுல கதாபாத்திரங்கனு சொல்றதுக்கு நிறைய பேரெல்லாம் இல்லேங்க. அவனும், அவனோட காதலி. முக்கியமா இரண்டு பேரு தான். ஊடால நிறைய பேரு வருவாங்க, போவாங்க, உக்காருவாங்க, நிப்பாங்க, எல்லாம் பண்ணுவாங்க. அவங்க எல்லாம் டூயட் பாட்டுல வர்ற சைடு வாத்தியம் போல, அவங்கள பத்தி எல்லாம் நிறைய சொல்ல தேவைப் படல.

அவன் அவள முதல் முறையா ச்சேட்ல பாத்து தன்னோட மனச தொலைச்சிட்டான். அப்போ அவன் சென்னையிலும், அவ ஆந்திரவிலும் இருந்தாங்க. அவன் மறத்தமிழன், அவ ஆந்திரா ஆவக்கா. அதான் காதலுக்கு கண்ணு, காது, மூக்கு, நாக்கு, சாக்கு எதுவுமே தேவையில்லையே அப்புறம் என்ன மொழி? காதலிச்சானுவோ, காதலிக்கிறானுவோ, காதலிப்பானுவோ, அத பத்தி நமக்கு எதுக்கு. இப்போ நம்ம டாபிக் அவங்களோட காதல் மலர்ந்தப்போ நடந்த கதை.

இப்போ அவன் ஒரு நல்ல கம்பனில கை நிறைய, பை நிறைய சம்பாதிக்கிறான். ஆனா நம்ம பசங்களுக்குக் காதல் எல்லாம் பிச்சை எடுக்கும் போது தானே வரும். அவனுக்கும் அப்போ தான் வந்துச்சு. ச்சேட்ல பாத்து காதலிச்சதால அது மேலும் மலர, மேலும் ச்சேட் செய்ய வேண்டிய சூழ்நிலை. பாவம் பையன் அவன் என்ன பண்ணுவான், he was cornered. ஏன்னா கையில செல்போன் இருந்தாலும் அதுல காசு இருக்காது. எவ்வளவு நாள் தான் அவனும் மிஸ்டு காலே தருவான். காதலோட பேஸ்மெண்ட் ரொம்ப முக்கியம், தெரிஞ்சுக்கோங்க. அதனால கொஞ்சம் செலவு பண்ணி ச்சேட் செய்யலாம்னு முடிவு பண்ணி பிச்சை எடுக்க ஆரம்பிச்சான். ஐய்யோ மன்னிச்சுக்கோடா அவனே, பிச்சை எடுக்க மாட்டான், மத்தவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிட்டு போவான்.

இதுல என்ன விசேஷம்னு கேட்டீங்கன்னா, எல்லா முறையும் மத்தவங்கக் கிட்ட காசு கேட்டுட்டுப் போக முடியாது. அவனும் எத்தனை முறை தான் காறி துப்புறது தாங்கிக்க முடியும்? அப்போ வேலை செஞ்சுகிட்டு இருந்த கம்பனி கொடுத்த சம்பளத்துல சாப்பாட்டுக்கே லாட்டரி. படிக்கிறவங்களே, அவன பத்தி ரொம்ப கீழ்த்தரமா எடை போடாதீங்க. நாங்க எல்லாம் முதல் வேலை தேடும் போது அமெரிக்கால டாட் காம் பபுள். ஒருத்தனுக்கும் வேல கிடையாது. கிடைச்சாலும் சம்பளத்துல டாய்லெட் டிஷ்யூ தான் வாங்க முடியும். அதுல தான் எங்களுக்கு சாப்பாடே. அட சாப்பாடு டாய்லெட் டிஷ்யூல இல்லே, அந்த சம்பளத்துல. அவன் அந்த சம்பளத்துலேயே கொஞ்சம் ச்சேட்டுக்கு ஒதுக்கி வெச்சு காதலிச்சுக்கிட்டு இருந்தான்.

அப்போ இன்டர்நெட்ல ச்சேட் பண்றதுக்கு மணிக்கு 15 ரூபா. இன்டர்நெட் வேற செம்ம வேகமா சும்மா ஆமையோடு போட்டி போட்டுகிட்டு இருக்கும். ஒரு மணி நேரத்துல நலம், நலம் அறிய ஆவல்னு பாட தான் முடியும். அதனால குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தேவை கடலைய வறுக்குறதுக்கு.

அன்னைக்கும் அப்படி தான், ச்சேட் செய்ய 15 ரூபாய் தேவைப் பட்டது ஆனா கையில வெறும் 5 ரூபா தான் இருந்திருக்கு, காறி துப்பாத நண்பர்களின் எண்ணிக்கை எத்தனை முறை நின்னு பாத்து எண்ணியும், தண்ணி குடிச்சு எண்ணியும் பூஜியம் தாண்டல. வங்கில அன்னைக்குன்னு பாத்து சரியா 510 ரூபா கிடக்குது. அவனோட வங்கி கணக்குல குறைந்தது 500 ரூபாய் இருக்கணும். ஆக அந்தப் பத்து ரூபாவ தான் நோண்டி எடுக்கணும். ஏ.டி.எம்-ல போய் பத்து ரூபா கேட்டா தருமா? அதனால அவன் டைரக்டா வங்கிக்கே போய், வித்ட்ராயல் ஸ்லிப் ஒன்னு வாங்கி சும்மா கெத்தா பத்து ரூபா போட்டு அங்கிருக்கும் ஆபீசர் கிட்ட தர, அவங்க
'ஏம் பா தம்பி இந்த வித்ட்ராயல் ஸ்லிப் இரண்டு ரூபா, தெரியுமா?' அப்படின்னு பீலா விட்டிருக்காங்க.
நம்ம பையன் அமெரிக்க எம்பஸில வாரணம் ஆயிரம் சூர்யா கணக்கா, 'நான் என்னோட காதலியோட ச்சேட் செய்யணும்'னு ஸீனா சொல்ல, அவங்க மெர்சலாகி காசு தந்திருக்காங்க.

காதலுக்கு மரியாதை! உண்மையாவே அவனே, நீ பண்ணின விஷயம் உன்னோட அவளுக்குத் தெரிஞ்சா அவங்களுக்கு உன் மேல காதல் அதிகமாகும்.

Tuesday, October 06, 2009

தோழியின் காதலன்

னது தோழியுடன் அந்தப்புரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசிக்கு வயது பதினெட்டு முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி நான்கு நாட்கள் எட்டிப் பார்த்து இரண்டு மணி முடிந்து இருபது நிமிடம் தொலைந்து எட்டு வினாடிகள் ஆகியிருந்தது. இதை நான் எழுதும் வேளையில் இன்னுமொரு பத்து வினாடிகள் ஆகிவிட்டது. தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் ஒரே சமயத்தில் பிறந்தது; வேறுபாடு - இருவரும் வெவ்வேறு சமயத்தில் பிறந்தது. பார்ப்பதற்கு இளவரசி ரம்பை போல், தோழி ஊர்வசி போல். இளவரசிக்குக் கிடைத்த அனைத்துமே தோழிக்கும் கிடைக்கும் அந்த அரண்மனையில். ஒற்றுமையினால் இருவரும் தோழிகள் ஆனார்கள், வேறுபாட்டினால் ஒருத்தி இளவரசி ஆனாள், வேறொருத்தி தோழி ஆனாள்.

வேற்றுமைக்கான பொருள் தெரியாதவர்களாகத் தான் இளவரசியும், தோழியும் முதலில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அரண்மனையில் இருந்த சிலப் பல நாரதத் தோழிகளால் இளவரசியின் தோழிக்கு விழுந்தது மனதில் ஒரு நிரந்திர வெட்டு. அன்றிலிருந்து இந்த அரண்மனையில், தான் இரண்டாம் பட்சம் தானோ என்ற எண்ணம் என்றுமே இருந்தது தோழிக்கு. வெளியே மட்டும் பொய்ச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டு இளவரசியுடன் பழக அரம்பித்தாள்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய நினைத்த மன்னன், சுயம்வரத்திற்கு முன்பு இளவரசியின் புகைப்படத்தை மட்டும் அனைத்து நாட்டு இளவரசர்களுக்கு அனுப்ப முடிவு செயதார். இளவரசியை வரைய ஒரு ஓவியர் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் இளவரசி தன் காதலை ஓவியரிடம் சொல்ல, ஓவியரும் ஓரிரு நாட்களில் பயம் தெளிந்து சம்மதம் தெரிவித்தார். தன் காதலை இளவரசி தோழியிடம் சொல்ல, அவளோ வெளியே மகிழ்ச்சியையும், உள்ளே பொறுமியும், தனக்குக் கிடைக்காத ஒன்று இளவரசிக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு கட்டினாள்.

இளவரசிக்கு உதவி புரிவது போல் நடித்து ஓவியரைத் தனதாக்கிக் கொள்ள தோழி திட்டமிட்டாள். இதன் முதல் கட்டமாக ஓவியரையும் இளவரசியையும் பிரிப்பது என்று முடிவு செய்தாள். ஒரு மாலை வேளையில் ஓவியரும் இளவரசியும் அந்தப்புரத்தில் ஓவியம் வரைவது போல் காதலித்துக் கொண்டிருந்தனர். அப்போது தோழி மன்னரிடம் ஓவியரைப் பற்றி கீழ்த்தரமாகச் சொல்ல, மன்னனும் அந்தப்புரத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துக் கோபமடைந்து உடனே ஓவியருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அது கழித்தப் பின்னர் மரண தண்டனையும் விதித்தார். இளவரசி ஏதும் சொல்வத்றகு முன் ஓவியர் சிறையில் அடைக்கப் பட்டார். இது தோழிக்கு முதல் வெற்றி.

இரண்டாவது கட்டமாக, ஓவியரைத் தன்வசப் படச் செய்ய நினைத்தாள். ஓவியர் சிறையில் இருக்கும் போது தோழி பல முறை ஓவியரைச் சந்தித்து தன்னைக் காதலிக்கும் படி சொன்னாள், மேலும் அப்படி காதலித்தால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்றும் சொன்னாள். இதற்கு ஒரு போதும் மயங்காத ஓவியர் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாரானார். ஓவியரைச் சம்மதிக்க வைக்க முடியாமல் போக, தோழி தனது திட்டத்தை மாற்றினாள். தனக்குக் கிடைக்காத ஏதும் இளவரசிக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் உறுதியாக நின்றாள். மன்னரிடம் பேசி தண்டனையை மாற்றி அமைத்தாள்.

இன்று தண்டனைக்கான நாள்.

ஓவியருக்குத் தண்டனை மாற்றப் பட்டது என்பது மட்டுமே தெரியுமே தவிர என்ன தண்டனை என்று தெரியாது. ஓவியர் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர் முன் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றைத் திறந்து உள்ளே செல்ல வேண்டும் என்பது தான் தண்டனை.

தண்டனை என்னவென்று மன்னருக்கும், இளவரசிக்கும், தோழிக்கும் மட்டுமே தெரியும். ஒரு அறையில் பசியுடன் கூடிய சிங்கமும், மற்றொரு அறையில் தோழியும் இருந்தார்கள். ஓவியர் சிங்கமிருக்கும் அறையைத் திறந்தால், சிங்கத்துடன் சண்டையிட்டு வென்றால் இளவரசியைத் திருமணம் புரியலாம், ஒரு வேளை தோழி இருக்கும் அறையைத் திறந்தால், தோழியை மணக்க வேண்டும்.

இது ஏதும் தெரியாமல் ஓவியர் கம்பிகளால் அடைக்கப்பட்ட கூண்டில் இரண்டு அறைகளுக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்தார். கூண்டிற்கு வெளியே இடது புறம் மன்னன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே இளவரசி ஓவியரின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்க சைகை செய்துக் கொண்டிருந்தாள். ஓவியர் அறைகளின் முன் நின்று கொணடு, இளவரசியை ஒரு முறை பார்த்தார். இளவரசி சைகை செய்தாள். ஓவியரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, முன் சென்று அந்த அறையைத் திறந்தார்.

பி.கு: பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லும் பாட்டிகளின் மத்தியில், எனது பாட்டி சிறிது டெக்னிகல். சில மாதங்களுக்கு முன்பு ஒரு விடுகதையைச் சொல்லி பதில் தெரியாது என்று சொல்லி்ட்டாங்க. பதில் தெரியலேன்னா என்ன, ஒரு சிறுகதைக்காவது ஆகுதே.

Friday, September 25, 2009

£0.99 கடைகள்

சென்னையில் 'எது எடுத்தாலும் இரண்டு ரூபாய்' (கல்லாவைத் தவிர்த்து) கடைகளைப் பார்த்திராதவர்கள் சென்னை மார்க்கெட்டுகளில் நுழையாதவர்களாகத் தான் இருக்க முடியும். தக்காளி முதல் ஊட்டி ஆப்பிள் வரை அதன் விலைக்கேற்ப அளவோடு ஒரு கூடையில் போட்டு கூடை இரண்டு ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தனர். இப்போது அந்த இரண்டு ரூபாய் ஸ்ட்ராடஜி இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு ரூபாய் கடைகளில் கிடைக்கும் பொருட்களின் தரமும் குறைந்ததில்லை. விலை உயர்ந்தவை பத்து நாட்கள் தரமாக இருக்குமெனில் இரண்டு ரூபாய்க் கடைகளில் கிடைப்பவை எட்டு நாட்கள் தரமாகவே இருக்கும். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் கையில் ஐந்து ரூபாய் இருந்தாலும் சரி, ஐநூறு ரூபாய் இருந்தாலும் சரி, வேண்டியதை வாங்க முடியும்.

இதே போல் இந்த ஊரிலும் எது எடுத்தாலும் 99 பென்ஸ் என்று விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடையின் பெயரே 99p தான். மற்ற கடைகளில் விலை £4 என்றாலும் இங்கு வெறும் 99p தான். ப்ராண்டு சாக்லேட்டுகளும் இங்கு 99p தான். வேறு கடைகளில் டாப்லெரான் சாக்லேட் சுமார் இரண்டு பவுண்டாக இருந்தாலும் இங்கு வெறும் 99p. நான் வேறொரு கடையில் வாங்கிய ஷேம்பூவின் விலை ஐந்தரை பவுண்டு. அதையே சில நாட்கள் முன்பு அங்கு பார்க்க நேர்ந்தது. விலை தான் தெரியுமே 99p தான். சில நாட்களுக்கு முன்பு கேமராவைக் கூட வெறும் 99p தான் என்று விற்றுக் கொண்டிருந்தனர். அட நிஜ கேமரா தாங்க. ஆனால் யூஸ் அண்ட் த்ரோ. ஒரு ரோல் முழுக்க எடுத்து விட்டு தூக்கி எறியவேண்டுமாம்.

புதிதாக ஒரு வீடு அமைக்க வேண்டுமென்றால் இங்கு சென்றாலே போதும். அனைத்தும் வாங்கி விடலாம். அதற்காக டி.வி, வாஷிங் மிஷின், கப்பல், எலிகாப்டர் எல்லாம் கிடைக்காது. வீட்டிற்கு வெளியே போட வேண்டிய டோர் மேட்டில் ஆரம்பித்து, சமையலறையில் தேவைப் படும் தட்டு, கப், கத்திகள், நான்-ஸ்டிக் தவா, கின்னம், துணியைத் துவைக்க வாஷிங் பௌடர், சோப்பு, சீப்பு, கண்ணாடிகள், விளக்குகள், வீட்டை அலங்கரிக்க தேவைப்படும் அழகுப் பொருட்கள், ஷேவிங் ரேசர், ஷேவிங் க்ரீம், ஆஃப்டர் ஷேவ் லோஷன், வாசனைத் திரவங்கள், பேட்டரிகள் (சோனி உட்பட), கிட்சன் டிஷ்யூ, டாய்லெட் டிஷ்யூ போன்ற இன்னபிற வஸ்துக்கள் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் 99p கடைகள் தான். இவற்றின் தரம் உலகத்தரம்.

சென்ற மாதம் அருண் பாரிஸ் சுற்றிப் பார்க்கச் செல்வதற்கு முன் அவனது கேமராவிற்கு சில பேட்டரிகளை வாங்க வேண்டியிருந்தது. அவனது கேமராவை இயக்க மொத்தம் நான்கு பேட்டரிகள் தேவை. அவனிடம் ஏற்கனவே நான்கு ரீ-சார்ஜபிள் பேட்டரிகள் கைவசம் இருந்தன. அவை ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை இயங்கும் என்றான். எனவே ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட ஒரு நாள் மட்டுமே போராட முடியும். நான்கு நாட்கள் என்பதால் அவனுக்கு இன்னும் 12 பேட்டரிகள் தேவைப்பட்டது. மற்ற கடைகளில் வெறும் இரண்டு பேட்டரிகள் சுமார் ஐந்து பவுண்டாக இருக்கையில், அருண் 99p கடைக்குச் சென்றான். அங்கு 12 பேட்டரிகள் வெறும் 99p தான்.

வீட்டிற்கு வந்து ஒருமுறை அனைத்து பேட்டரிகளும் சோதனை செய்து விடலாம் என்று முடிவு செய்து நான்கு பேட்டரிகளைக் கேமராவிற்குள் திணித்தான். என்னை சிரிக்கும் படி சொல்லி, கேமராவைக் கிளிக்கினான். ஒன்றும் நடக்கவில்லை. கேமராவின் ஸ்க்ரீன் 'Change the battery pack' என்றது. பேட்டரியில் சுத்தமாக சார்ஜ் இல்லாத பட்சத்தில் கேமராவை ஆன் கூட செய்ய முடியாது. ஆனால் பேட்டரிகளை மாற்ற வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அந்த பேட்டரிகளில் விசயம் இருந்திருக்கிறது. உலகத்தரம்

பிறிதொரு நாளில் நான் எனது லேப் டாப்பில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த வேளையில் அருண் எனது முகத்தில் தண்ணீரை ஸ்ப்ரே செய்தான்.
'பச்ச தண்ணிய குடிச்சுட்டு பால் பாயாசம் குடிச்ச எபெக்ட் எதுக்கு டா?', என்றேன்
'என்ன தல சொல்றே?', என்றான்
'பின்ன தண்ணிய கொண்டு போய் எதுக்கு பாட்டில்ல ஊத்தி ஸ்ப்ரே பண்றே?'
'தல இது சென்ட், தல. வாசனை வரலே?'
'இல்லையே, எங்க மறுபடியும் ஸ்ப்ரே பண்ணு', என்றேன்.
இம்முறை நேராக மூக்கு மீதே அடித்து, 'வரலே?', என்று கேட்டான்.
'ம்ஹூம்ம், எங்க வாங்கினே?'
'இதோ நம்ம 99p கடையில தான்', என்றான்

சில நாட்களுக்கு முன் எனது ஆஃப்டர் ஷேவ் லோஷன் தீர்ந்து போன வேளையில் ஷேவ் செய்த பின்னர் கண்டிப்பாகத் தேவைப்பட்ட நிலையில், குளியலறையில் இருந்த ஒரு லோஷனைப் பார்த்தேன்.
'அருண், இந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் உன்னது தானே, நான் இன்னைக்குக் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறேன்', என்றேன்.
'யூஸ் பண்ணிக்கோ தல, ஆனா அது 99p கடையில வாங்கினது என்றான்.
நான் குழாயைத் திறந்தேன்.

நான் இது வரை 99p கடைகளில் பார்த்ததில் நிறைய பொருட்கள் 'Made in China' தான்.
இங்கு Accessorize என்றொரு கடை உண்டு. அங்கு சுமார் 60% சீனாவின் இறக்குமது, மீதமுள்ள 40% இந்தியாவிலிருந்து. இதில் 40%மான இந்தியாவின் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் தரத்தில் சீராகவே இருந்திருக்கிறது.

மெசேஜ் ரொம்ப சிம்பிள் தாங்க. உங்களுக்கு ஏற்கனவே புரிந்திருக்கும். சைனாவில் உச்சக்கட்ட ரீ-யூஸ் ஏற்கனவே பல முறை மெயில் பார்வார்டில் வந்திருக்கும். படிக்காதவர்களுக்கு இதோ இங்கே

Wednesday, September 16, 2009

என்ன பண்ணனும்னே தோனிருக்காது...

'என்ன தம்பி ஒரு மாசம் இருக்குமா?', என்றேன்
'என்னது தல', என்றான் அருண்.
'இன்டர்நெட் கட் ஆனத பத்தி சொல்றேன்'
'அது ஆவுது ஒரு ஒன்ற மாசம், ஆனா பாத்தியா தல எனக்கு எந்த பிரச்சனையுமே தெரியல'
'ம்ம்'
'நாளைக்கே டி.வி கனெக்ஷன் கட் ஆகி, போன் கட் ஆகிப் போனாலும் பழகிடும், என்ன சொல்றீங்க'
'அது சரி', என்று நான் ஜகா வாங்கிக் கொண்டேன்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அதாவது இன்டர்நெட் என்ற ஒரு வஸ்து எங்களிடம் இருந்த வேளை, அடுத்த வீட்டில் வெடிகுண்டே வெடித்தாலும் யூ-டியூபில் ஆயிரம் முறை பார்த்த லொள்ளு சபா மீண்டும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், வீட்டில் காலிங் பெல் அடித்தாலும் ஏர்டெல் சூப்பர் சிங்கரை டெக்-சதீஷில் அஜிஷ் பாடியதை எட்டாவது முறையாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த நாட்களில் நாங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவர்களுடைய லேப்டாப்புகளை திறந்து சேட்டுகளும், ஆர்குட்டுகளும், டெக் சதீஷில் புதிய படங்கள், யூ-டியூபில் விவேக் காமெடிகளும் பார்த்துக் கொண்டு வயிற்று பகுதியை மஸ்குலராக மாற்றி அமைத்துக் கொண்டிருந்தோம்.

சமைக்கலாம் என்று தோன்றுவதே எட்டரை மணிக்குத் தான். சமைக்கத் துவங்குவது ஒன்பது ஒன்பதரை மணிக்கு. சுமார் இரவு 11 மணிக்கு தான் நாங்கள் உண்பது. அதன் பின்னர் அனைத்தும் சுத்தம் செய்துவிட்டு தூங்கலாம் என நினைக்கும் போது அடுத்த நாள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். சரி 12:30 மணிக்காவது தூங்கலாம் என்றால், அப்போது தான் அருண், 'தில் படம் பாக்கலாம் தல', என்பான். அதை டெக் சதீஷில் தேடி பின்னர் மெகா வீடியோவில் பிடிப்பதற்குள் மணி ஒன்றாகிவிடும். மெகா வீடியோவில் 72 நிமிடத்திற்குப் பின்னர் 52 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படியாக இரண்டரை மணி படத்தை நான்கு மணி நேரம் பார்த்து ஐந்து மணிக்குத் தூங்குவது அருணின் வழக்கமாக இருந்து வந்தது.

ஒரு வியாழக்கிழமை இங்கு ஒரு சில ரயில்கள் ஓடாததால், இது தான் சமயம் என்று நான் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலக வேலை தாங்க, இன்டர்நெட் வாயிலாக. அப்போது தான் சில பல காரணங்களால் இன்டர்நெட் டாடா சொல்லிவிட்டு சென்றது. அன்றிரவு எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏழு மணிக்கு சமைக்க ஆரம்பித்து எட்டு எட்டரைக்கெல்லாம் எல்லா வேலைகளும் முடிவிற்கு வந்தது. எங்களுக்குக் கையும் ஆடவில்லை, காலும் ஓடவில்லை. அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அப்போது அருண் ஆரம்பித்தான். 'தல இன்னைக்கு நாம சீக்கிரம் தூங்கிடுவோம் பாரேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி டி.வி கூட இருக்காதுல்ல நிறைய வீட்டுல', என்று சொல்லிவிட்டு ஒரு சில விநாடிகள் யோசித்து மீண்டும் ஆரம்பித்தான், 'என்ன பண்ணனும்னே தோனிருக்காது, அதனால தான் தல, அப்போ ஜனத் தொகை அதிகமா இருந்திருக்கு', என்றான்.

Wednesday, September 02, 2009

இது ஒரு உண்மைக் கதை

உண்மையில் இது ஒரு உண்மைக் கதை அல்ல. ஆனால் தலைப்பில் 'இது ஒரு உண்மைக் கதை அல்ல' என்று சொல்லியிருந்தால் ஒரு வேளை இது ஒரு உண்மைக் கதை தானோ என்ற எண்ணம் உங்கள் மனதில் வரலாம். அந்த எண்ணத்தைத் தவிர்க்கத்தான் ஒரு பொய்யான கதையை உண்மைக் கதை என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது வரையில் நான் சொன்னது அனைத்தும் உண்மை தான். நான் சென்ற மார்ச் மாதம் சென்னை வந்த போது இது நடந்தது. நடந்தது என்று சொல்லும் போது மீண்டும் இது ஏதோ உண்மைக் கதையைப் போல் இருக்கிறது என்று எண்ண வேண்டாம். உண்மையில் இது எந்த செய்தித் தாளிலும் வரவில்லை என்பதால், நீங்கள் படிக்கும் போது இது ஒரு பொய்க் கதை என்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இனி கதை அல்ல நிஜம் (அல்ல கதை தான்). இந்தக் கதையைச் சொல்வதற்கு முன் சில பழைய நிகழ்வுகளும், இதில் வாழ்ந்த்திருக்கும் சில கதாப்பாத்திரங்களையும் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.

கதாப்பாத்திரங்களில் முக்கியமானவர்கள் நான், எனது நண்பன் இளங்கோ, இளங்கோவின் தம்பி சுகுமாரன். எங்களின் மூவரைத் தவிர்த்து இந்த பொய்க் கதையின் நிஜ வில்லன் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஹிட்லரைப் பார்த்திராதவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்க்கலாம். பார்த்து மடியலாம். இவரின் பெயர் சொல்லப் போவதில்லை. காரணம் இந்த செய்தி இது வரை செய்திகளில் வரவில்லை.

நானும் இளங்கோவும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சுகுமாரன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். இளங்கோ படிப்பில் கெட்டி. சுகுமாரன் அப்படி இல்லை. ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களைப் போல் கெட்ட பழக்கங்களும் அவனுக்கு அதிகம். ஆறாவது படிக்கும் போது தம் அடிக்க ஆரம்பித்தான். பத்தாவது படிக்கும் போது சாலை மறியல் வரை வந்தான். அன்று எங்களுக்கு ஏதோ அரையாண்டுப் பரிட்சை என்று நினைக்கிறேன். அரையாண்டு தானே என்று சரியாகப் படிக்கவும் இல்லை. அதே நாள் எங்கள் பள்ளியின் அருகில் இருக்கும் ஒரு மில்லில் ஒரு பிரச்சனை. இதனால் அங்கு சாலை மறியல். ஆரம்பத்தில் அது சாலை மறியலாகத் தான் இருந்தது. ஒரு இருபது நிமிடங்களில் அது பள்ளியிலும் வந்து சேர்ந்தது, சுகுமாரனின் உதவியால். அந்த அளவுக்கு சுகுமாரனுக்கு நண்பர்கள். எங்களுக்கு அன்று பரிட்சை எழுத முடியாமல் போகும் என்ற தான் தோன்றியது. படிக்கவும் இல்லை என்பதால், அதுவும் நல்லதாகவே பட்டது.

ஆனால் இதை எல்லாம் இரண்டே நிமிடங்களில் ஹிட்லர் தவுடு பொடியாக்கினார். சுகுமாரன் தொடர்ந்து நான்கு மணி நேரமாக எங்கும் தெரியவில்லை. நானும் இளங்கோவும் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்த போது எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது அந்த அதிர்ச்சி. சுகுமாரனை ஒரு அறையில் அடைத்து, அடித்து உதைத்ததில் அவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இதை அறிந்து நானும் இளங்கோவும் உடனே பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்தோம். சுகுமாரன் அன்றிலிருந்து இன்று வரை கோமாவில் இருக்கிறான். அன்று ஹிட்லரை வெட்டுவதற்காகச் சென்ற இளங்கோவை நானும் எனது மற்ற நண்பர்களும் தடுத்தோம். இதற்கான சமயம் வரும் போது இதைப் பற்றி ஏதேனும் செய்யலாம் என்று அன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம். இந்தச் சம்பவம் எந்தச் செய்தியிலும் வரவில்லை.

மார்ச் மாதத்தில் நான் சென்னைக்கு சென்ற போது அதற்கான சமயம் வந்தது. எங்கள் பள்ளியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்தவரின் பெயரும் இங்கு குறிப்பிடப்போவதில்லை. அவரை நான் இன்ஸ்பெக்டர் என்றே குறிப்பிடுகிறேன். அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையானவர் என்று நாங்கள் விசாரித்ததில் தெரியவந்தது. இன்று ஹிட்லரைப் பற்றி எல்லா விசயங்களும் அம்பலம் செய்வோம் என்று நான், இளங்கோ, மற்றும் ஒரு ஐந்து பேர் பள்ளிக்குச் சென்றோம்.

ஹிட்லர் இன்றும் மாறவில்லை. அதே தோற்றம் தான். தலையில் மட்டும் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. நானும் இளங்கோவும் மட்டும் பள்ளிக்கு உள்ளே சென்றோம். மற்ற ஐவர் பள்ளிக்கு வெளியே இருந்தனர். எந்நேரமும் எங்களுடன் தப்பிக்க வண்டியுடன் ஆயுத்தமாகவே இருந்தனர். அங்கு இன்ஸ்பெக்டரைப் பார்த்து நான் பேசும் போது ஹிட்லருக்குப் புரிந்துவிட்டது. இன்ஸ்பெக்டரிடம் என்னைப் பேச விடாமல் தடுத்தார். ஹிட்லரை அறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்றான் இளங்கோ. நான் இன்ஸ்பெக்டரிடம் அனைத்தும் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சுகுமாரனைப் பார்த்து விட்டு, மேலும் எங்களுடன் வந்த நண்பர்களிடமும் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டு ஹிட்லர் மீது ஒரு மெமோ அடித்து அவரின் மேலதிகாரிக்கு அனுப்பினார். ஹிட்லர் கைதாவது உறுதியாகிவிட்டது.

இப்போது, இனியும் ஹிட்லரைப் பழிவாங்க ஏதேனும் செய்ய நினைத்தால் செய்து விடு என்று இளங்கோவிடம் நான் சொல்ல, அவனோ, கைது செய்ததே நல்ல விசயம் தான். இது அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வருமே, அதுவே வெற்றி தான் என்றான். நான் இளங்கோவை அவனது வீட்டில் விட்டு விட்டு, வீடு திரும்பினேன். வழியில் பொன்னம்பலம் போல் ஒரு நான்கு பேர் என்னை மறித்தனர். அவர்களின் கைகளில் ஐந்து அடி நீளத்தில் உருட்டைக் கட்டைகள் இருந்தன. இனி இவர்களிடமிருந்து தப்பிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.

நடப்பது நடக்கட்டும் என்று நானும் அவர்களின் முன் நின்றேன். அவர்களில் ஒருவன் ஓடி வர, நான் எனது வலது கையை மடக்கி வுட்டேன் பாரு ஒன்னு, அருகில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அருண் மெத்தையிலிருந்து கீழே விழுந்தான். அதிகாலைக் கனவு, இது நடந்தால், 'அதிகாலைக் கனவு பலிக்கும்' என்ற கதை உண்மைக் கதை. இல்லையென்றாலும், உண்மை (நான் தாங்க) எழுதியதால், இது ஒரு உண்மைக் கதை தானே!

பி.கு: ஆதி இதை படிப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை படித்தால் அவருக்கு ஒரு எச்சரிக்கை, ஆதி, உங்களுடைய அடுத்த டாப் 10க்கு ஒரு டஃப் காம்பெடிஷன் இருக்கும் :-)

Wednesday, July 22, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 8

... இதுவரை

அந்த நெருப்புக் குழம்பு எங்களை நெருங்கிக் கொண்டே வந்தது. பின்னால் இருக்கும் கூட்டம் ஒவ்வொருவராக நெருப்பில் கருகி மாயமாகிக் கொண்டிருந்தனர். இதோ வந்து விட்டது நெருப்பு எங்கள் அருகில். கொத்துக் கொத்தாக அனைவரும் கருகிக் கொண்டிருக்கின்றனர். அவளும், அவனும் கூட அதே நெருப்பில் கருகியே விட்டனர். தேவதை முடிந்த வரையில் பறந்து இங்கும் அங்கும் அலைகிறாள். முடிந்தே விட்டது தேவதையின் கதையும். எனது கால்களைப் பற்றிக் கொண்டிருந்த க்ளீனரை நான் தூக்கி நெருப்பில் 'சாவு டா', என்று எறிந்தேன். அவனும் எறிந்து அவனது சாம்பலும் எறிந்து போயிருக்கும். கதவு திறந்துக் கொண்டது. நானும் மீண்டும் முழு மனிதானேன்.

'ஐய்யோ, எனக்கு பயமா இருக்குங்க', என்றாள் என்னவள்.
'என்ன டி கதை நல்லாயில்லயா?', அவளை வளைத்து என் மார்பு மீது போட்டுக் கொண்டு கேட்டேன்.
'நல்லா தான் இருக்கு, ஆனா ஹனிமூன்ல இப்படியா கதை சொல்லுவாங்க?'
'நல்ல முடிவோட தானே முடிச்சேன்', என்றேன் அவளை என்னுடன் இறுக்கிக் கொண்டு.
'ஏதேது, நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க சார், என்னை தான் கொன்னுடீங்களே'
'அடியே, எல்லாம் ஒரு கதை தானே டி', என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டேன்.
'சீ, சும்மா இரு டா', என்று பொய்யாக சினுங்கினாள்.
'சும்மா இருக்கணுமா? உண்மையாவா சொல்றே?'
'என்ன சாருக்கு மூட் அதிகமா இருக்கு போல, இன்னைக்கு?'
'ஓ ஒவ்வொரு நாளும் எவ்வளவு மூடுன்னு கணக்குவேற இருக்கா?'
'சரி பாவம் தாமுவ எதுக்கு கொன்னீங்க?'
'ஹ ஹ, கதைய திரில்லா கொண்டு போகத்தான்'

அப்போது எனது தொலைப்பேசி சினுங்கியது. தாமுவின் பெயர் அதில் தெரிந்தது.
'தாமு தான் டி கால் பண்றான், ஸ்பீக்கர்ல போடறேன், கேளு', என்று என்னவளின் தோளில் எனது வலது கையை போட்டு, பக்கத்தில் இழுத்துக் கொண்டேன்.

'சொல்லு தாமு', என்றேன்.
'சார் நான் கிளம்பிட்டேன், இதோ பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்'
'வாட்?'
'வந்திருவேன் சார், அது வரைக்கும் பாத்துக்கோங்க'
'என்ன தாமு சொல்றே?'
'நீங்க தானே சார் கால் பண்ணி, பேய் இருக்குன்னு சொன்னீங்க', என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

நான் என்னவளைப் பார்த்தேன்.
'நீங்க கால் பண்ணவே இல்லையே', என்றாள் அவள்.
'எனக்கும் புரியவே இல்லை', என்றேன்.

கதவு 'டொக் டொக் டொக்', என்றது.

முற்றும்.

Tuesday, July 21, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 7

... இதுவரை

இப்போது இரவு மணி ஒன்று. நாங்கள் அனைவரும் ஒன்று கூடினோம். அவர் இந்த மந்திர ரிசார்ட்டுற்குரிய வரைப் படம் வைத்திருந்தார். அதைக் காட்டி இப்போது நாம் எங்கிருக்கிறோம், தப்பிப்பதற்கான வழிகளும் விளக்கினார். எனது கவனம் முழுவதும் அவர் சொன்ன வழிகள் மீதே இருந்தது. அனைவரும் அவர் சொன்ன விஷயங்களைக் கிழிந்த காதுகளால் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் சொன்னதை வைத்துப் பார்த்தால் நாங்கள் ஏதோ குகைக்குள் இருக்கிறோம் என்பது மட்டும் புரிந்துக் கொண்டேன்.

'இந்த இடத்தை விட்டு நாம் செல்ல முயன்றால் நாம் வெடித்து சிதறிவிடுவோம். நாம் தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. அது வடக்கே உள்ள வழியில் நடந்துப் போனால், கடைசியில் வலம், இடம் என்று இடண்டு வழிகள் வரும். அதில் நாம் வலது பக்கம் செல்ல வேண்டும். அந்தக் கடைசியில் ஒரு மர்ம வாசல் உள்ளது. அந்த மர்ம வாசலைத் திறப்பதற்கான சாவி என்னிடம் உள்ளது', என்றார்.

நாங்கள் அனைவரும் அவர் காட்டிய சாவியைப் பார்த்தோம். அது ஏதோ மனித எலும்பினால் செய்யப் பட்டது போல் இருந்தது. கிட்டத்ட்ட ஒரு அடி நீலம் இருக்கும் அந்தச் சாவி. அவர் அந்தச் சாவியை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு எங்களுக்கான கட்டளைகளை விடுத்தார். அதன் படி நாங்கள் பன்னிரெண்டு பேரும் வெவ்வேறு திசைகளில் சென்று நிற்க வேண்டுமாம். கடிகார முட்கள் இருக்கும் கோணத்தில் நாங்கள் அனைவரும் இருக்க வேண்டும். பேய்கள் எங்களை அண்டாமல் இருக்க எங்கள் அனைவருக்கும் மந்திரக்கப் பட்ட ஒரு கயிற்றைக் கட்டினார். அவர் சொன்ன படி நான் பன்னிரெண்டாவது முள் இருக்கும் இடத்தில் நிற்கவேண்டும். வரைப்படத்தை ஒரு முறை பார்த்தேன். நான் நிற்கும் இடம் அந்த மர்ம வாசலின் அருகில் தான் இருந்தது.

'இந்தச் சாவியை நீ வைத்துக் கொள்', என்று அந்தச் சாவியை என்னிடத்தில் தந்தார்.
நான் மர்ம வாசலுக்கு அருகில் இருப்பதினால் அந்தச் சாவியை என்னிடம் தந்திருப்பார் என்பதை புரிந்துக் கொண்டேன்.
'இந்தச் சாவியை வைத்து மர்ம வாசலைத் திறந்தால் என்ன ஆகும்?', என்று நான் கேட்டேன்.
'நான் எனது யாகம் முடித்தப் பின்னர் நீ திறந்தால், இந்த இடம் முழுவதும் பஸ்பமாகி விடும், நாம் தப்பித்துவிடலாம்', என்றார்.
'இல்லேன்னா?'
'நீ வெடித்து சிதறிப் போவாய்', என்றார் சிவந்த கண்களுடன்.
நான் அமைதியானேன்.

'சரியாக ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் பேய்களின் பலம் குறைந்து இருக்கும். அப்போது நாம் அனைவரும் வெளியே சென்று அவரவர்களுக்கான இடங்களில் காவல் நிற்க வேண்டும்', என்றார்.
இனி எனக்கான சுய முயற்சி தேவையற்றது என்று தெரிந்துக் கொண்டதால், நான் அவர் சொன்னதை கேட்டு நடந்துக் கொண்டேன்.

'நான் யாகத்தை முடித்து விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு மர்ம வாசலுக்கு வந்து விடுகிறேன்', என்றார்.
'சரி, நீங்கள் அனைவரும் வந்தவுடன் என்னிடம் இருக்கும் சாவியால் நான் கதவைத் திறந்துவிடுகிறேன்', என்றேன்.

இரவு ஒன்றரை மணி:
அவர் சொன்னதைப் போல் நாங்கள் எங்கள் மணிக்கட்டில் மந்திரக்கப்பட்ட கயிற்றைக் கட்டிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் நிற்கச் சென்றோம். எனது கையில் அவர் தந்த எலும்பினால் ஆன சாவியும் இருந்தது. அவர் தன்னுடன் யாகத்துக்குத் தேவையானவற்றை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டார்.

நாங்கள் அனைவரும் பிரிந்தோம். ஒன்று, பதினொன்று மணி கோணங்களில் நிற்பவர்கள் என்னுடன் வந்தார்கள். அருகில் சென்ற பின் அவர்களிடமிருந்தும் நான் பிரிந்து நான் நிற்க வேண்டிய இடத்திற்கு தனியாக வந்து சேர்ந்தேன். இந்த இடத்தின் வரைப் படம் என் கண்களிலேயே இருந்தது. அதன் படி அங்கு மர்ம வாசலைப் போல் ஒன்றும் இருக்கவில்லை. சாவியைப் போட ஒரு துவாரமும் இல்லை. ஒருவேளை இது மர்ம வாசல் என்பதால், யாகம் முடித்தப் பின்னர் தான் பூட்டின் துவாரம் கூட தெரியவரும் போல் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

சுமார் பத்து நிமிடங்களாகியிருக்கும். யாகம் முடிந்த பாடில்லை. மணி இரண்டாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் தான் இருக்கிறது. நான் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். மந்திர வாசலில் துவாரம் மெல்ல காட்சியளித்துக் கொண்டிருந்தது. தப்பித்தல் இப்போது இன்னும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருந்தது. நான் இருக்கும் இடத்திற்கு வர இதோ இந்த ஒரு வழி தான் இருக்கிறது.

இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது. பேய்களின் தூக்கம் முடியப் போகிறது. அனால் இன்னும் இவர்கள் வரவில்லை.
அதோ அங்கே யாரோ வருகிறார்கள் என்பது தெரிகிறது. ஒருவர் மட்டுமே வருகிறார், மற்றவர்கள் எங்கே என்று தெரியவில்லை. ஒருவராக இருந்தால் இவர் க்ளீனர் இல்லை. வேறு யாரோ வருகிறார்களா? அவர் தூரத்திலிருந்து நடந்து வந்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் ஏகப்பட்ட சந்தேகங்கள் மீண்டும் எட்டிப் பார்த்தது. நாங்கள் ஏன் வெவ்வேறு திசைகளில் நிற்க வேண்டும்? அவரிடம் சாவி இருக்கும் பட்சத்தில் ஏன் இது வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்? நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்தார். அவர் அதே மூன்றடி க்ளீனர் தான்.

'மத்தவங்க எல்லாம் எங்க?', என்று கேட்டேன்.
'அவர்கள் இனி வரப் போவதில்லை', என்றார்.
எனது சந்தேகங்கள் வலுத்துன. இவர் அனைவரையும் கொன்று இவர் மேலும் சக்திப் பெற்று வருகிறார். மேலும் இவரது அடுத்த கொலை நானாகத் தான் இருக்கப் போகிறேன், என்பது எனக்கு தெரிந்து விட்டது.
'ஓ, நீயும் போலி தானா?', என்றேன்.
'தெரிந்துவிட்டது அல்லவா, இனியும் தப்பிக்க முயற்சிக்காதே', என்றார்.

இரண்டு நிமிடங்களில் தான் இன்னும் இருக்கிறது. பேய்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும்.

'என்னை நீ அவ்வளவு சுலபமாக கொல்ல முடியாது', என்றேன், கையில் சாவியுடன்.
'ஹா ஹா, நீ வைத்திருக்கும் சாவி போலி, உன்னை கொன்று, என்னிடம் இருக்கும் உண்மையான சாவியால் திறந்து நான் வெளியே செல்லப் போகிறேன்', என்றார்.
நான் சிரித்துக் கொண்டே, 'ஹலோ தம்பி, முளைச்சு மூனு இல விடல, என்னய பாத்தா என்ன கிண்டலா இருக்கா?', என்று எனது வலது காலால் அவரது கழுத்தில் உதைத்தேன்.

அதோ அவர் பத்தடி தூரத்தில் விழுந்தார். அவரிடம் இருந்த பெட்டி தூரத்தில் விழுந்தது. பெட்டி உடைந்து சாவி வெளியே விழுந்தது. அவர் ஓடிச் சென்று அந்தச் சாவியை எடுக்க முயன்றார். நான் இங்கிருந்தே தாவி, அவர் மீது விழுந்தேன். அவரை எனது இடது கையால் தூக்கி எறிந்தேன்.

பேய்கள் முழிக்க இன்னும் ஒரே நிமிடம் தான் இருக்கிறது.

அவர் மீண்டும் என்னிடம் வந்து சாவியை எடுத்துக் கொண்டார். எனக்கு ஏனோ இவனை கொன்று விடுவது நல்லது என தோன்றியது. எனது காலால் அவனது கழுத்தை மிதித்தேன். அவன் சிரித்துக் கொண்டே, அவனது வலது பக்கம் பார்த்தான். தூரத்தில் பலர் பறந்து வருவதை பார்த்தேன். இனி இவனிடம் சண்டை போடுவதற்கு நேரம் இல்லை.

முப்பது வினாடிகள் மட்டுமே இருக்கிறது இப்போது.

அவர் எனது கால்களை பிடித்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிப் போடவும் முடியவில்லை. இதோ அந்தப் பேய்க் கூட்டம் என்னை நெருங்கிவிட்டனர். நான் அவரை காலால் இழுத்துக் கொண்டு மர்ம வாசலுக்கு நடக்க முயன்றேன்.

இரண்டு வினாடிகள் மட்டுமே.
பேயக்ள் கீழே இறங்கி விட்டு, வந்து சேர்ந்தனர். நான் மர்ம வாசலில் இருக்கும் துவாரத்தின் அருகே நின்றேன். உண்மையான சாவியை பூட்டில் திருகி பூட்டைத் திறந்தேன்.

இப்போது மணி இரண்டு.
எங்கேயோ தூரத்திலிருந்து நெருப்புக் குழம்பு எங்களை நோக்கி வர ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் முடியும்...

Monday, July 20, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 6

...இதுவரை

யோசித்து பார்த்து முடிவெடுக்கும் சமயம் இல்லை இது. ஐம்பது பேரிடமிருந்து தப்பிக்க வேண்டிய சமயம். எனது பின்னால் இருந்த கூட்டம் என்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். நான் உடனே எனது வலது பக்கம் திரும்பி ஓட, தாமுவாகிய அவன் என்னைப் பிடிக்க முயன்று அவனிடமிருந்து தப்பித்து நான் ஓட ஆரம்பித்தேன். அங்கிருந்த ஏதாவது ஒரு அறையில் நுழைந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றால் அங்கிருக்கும் அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையும் தட்டிப் பார்த்து விட்டு திறக்காமலிருக்க, தாமுவும், அவளும், என்னை துறத்த, அவர்களின் பின் ஐம்பது பேர் வந்துக் கொண்டிருந்தனர்.

அதோ தெரிகிறது ஒரு அறை, இல்லை இல்லை அது அறை இல்லை. ஏதோ ஒரு கோ-டவுன் போல் காட்சி அளித்தது. அதில் ஏதோ மூட்டைகள் மட்டுமே திணிக்கும் அளவிற்குத் தான் கதவு இருந்தது. ஆனால் அது திறந்து தான் இருக்கிறது. என்னால் அதில் புகுந்து போய் விட முடியும். எனது வேகத்தை முடிந்த வரையில் கூட்டினேன். பின்னால் வருபவர்களின் வேகமும் இப்போது கூடியிருக்கிறது. அந்த அறை இதோ இருபது அடி தூரம் தான். பின்னால் என்னை துரத்துபவர்களுக்கும் எனக்கும் அதே இருபது அடி தூரம் தான். வேகத்தைக் கூட்டினால் தவிர என்னால் அங்கு நின்று குனிந்து அந்த பொந்துக்குள் சென்று விட முடியாது. இதோ வந்துவிட்டேன். இன்னொரு ஐந்து அடி தான். எனது வேகத்தை குறைத்து கீழே குனியும் போது தேவதை என் முன் வந்து நின்றாள். கண் வீங்கி, காது தொங்குகிறது தேவதைக்கும். அவளது சிங்கப் பற்கள் வளர்ந்து இருக்கிறது. நான் நின்றுவிட்டேன்.

பின்னால் அந்த கூட்டத்துடன் படை எடுத்து அவளும், அவனும் வந்து சேந்தனர். தேவதை எனது வயிற்றைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஐயோ, முடிந்து விட்டதா? இன்னும் ஒரு சில வினாடிகளில் நானும் இவர்களில் ஒருவனாவேன். பிரிதொரு சமயம் நானும் இவர்களோடு சேர்ந்து இங்கு தங்க வருபவர்களை துரத்தப்போகிறேன். அதை நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அந்த சிறிய கதவின் துவாரம் வழியாக இரு கண்கள் எனக்குத் தெரிந்தன. எனக்குத் தெரிந்த கண்கள் மற்றவர்களும் உணர்ந்தனர். தேவதை வலதோரமாகப் பறந்து வவ்வாலைப் போல் ஒரு மரக் கிளையில் தொங்க ஆரம்பித்தாள். அவளும், அவனும் மேலும் என் பின் இருந்த கூட்டம் அனைவரும் பறந்து அருகிலிருந்த மரக்கிளைகளில் தொங்கினர். இந்த மரக்கிளைகள் எல்லாம் நான் நேற்று வரை பார்த்ததில்லை. இவை இப்போது புதிதாக முளைத்தது போல் இருந்தது. அந்தக் கண்கள் இப்போது என்னை பார்த்துக் கொண்டிருந்தன.

இவை அனைத்தும் என்ன? நான் இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தக் கண்களைக் கண்டு ஓட வேண்டுமா? இல்லை இந்தக் கண்களிடம் இருந்தால் தான் தேவதையிடமிருந்து தப்பிக்க முடியுமா? இந்தக் கண்களைக் கண்டு தான் அனைவரும் ஓடி விட்டனர். ஆக இந்த கண்களிடம் இருந்தால் நான் தேவதையிடமிருந்து தப்பிக்க முடியும், ஆனால் இந்தக் கண்கள் என்னை ஒன்றும் செய்யாதா? இத்தனைக் கேள்விகள், ஒரு கேள்விக்கும் என்னிடத்தில் பதில் இல்லை. இனி சுயமாக யோசித்து எந்த முடிவிற்கும் வரும் அளவிற்கு மனதில் திடமும் இல்லை, நேரமும் இல்லை. நான் அங்கிருந்து ஓட ஆரம்பித்ததும், தேவதை தன் படையுடன் கீழே இறங்கினாள். நான் மீண்டும் அந்தக் கண்களிருக்கும் கதவருகே சென்றேன். மீண்டும் தேவதைக் கூட்டம் பறந்துச் சென்றது. அதே சமயம் அந்த அறையிலிருந்து ஒரு கை வெளியே வந்து என்னை உள்ளிழுத்துச் சென்றது.

அறையின் கதவு அடைக்கப்பட்டது. உள்ளே இருட்டைத் தவிர வேறொன்றும் கண்களுக்குத் தெரியவில்லை. மௌனத்தைத் தவிர வேறொன்றும் காதுகளுக்குக் கேட்கவில்லை. அறையின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதினால் என்னால் நிற்கவும் முடியவில்லை. நான் தவழ்ந்துக் கொண்டே அந்தக் கண்களை தொடர்ந்துச் சென்றேன். இது வேறு உலகம் போல் உணர்ந்தேன். இரண்டு நிமிடங்கள் தவழ்ந்திருப்பேன். அதோ அங்கே வெளிச்சம் தெரிகிறது. அறையின் உயரம் இப்போது அதிகரித்தது. இப்போது என்னால் நிற்கவும் முடிகிறது. வெளிச்சம் இன்னும் சற்றுக் கூட, அந்தக் கண்களைச் சுற்றி இருக்கும் மனிதனைப் பார்த்தேன். அவன் அதே மூன்றடி க்ளீனர் தான்.

'நீயா?... நீங்களா?', என்றேன்.
'கவலைப் படவேண்டாம், இப்பொழுது நீ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாய்', என்றான்.
'இது எல்லாம் என்னது? நான் எங்க இருக்கேன்? நீங்க என்ன பண்றீங்க இங்க?'
'இது கிட்டத்தட்ட வேறு உலகம். இதிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதில்லை'
நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். க்ளீனர் நடந்தார். நானும் அவரைத் தொடர்ந்தேன். அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றோம். அங்கு ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள், கணக்கெடுக்க முடியாத அளவிற்கு மனித உடல்கள் இருந்தன. அங்கிருந்த அனைவருக்கும் என்னைப் போலவே முகத்தில் காயங்கள். இறந்த உடல்களின் அழுகிய நிலை வெவ்வேறாக இருந்தன. சில உடல்களில் வெறும் எலும்புக் கூண்டுகள் மட்டுமே இருந்தன.

'இங்க இருந்து எப்படி தப்பிக்கிறது. இவங்க எல்லாம் யாரு?'
'இவர்கள் அனைவரும் உன்னைப் போல் நான் காப்பாற்றியவர்கள் தான். மொத்தம் பதின்முன்று பேர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தப்பிக்க முடியும். இப்போது உன்னுடன் சேர்த்து பன்னிரண்டு பேர், என்னையும் சேர்த்து பதின்மூன்று பேர்', என்றார்.
'இங்க இத்தனை பேரு இறந்துகிடக்கறாங்க, இவங்க உயிரோடு இருக்கும் போது முயற்சி பண்ணலியா?'
'ஓரிரு முறை தப்பிக்க முயற்சி செய்யும் போது இவர்களில் சிலர் இறந்து விட்டனர்', என்றார்.
'அப்போ மத்த உடல்கள்?'
'அவர்கள் வெளியே போக முயற்சிக்கு என்னுடன் ஒத்துழைப்பு தராததால் நான் கொன்றுவிட்டேன்', என்றார்.
நான் இதற்கு பயப்படவில்லை. இப்போது எனது நம்பிக்கை அளவுகோளின் முள் மேலே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
'எப்போ தப்பிக்கலாம்?', என்றேன்.

இனி தாக்குதல் வேட்டை தொடரும்...

Sunday, July 19, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 5

...இதுவரை

என்னவளின் மரணத்திற்கு அழ இது நேரமில்லை என்பதும், தாமுவைக் காப்பாற்றவதன் மூலமாகத் தான் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே நான் உணர்ந்திருந்த சமயம் இது. என்னவளின் தலையை கீழே போட்டுவிட்டு நான் குளியலறையின் வெளியே ஓடிவந்து, மீண்டுமொரு முறை என்னவளோடு இருந்த மெத்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கதவைத் திறந்தேன். கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது.

எனது 9mm பிஸ்டலால் பூட்டிய கதவை சுட்டு, பூட்டை உடைத்து வெளியே வந்தேன். இருட்டில் எனக்கு ஒன்றும் சரியாகத் தென்படவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். என்னவள் இன்னேரம் தாமுவை பார்த்திருப்பாள். ஆனால் அவன் இன்னும் உயிரோடு தான் இருப்பானா என்பது கேள்விக்குறி தான். என்னவள் எப்போது, எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்பது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

முதலில் கதவு தட்டும் போது என்னவள் குளியலறைக்கு ஆடையுடன் ஓடினாள். அப்போது க்ளீனர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கும் போது, என்னவளின் உயிர் போயிருக்கிறது. இதை நினைக்கும் போதே என உயிர் ஒரு கனம் வெளியே சென்று திரும்பி வந்தது. அதன் பின் குளியலறையிலிருந்து 'நான் ரெடி' என்று சொல்லி வெளியே வந்தது என்னவள் இல்லை. பின்னர் நடுவே கானாமல் போனதும், பிறகு வந்ததும் என்னவள் இல்லை.

சரி இனி அதைப் பற்றி யோசிப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது முடிவாகியது. தாமு எங்கே என்பதை தேட முற்பட்டேன். இருட்டில் நான் எங்கு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பது கூட எனக்குச் சரியாகத் தெரியவில்லை. போகும் வழியெங்கும் ஏதேதோ தடங்கல்கள் இருந்துக் கொண்டே தான் இருந்தது. எதை மிதிக்கிறேன், எதை இடிக்கிறேன் என்று கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். அதோ இருக்கிறது தாமுவின் கார். ஆனால் தாமு அங்கு இல்லை. அவன் கண்டிப்பாக இப்போது என்னவளிடம்... இல்லை இல்லை அவளிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவள் என்று தான் இனி அவளைச் சொல்ல வேண்டும். மூளை முழுவதும் பயம் சூழ்ந்துக் கொண்டிருந்தாலும் ஏனோ என்னவளைக் கொலை செய்த அவளை ஒழித்துவிட்டுத் தான் போகவேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

நான் லாபியில் ஓடிக் கொண்டிருந்த போது என்னைத் தவிர இன்னொருவர் ஓடும் சத்தம் கேட்பதை நான் உணர்ந்தேன். ஐயோ, அது தாமுவாகத் தான் இருக்க வேண்டும். அவள் தாமுவைத் துரத்துகிறாள். இப்போது தாமுவின் கார் இக்னைட் ஆனது. அதோ நான் அவனை காரில் பார்க்கிறேன். அவன் வெளியே போகிறான். என்னை இங்கேயே விட்டுப் போகிறான். கார் வெளியே சென்ற அந்த வினாடி கார் வெடித்து சிதறியது. தாமுவும் என்னை விட்டு போய்விட்டான். இப்போது விளக்குகள் எல்லாம் மிண்டும் பிரகாசமாய். என் முன்னால் ரிசப்ஷன். அதே தேவதை ரிசப்ஷனிஸ்டாக இருந்தாள். அவளிடம் நான் ஓடிச் சென்றேன்.

அவளின் பின்னால் இருந்தால் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து என்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேனா? எனது முகம் முழுவதும் கொழ கொழவென்று இரத்தம் படிந்திருந்தது. சட்டை முழுவதும் இரத்தக் கறை. எனது இடது கண் வீங்கியிருந்தது. வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. நான் ஓடி வரும் போது இருந்த தடங்கல்களை யோசித்துப் பார்த்தேன். பல இடங்களில் நான் தடுக்கி விழுந்து, பல முறை என் மீது ஏதோ விழுந்தது எல்லாம் என் நினைவிற்கு வந்தது. தாமுவைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று நினைத்ததில் என்னை நான் கவனிக்க தவறவிட்டேன்.

தேவதை என்னைப் பார்த்து, 'என்ன சார் என்ன ஆச்சு?' என்றாள்.
என்ன ஆச்சா? இவை அனைத்தும் ஒருவேளை எனக்கு மட்டும் தானா நடந்தது? இவள் நடந்தவை எல்லாம் அறிந்திருப்பாளா? இவளுக்கு என் முகத்தில் இருக்கும் காயங்கள் தெரிகிறதா? இல்லை எனக்கு மட்டும் தானா இதுவும்?
'என்ன சார் ஆச்சு? இவ்வளவு ரத்தம்?', என்றாள்.
ஓ, இவளுக்கு என்னுடைய காயங்கள தெரிகிறது. ஆனால் இது வரைக்கும் நடந்த பேய் விஷயங்கள் தெரிந்திருக்காதா? சரி நமக்கு உதவி தான் வேண்டும்.
'மேடம், எனக்கு ஒரு உதவி வேணும்'
'சொல்லுங்க சார், எனிதிங்'
'நான் உடனே சென்னைக்கு கிளம்பணும்', என்றேன்.
'அது முடியாது சார்', என்றாள்.
எனக்குப் புரியவில்லை. அடுத்த நொடி அவளின் வலது பக்கத்தில் இருந்து என்னவளைப் போல் இருந்த அவள் வெளியே வந்தாள். அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். தேவதையின் இடது பக்கத்திலிருந்து தாமு வெளியே வந்தான்.
ஓ தாமு சாகவில்லையா? பின், காரில் இருந்தவன் யார்? ஒரு வேளை இறந்தவர்கள் மீண்டும் இப்படி வருகிறார்களா? இப்போது லேசாக புரிந்தது என்னவளைப் போல் அவள் எப்படி என்றும், தாமுவைப் போல் அவன் எப்படி என்றும்.

இனி ஓட்டம் மட்டுமே நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். உடனே பின்னால் திரும்பி ஓட ஆயத்தமானேன். எனக்கான அதிர்ச்சிக்கு எங்குமே பஞ்சம் இல்லை. எனது முன்னால் கிட்டத்தட்ட ஐம்பது பேர் முகத்தில் இரத்த காயங்களுடன் இருந்தனர். அனைவருக்கும் இடது கண் வீங்கியிருந்தது, வலது காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர்கள் அனைவருக்கும் இடது பக்கத்தில் வயிறு வெட்டி எடுக்கப் பட்டிருந்தது. நான் எனது வயிற்றை தொட்டுப் பார்த்தேன். இல்லை நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். அனைவரும் இதற்கு முன்னர் இங்கு இறந்தவர்களாகத் தான் இருந்திருக்கக்கூடும். எனது இரத்த காயங்களுக்கு இவர்கள் தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

நான் மீண்டும் திரும்பி தேவதையைப் பார்த்தேன். இப்போது தேவதைக்கும், அவளுக்கும், அவனுக்கும் அதே காயங்கள் இருந்தன. அவள் தனது சிங்கப் பற்களை காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தாள். இம்முறை அவை அழகாக இருந்திருக்கவில்லை.

எனக்கு முன், தேவதை, அவள், அவன். எனக்கு பின்னால் சுமார் ஐம்பது பேர். எனது நம்பிக்கை அளவுகோளின் முள் இப்போது எங்கேயோ அதலபாதாளத்தில் இருக்கிறது.

வேட்டை, பழிவாங்குதல், தப்பித்தல், இம்மூன்றில் ஒன்று கூடிய விரைவில்...

Saturday, July 18, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 4

...இதுவரை

நான் சுற்றும் முற்றும் பார்த்தும் என்னவள் அங்கே இல்லை. உள்ளே இருக்கும் இன்னொரு அறைக்குச் சென்று பார்த்து, அங்கும் அவள் இல்லை. குளியலறையிலும் தேடிப் பார்த்துவிட்டேன். அங்கு இருந்த சோப்பு பெட்டி கீழே விழுந்திருந்தது. ஒரு வேளை அது அவள் ஆடை அணியும் போது கீழே விழுந்திருக்கலாம். இது விளையாடும் நேரம் இல்லை என்பது அவளுக்கு ஏன் புரியவில்லை. நான் பார்த்த காட்சிகளை அவள் பார்த்திருந்தால் அவள் என்னை விட்டு எங்கும் போயிருக்கமாட்டாள்.

'அடியே...', நான் அலறியது எனக்கு மட்டுமே பல முறை கேட்டது போலும், யாருமே பதில் சொன்ன பாடில்லை. எனக்குள் இப்போது பயம் எட்டிப் பார்த்தது. எனது கைகள் உதற ஆரம்பின. எனது தொலைப் பேசியை எடுத்து மீண்டும் ஒரு முறை நான் தாமுவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவன் கிளம்பி ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அவன் வழியின் நடுவே இருக்கலாம்.
'போன எடுடா...' அவன் தொலைப்பேசியை எடுக்கவே இல்லை. நான் குளியலறையிலிருந்து வெளியே வந்து, அங்கிருந்து மெத்தையிருந்த அறைக்கு வந்தேன். எனது தொலைப்பேசி சினுங்கி, குறுஞ்செய்தி வந்திருப்பதை எனக்கு அறிவித்தது.
'நான் வந்துட்டேன்', என்றது அந்தக் குறுஞ்செய்தி. தாமு வந்துவிட்டான் போல் இருக்கிறது.

நான் என்னவளின் தொலைப்பேசிக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று நினைத்து அவளது எண்ணைச் சுற்றினேன். அவளது தொலைப்பேசி மெத்தையின் மீதே தான் அலறிக்கொண்ட்டிருந்தது. அவள் எப்போதும் தன்னுடன் தொலைப்பேசியை வைத்திருக்கும் பழக்கம் அவளிடத்தில் இல்லை. அழைப்பைத் துண்டித்ததும், எனது தொலைப்பேசி ஆஃப் ஆகியது. எனது தொலைப்பேசி ஆன் ஆகவே இல்லை. அடுத்த வினாடி அறையின் விளக்குகள் அனைத்தும் அனைந்து விட்டன.

வெளியே சென்றிருப்பாளா என்ற சந்தேகம் ஏனோ எனக்கு இதுவரை வரவில்லை. பார்த்துவிடலாம் என்று நினைத்து கதவருகே சென்ற போது ஜன்னல்கள் தட்டப்பட்டது. அதே விரல்கள் வந்த ஜன்னல் தான். ஒரு பக்கம் கதவு இன்னொரு பக்கம் ஜன்னல். மற்றொரு பக்கம் என்னவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் எனக்குக் கச்சிதமாகப் புரிந்துவிட்டது. இதிலுள்ள முடிச்சுகளை அவிழ்த்து, கடைசியில் முடியாத பட்சத்தில், என்னவளைக் கண்டுபிடித்து இங்கிருந்து தப்பிக்க வேண்டும். நான் இம்முறை கதவைத் திறப்பதற்கு பதிலாக ஜன்னலருகே சென்றேன். ஜன்னல் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தது. நான் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். என் கண்களுக்கு எட்டிய வரையில் எதுவுமே தென்படவில்லை, ஏதோ ஒரு மயான பூமியில் இருப்பது போல் ஒரு உணர்வு. ஜன்னலைத் தட்டியது யாரென்று தெரியவில்லை. அங்கு யாரும் இல்லை. சரி இனி கதவைத் திறந்து என்னவளைத் தேடும் பணியில் இறங்க வேண்டும் என்பது நிச்சயமானது. நான் கதவருகே வந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஏனோ ஜன்னலைத் தட்டியது யார் என்று இன்னும் குழப்பமாகவேத் தான் இருந்தது. அங்கு யாருமே இல்லாத பட்சத்தில் யார் கதவைத் தட்டியிருக்கக் கூடும்? தட்டிவிட்டு ஒளிந்திருப்பார்களோ. அவ்வளவு வேகமாகவா? நான் ஜன்னலைத் திறந்த அந்த ஒரு வினாடிக்கு முன்பும் ஜன்னல் தட்டப்பட்டது. அந்த ஒரு வினாடிக்குள் தப்பிக்க முடியாது. ஒன்றும் புரியாமல் நான் கதவின் தாழ் மட்டுமே திறந்தேன். ஐயோ, ஜன்ன்லைத் தட்டியவன் ஒளிந்துக் கொள்ளவில்லை, அங்கே தான் இருந்திருக்க வேண்டும். ஜன்னலின் அருகே ஓடினேன், மீண்டும் ஜன்னலைத் திறந்து கீழே எட்டிப் பார்த்தேன். அதே மூன்றடி க்ளீனர் மீண்டும் கீழே விழுந்திருந்தான்.

நான் ஜன்னலைத் திறந்த போது கீழே எட்டிப் பார்க்காமல் போனதால் இவனை நான் கவனிக்கவில்லை. இப்போது ஏதோ எனக்கு புரிந்துவிட்டது போல் உணர்ந்தேன். இவன் எங்களைக் காப்பாற்ற வருகிறான். இனி யோசிப்பது நேர விரயம். உடனே தாவி கதவைத் திறக்கப் போனேன். கதவு மீண்டும் 'டொக் டொக் டொக்' என்றது. கதவின் தாழ் திறந்துவிட்டிருந்ததால், கதவு மெல்ல திறந்துக் கொண்டது. நான் பின் வாங்கினேன்.

கதவு முழுவதாக திறந்து கொண்டதே தவிர யாரும் அங்கு இல்லை. நான் சிறிது வலது பக்கமாக வந்து வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே என்னவள் பயத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
'எங்க டீ போனே? என்ன ஆச்சு', என்றேன்.
'நான் இங்க தாங்க இருந்தேன், நீங்க தான் காணாம போயிட்டீங்க'
'என்ன உளர்றே?', என்றேன்
'நீங்க இல்லேன்னு தான் நான் வெளியே தேடிப் பார்த்தேன்'
'சரி என் கூடவே இரு, நாம தப்பிக்கணும், தப்பிச்சுடலாம்'
'நான் வெளியே போனப்போ, அந்த மூனடி ஆளப் பார்த்தேன். அவன் இன்னும் உயிரோடத் தான் இருக்கான்.'
'தெரியும் டி, அவன் நம்மள காப்பாத்த வந்திருக்கான்'
'இல்லேங்க. இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் அவன் தாங்க காரணம்'
'வாட்???'
'நிச்சயமா தெரியுங்க, அவன் அடுத்த முறை நீங்க பார்த்த அவன் கிட்ட இருந்து நாம் தப்பிக்கணும்', என்றாள்.
'எனக்கென்னமோ அவன் நல்லவன்னு தான் தோனுது மா'
'சரி விடுங்க. தாமு எங்கே? இன்னும் வரலியா?'
'இல்ல. ஆனா இதோ இப்போ வந்திருக்கணும்'
'சரி நான் உள்ளேயே இருக்கேன், நீங்க போய் பார்த்துட்டு வர்றீங்களா?'
'சரி பத்திரம், உள்ளே பூட்டிக்கோ, இதோ வந்திடுறேன்'
'சரிங்க', என்றாள்

எனக்கு இதில் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருப்பதைப் போலவே உணர்ந்துக் கொண்டிருந்தேன். எனக்கு அந்த மூன்றடி மனிதன் உதவும் நோக்கத்துடன் தான் வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அவன் கண்டிப்பாக எனக்கு இன்னுமொரு தடயம் தருவான் என்ற நம்பிக்கை இருந்தது.
'ஹே, நான் இந்த ரூம்ல இருக்கேன், நீ போய் தாமுவ அழைச்சுட்டு வர்றீயா?', என்றேன்
'சரிங்க, உள்ளேயே இருங்க, நான் அழைச்சுட்டு வந்துடுறேன்', என்றாள்.
அதோ வந்துவிட்டான் தாமு. அவனது கார் இப்போது வெளியில் பார்க் செய்துக் கொண்டிருந்தான். நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறான்.

என்னவள் வெளியே சென்றாள். நான் எனது 9 mm பிஸ்டலை எடுத்து என்னுடன் வைத்துக் கொண்டேன். இப்போது மீண்டும் 'டொக் டொக் டொக்', என்ற சத்தம்.
இம்முறை இது ஜன்னலும் இல்லை, கதவும் இல்லை. அறைக்கு உள்ளே எங்கிருந்தோ.
'இதோ வர்றேன் டா', என்று நினைத்து உள்ளே சென்றேன்.

அந்தச் சத்தம் என்னை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றது. நானும் சத்தம் வரும் திசையில் நடந்தேன். சத்தம் என்னைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றது. நான் குளியலறையைத் திறந்ததும் சத்தம் நின்றது. அங்கிருந்த கண்ணாடிகளில் எனக்கு நான் மட்டுமே தெரிந்தேன். வேறு யாரும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன். அங்கிருந்து வெளியே வரும் போது என் மீது ஒரு துளி திரவம் வழிந்தது. மேலே பார்த்து ஷவரில் இருந்து நீர் கசிந்ததைப் பார்த்து ஷவரை முழுவதுமாக மூடினேன். இன்னொரு துளி. விளக்குகள் இல்லாததால், என்னால் ஷவரை சரியாகப் பார்க்க முடியவில்லை.

என்மீது விழுந்த துளி, கொழ கொழவென்று இருந்தது. ஷவரில் ஒரு விரலால் மீட்டி, தடவிப் பார்த்தேன். அங்கிருந்து வரும் நீர் கொழ கொழவென்று இருக்கவில்லை. எனது கண்கள் ஷவருக்கு ஒரு அடி மேல் சென்றது. தீடீரென்று, மேலிருந்து ஒரு பெரிய பந்து அளவிற்கு ஒன்று கீழே விழுந்தது. இருக்கும் வெளிச்சத்தில் கண்களை வெறித்துப் பார்த்தது உடனே வெளியே ஓடினேன், தாமுவைக் காப்பாற்ற.

கீழே விழுந்தது என்னவளின் தலை. அப்போது இவ்வளவு நேரம் நான் பேசிக் கொண்டிருந்தது?

தேனிலவு இனி இல்லை. ஆனால் வேட்டை தொடரும்...

Friday, July 17, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 3

...இதுவரை

விரல்கள் என்னை வாவென்று அழைத்தன. நான் விரல்களின் அருகே செல்லும் போது கதவு மீண்டும் 'டொக் டொக் டொக்', என்றது.

ஒரு பக்கம் விரல்கள் என்னை மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டிருந்தது. மறுபக்கம் கதவு விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. நான் கதைவைத் திறப்பதா, அல்லது விரல்களிடம் போவதா என்றெண்ணும் போது உள்ளே இருந்து என்னவள் 'நான் ரெடி', என்றாள்.

'நோ, வெளியே வராதே', என்றேன்
கதவு மீண்டும் சத்தமிட்டது.
'என்ன ஆச்சு?'
'நான் சொல்ற வரைக்கும் வெளியே வராதே'

கதவு இப்போது பலமாகத் தட்டப்பட்டது.
கதவின் சத்தத்தைக் கேட்டு, என்னவள் 'எனி பிராப்ளம்?', என கேட்டாள்.
'நோ நத்திங்க், வெளியே வராதே', என்று சொல்லிவிட்டு நான் கதவருகே சென்றேன். கதவு இப்போது அமைதி ஆனது. கதவைத் திறக்கவேண்டுமா வேண்டாமா என்று சந்தேகம் இருந்தது.
கதவின் தாழ் மட்டும் திறந்தேன். திறக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. கதவு தட்டப்படவில்லை. கதவைப் பிடித்து மெல்ல திறக்க முயன்றேன். சின்ன துவாரத்தின் வழியே வெளியே யாரேனும் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எனது கண்களுக்கு யாரும் தென்படவில்லை. கதவைத் திறந்தே விட்டேன். எனக்கான அதிர்ச்சி வெளியே இருக்கத் தான் செய்தது.

அந்த மூன்றடி மனிதன் கீழே விழுந்து கிடந்தான். கீழே இருப்பது அவனா, அதுவா என்று ஆராய்ச்சி செய்வது இப்போது முக்கியமில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டேன். கதவின் தாழடைத்து உடனே உள்ளே சென்றேன். என்னவள் எனக்காக மெத்தையருகே காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, 'அடியே, அங்க போகாதே', என்று சொல்லி அவளை இழுத்தேன். இவை எல்லாம் அவளிடம் சொல்வது கடினம் தான். ஆனால் நடந்ததைப் பார்த்து இனி எதுவும் கடினம் இல்லை என்று முடிவிற்கு வந்து சொல்ல ஆயத்தமானேன்.

'சரி கேளு, நாம் உடனே கிளம்பணும்', என்றேன்
'ஏன் என்ன ஆச்சு?'
'திஸ் ஹவுஸ் இஸ் ஹாண்டட், இங்க பேய் இருக்கு'
'யோவ், என்ன யா நீ. லூசு மாதிரி பேசுற?'
'கமான். நீ உள்ள போனதும் இங்க நிறைய விஷயங்கள் நடந்துச்சு, அங்க பாரு', என்றேன் ஜன்னல் ஓரத்தைக் காட்டி.
அங்கு இப்போது விரல்களும் இல்லை. வெடிப்பும் இல்லை.

'என்ன அங்க?', என்றாள்.
'சரி வெளியே வா', என்று கதைவைத் திறந்தேன்.
வெளியே மூன்றடி மனிதனும் இல்லை.
'என்னங்க ஆச்சு உங்களுக்கு?', என்றாள்.

நான் பதில் சொல்ல முடியாமல். 'சம்திங் இஸ் ரியல்லி கோயிங் ராங்', என்றேன்.
'எனக்குப் புரியலேங்க நீங்க சொல்றது'
'சொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த ஜன்னலோரத்துல ஒரு சின்ன வெடிப்பு, அதுல இருந்து கை விரல்களைப் பார்த்தேன்'
என்னவள் திடுக்கிட்டு, 'வாட்?', என்று அலறினாள்.
'அந்தக் கை விரல்கள் என்ன வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்திச்சு'
என்னவள் என்னையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அப்புறம், இந்தக் கதவு யாரோ பயங்கரமா தட்டிக்கொண்டே இருந்தாங்க'.
'ஆமா, கேட்டுச்சு'
'திறந்துப் பார்த்தா, அந்த க்ளீனர் பாய் இல்ல? அவன் கீழே விழ்ந்திருந்தான்', என்றேன்.
'செத்துட்டானா?'
'தெரியல, ஆனா இப்போ அவன் இங்க இல்லயே'
'அப்போ உயிரோட இருப்பானா? இல்லே டெட் பாடிய யாராவது எடுத்துக் கிட்டு போயிருப்பாங்களா?' என்றாள்.
'தெரியல மா', எனது நெற்றியில் விழுந்த கோடுகளைத் தேய்த்துக் கொண்டே, 'அப்போ, அட்மின் சொன்னது, அந்த டீ கடைக்காரர் சொன்னது எல்லாமே உண்மை தானோ? ஆனா, அவங்க இந்த பேய் மேட்டர் சொல்லலியே'.

'இப்போ என்ன பண்றது?'
'தாமுக்கு கால் பண்றேன்'
'வாட்?'
'யெஸ், என்று சொல்லி, நான் எனது தொலைப் பேசியுடன் மீண்டும் ஜன்னல் ஓரத்திற்குச் சென்றேன்.

தொலைப் பேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது. தாமு நிச்சயமாக எடுக்க மாட்டான் என்று தோன்றியது. அங்கு ஜன்னல் ஓரத்தில் வெடிப்பு இருந்ததற்கு சுவடே இல்லை இப்போது. அருகில் எங்கும் அதற்கான அறிகுறியும் இல்லை. தாமு தொலைப்பேசி எடுக்கவே இல்லை. நான் மீண்டும் மீண்டும் அழைத்த பின் ஐந்து நிமிடங்களுக்குப் பின் எடுத்தான்.

'ஹலோ தாமு, சொல்றத மட்டும் செய்'
'என்ன ஆச்சு?'
'நாங்க ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்டு இருக்கோம்'
'என்ன ஆச்சுன்னு சொல்லுங்க சார்'
'பதினஞ்சு கிலோமீட்டர், உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன், கிளம்பி வா'
'என்ன ஆச்சுன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்ல. நான் தனியா வரணுமா, இல்ல போலீஸ் ஹெல்ப் வேணுமா?'
'பேய் மீது நம்பிக்கை இருக்கா?'
'இல்லை'
'இங்க வா நான் காட்டுறேன்', என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

'இன்னும் பத்து நிமிஷத்துல தாமு வந்திருவான்', என்று சொல்லி, திரும்பிப் பார்க்க, என்னவளும் அங்கு இல்லை.

தேனிலவு தொடரும்...

Thursday, July 16, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 2

பாகம் ஒன்று

நானும் என்னவளும் எங்களின் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றோம். இருட்டால் துடைக்கப் பட்டிருந்தது அந்த அறை. வெளியே லாபியில் இருந்த விளக்கின் வெளிச்சம் முடிந்த வரை அறையின் உள்ளே எட்டிப் பார்க்க முயன்று நான்கு அடிக்கு மேல் உள்ளே செல்ல முடியாமல் தோற்றுப் போனதை ஒப்புக்கொண்டது. எனது வலது கையை சுவரின் மீது சற்றே தேய்க்க, இதோ கிடைத்துவிட்டது. விளக்குகள் போடப் பட்டது. அறை பிரகாசமானது. உள்ளே சென்று பூட்டினேன்.

உண்மையில் இந்த அறையை மட்டும் அடைக்காமல் இருந்திருந்தால் ஹெவன் ரிசார்ட்டுக்கு லாபம் அதிகரித்திருக்கும். அறையின் உள்ளே இருக்கும் விளக்குகள் ஆகட்டும், மெத்தை ஆகட்டும், அனைத்துமே புத்தம் புதுசாகத் தான் இருந்தது. ஜன்னலின் ஓரங்களும், தரையும் மட்டுமே ஏனோ பல நாட்கள் உபயோகிக்காமல் போனதால் அழுக்கு படிந்து கிடந்தது. அருகிலிருந்த அலமாரியைத் திறந்ததும் அறைக் கதவு தட்டப்பட்டது.

'டொக்... டொக்... டொக்...', என்றது கதவு.
'கதவத் திற டீ', என்றேன்.
'என்னால முடியாது செம்ம டையர்ட்', என்றாள்.
'உண்மையாவா சொல்றே?'
'ம்ம்ம்'
'அப்போ சரி, உடனே தூங்கிடுவே போல இருக்கு'
'ஏய்ய்ய், ச்சீ', என்றாள்.

'டொக் டொக் டொக்', இம்முறை இடைவெளி குறைந்தது.
நான் உடனே கதவைத் திறந்தேன். அங்கு சுமார் மூன்றடிக்கும் கம்மியாக ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
'சார், நான் க்ளீனர் பாய். ரூம க்ளீன் பண்ணனும்னு சொன்னாங்க', என்றான்
'சரி வாப்பா', என்றேன்.

பத்தே நிமிடத்தில் அவன் அறையைச் சுத்தம் செய்துவிட்டான். ஜன்னல்களின் இடுக்களிலிருந்து தரையின் ஓரங்கள் வரைக்கும் அனைத்தும் இப்போது சுத்தமாக இருந்தது.

'ஹம்ம் இப்போவே டைம் பத்தாகுது', என்றேன்.
'ரெண்டே நிமிஷம்'
'என்ன மேகி பண்ணப் போறியா?'
'ஆமா டா, அதுக்கு தான வந்திருக்கோம்', என்று சொல்லிவிட்டு முகத்தைக் கழுவச் சென்றாள்.
நான் எனது ஆடையை மாற்றிக் கொண்டு அவள் பின்னால் நின்று கொண்டேன்.
'என்ன ரெடியா?'
'இரு டா, ரொம்ப தான் அவசரம் உனக்கு'
'எனக்கு ஒன்னும் இல்லே, நீ தான் டையர்டா இருக்கியே, அதுக்கு தான் சொன்னே', என்றேன்.
'ச்சீப் போ', என்றாள், வெட்கத்துடன். ஏனோ தெரியவில்லை இந்தப் பழைய வெட்கம் மட்டும் என்றும் புதிதாக இருக்கிறது.
இரண்டு நிமிடங்கள் ஆனதும் அவளைப் பின்னாலிருந்து தூக்கி மெத்தைக்குக் கடத்தினேன்.

'என்ன செய்யப் போறீங்க?' என்று வினவினாள் ஏதும் தெரியாதவளைப் போல்.
'கவிதை எழுதலாம்னு' என்றேன் நான்.
'ஒ, அவ்ளோ சந்தோஷமா?' என்று கேட்டவள், என் பதிலுக்கும் காத்திராமல் 'என்ன தலைப்பு?' என்று புருவங்களை உயர்த்தியபடி கேட்டாள்.
'நாணம்'.

என்னை ஒரு நிமிடம் விழியால் உள்வாங்கிக் கொண்டு, 'நாணம் - பெண்ணின் தேவையற்ற ஆடை!' என்று கூறி, தன் காந்தப் பார்வையை நிறுத்தி, கண்களைச் சிமிட்டி, சிரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் என் குட்டிப் புயல். அய்யோ! தொலைந்தே போனேன் நான். பாதியைத் தொலைத்து, வெற்று மீதியுடன் வாழ்வது சாத்தியமற்றதால், தொலைந்த அவளிடமே சென்று, என்னைத் தேடி, மீண்டும் அவளிடம் முழுதாய்த் தொலைவதென்று முடிவு செய்தேன். அப்பொழுது தான் உணர்நதேன், எனக்கான, என் பண்டத்தை நான் ருசித்து நாட்கள் பலவானதென்று!

வெளியே சென்றவளைக் கரம் பற்றி இழுத்து, காற்றும் நுழையாத வண்ணம் அவளை என்னருகில் வளைத்தேன். என் துடியிடையாளைக் கரங்களில் ஏந்தி, பஞ்சணையில் கிடத்தினேன்! ஜென்ம சாபல்யம் அடைந்ததாய்த் தோன்றியிருக்கும் அந்தப் பஞ்சணைக்கு. அவளோ, ஏதும் பேசாமல், எனது லீலைகளை ஆவலாய் எதிர்நோக்கியவளாய் இருந்தாள். அவளின் கழுத்தில் அழுத்திய என் உதடுகளின் ஸ்பரிசம் தாங்க முடியாதவளாய்ச் சிதறிப் போனாள். சிதறியவளைச் சேர்த்து எடுக்கும் எண்ணம் கொண்டு, என் விழிகளோடு மட்டுமே விளையாட அறிந்திருந்த அவளின் உணர்வுகளோடு என் திருவிளையாடலைத் துவங்கினேன்.

'பூவுக்குள் ஒரு பூகம்பம் படைக்கணும், உதவி தேவை' என்றேன் காற்றில் அசைந்தாடிய அவளின் கூந்தலைக் கோதியவாறே.
'ஹ்ம்ம், என்ன பா' என்றாள்.
'பாலுக்கும் உனக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமாடீ உனக்கு?' என்றேன்.
'அது என்ன புதுசா ஒரு ஒற்றுமை?' என்றென்னை இருகியவளின் கண் பார்த்துச் சொன்னேன், 'இரண்டிற்கும் ஆடை அழகில்லை' என்று.
'ச்சீ', என்று பொய்யாய்ச் சினுங்கி, என்னைத் தள்ள முயன்றவளின் வளைக்கரத்தில் அழுந்த முத்தமிட்டேன்.

ஒவ்வொரு முறை மீட்டும் போதும் இசை விருந்தளிக்கும் இன்னிசை யாழ் அவள்; இன்னிசையாளும் அவள். பூவில் மதுவருந்தும் வண்டினத்தவன் இல்லை நான். மலரிதழ்களைக் கசக்கி அதிலிருந்து வாசனைத் திரவியம் கண்டெடுக்கும் மனு குலத்தவன். மெல்லிய மலரொத்த அவளிடமிருந்தும் திரவியம் தேடும் படலம் துவங்கியது.

மீண்டும் கதவு 'டொக் டொக் டொக்', என்றது.
இம்முறை கதவைத் திறக்கவே கூடாது என்று நினைத்தேன்.
கதவு பலமாகத் தட்டப்பட்டது.
'நான் போய் பார்கறேன்', என்றேன்.
'ஹே ச்சீ இரு, நான் உள்ள போறேன்', என்று சொல்லி, தனது ஆடைகளைத் தேடி எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

நான் கதவைத் திறந்தேன். அதே மூன்றடி க்ளீனர் நின்று கொண்டிருந்தான்.
'என்ன வேணும்', என்றேன்.
'ஒன்னும் இல்ல சார், எதாவது வேணுமா சார்', என்றபடி உள்ளே எட்டிப் பார்த்தான்.
'மணி பன்னண்டு ஆகுது, இப்போ ஒன்னும் வேணாம், மறுபடியும் கதவைத் தட்டாதே' என்று சொல்லி கதைவை அடைத்தேன்.
கதவு மூடும் வரை அவன் அங்கிருந்து கிளம்பியதாக எனக்குத் தெரியவில்லை.

நான் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தேன். எனது எதிரில் இருந்த ஜன்னலின் ஓரத்தில் சின்னதாய் வெடித்து அதிலிருந்து கை விரல்கள் மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது.

தேனிலவு இன்னும் தொடரும்...

Wednesday, July 15, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 1

முன்குறிப்பு:
கதாப்பாத்திரங்களைத் தெரிந்துக் கொள்ள 'எனது பெயர் நாகவள்ளியை' படிக்கவும்.

பாகம் 1.
'சொல்லுங்க சார், நான் தாமு தான் பேசறேன்'
'என்ன தாமு எப்படி போகுது உன்னோட ஹனிமூன்?'
'இது வரைக்கும் நல்லாதான் சார் போச்சு, என்ன நான் சென்னைக்கு வரணுமா?'
'நோ நோ தாமு, பயப்படாதே, நீ வரவேண்டாம்'
'ஓ ஒகே சார்'
'நாங்க அங்க வர்றோம்'
'இதுக்கு நானே சென்னைக்கு வரலாம்'
'என்ன தாமு?'
'ஒன்னும் இல்ல சார், வாங்க, ஆனா, 'முதன் முறையாக நான்கு பேருடன் தேனிலவு' அப்படின்னு நாளைக்கு தினத்தந்தில முதல் பக்கத்துல வருமே, பரவாலயா சார்'.
'டேய், நாங்க ப்ளான் பண்ணியிருக்கிற இடம் நீங்க தங்கியிருக்கிற இடத்துல இருந்து 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற மாபங்கி என்ற ஹில் ஸ்டேஷன்'
'சார் நாங்க அங்க போய் விசிட் பண்ணிட்டோம் சார். நாங்க வரலே சார், நீங்க போயிட்டு வாங்க'
'தம்பி'
'ம்ம்ம் சொல்லுங்ண்ணா'
'இது வெறும் இன்ப்ர்மேஷன் தான். உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன், சரியா?', என்றேன்.
'இப்போ இப்படித் தான் சொல்லுவீங்க, அப்புறம் என்னோட கழுத்துல ஒரு கேமராவ மாட்டிவிட்டுட்டு ஆவியோட அலையணும், பேயோட பேசணும்னு சொல்லுவீங்க'
நான் சிரித்துக்கொண்டே, 'இல்ல தாமு, நத்திங் அபீசியல் திஸ் டைம், நாங்களும் பெர்சனல ரிலாக்ஸ் பண்ணத் தான் போறோம்', என்றேன்.

அன்று மதியம் நானும், என்னவளும் காரில் ஏறி எங்களது பயணத்தைத் தொடங்கினோம். காதல் மழையில் நனைந்த கொண்டே சென்றதில் எட்டு மணி நேரப் பயணம் பெரிதாகத் தெரியவில்லை. குளிர் காற்றும், சாலையோர தென்னை மரங்களும் மாபங்கியை நெருங்கி விட்டோம் என்று மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

'யோவ், அங்க டீக் கடையில நிறுத்துங்க, இந்த இடம் ரொம்ப சீனிக்கா இருக்கு', என்றாள்.
'ஷூர்', என்று எங்களது காரை தேனீர் கடைக்கு அருகில் நிறுத்து விட்டு உள்ளே சென்றோம்.
தேனீர் பருக்கிக்கொண்டே அவள் மாபங்கியின் அழகைப் பிடித்து கேமராவில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
'என்ன சார் மாபங்கி சுத்தி பாக்க வந்தீங்களா?', என்றார் தேனீர் கடைக்காரர் கேட்டார்.
'ஆமாங்க'
'கைடு வேணும்னா சொல்லுங்க சார், பார்த்து பண்ணிடலாம்'
'வேணும்னா கண்டிப்பா கேட்கிறேங்க'
'எங்க தங்கப் போறீங்க?'
'இங்க தான் ஹெவன் ரிசார்ட்ஸ்'
அவரது முகம் வெளுத்துப் போனதை நான் கவனிக்கத் தவரவில்லை.

'என்னங்க, அமைதியா இருக்கீங்க, நல்லா இருக்காத அந்த ரிசார்ட்ஸ்'
'நல்லா தாங்க இருக்கும், ஆனா அங்க பலப் பேரு தற்கொலை பண்ணியிருக்கிறதா போலிஸ் சொல்லுது, உண்மையில அது கொலைன்னு ஒரு பேச்சு இருக்குங்க', என்றார்.
'சார் நாங்க இதுக்கெல்லாம் பயந்தா எங்க தொழில் என்ன ஆகும். நான் ஒரு ரிப்போர்ட்டர் மாதிரிங்க. நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கீங்க. நன்றிங்க', என்று சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.

மலைப் பிரதேசம் என்பதால் சாலையில் ஒரு சில மேடு பள்ளங்களில் தள்ளாடிச் சென்றது எங்கள் வண்டி. அவள் ஏதோ விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்க, 'அடியே என்ன எண்ணிக்கிட்டு இருக்கே' என்று கேட்டேன்.
'ம்ம்ம். இது நம்மலோட பதிமூனாவது தேனிலவு', என்றாள் வெட்கச் சிரிப்புடன்.

எட்டு மணி நேரப் பயணம் ஏதோ எட்டே நிமிடத்தில் முடிந்தது போல் இருந்தது எனக்கு. அது சரி 'காதலி வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகும்' என்று வைரமுத்து ரசித்துச் சொன்னது சரி தான் என்று நினைத்துக் கொண்டேன். மாபங்கி ஹெவன் ரிசார்டுக்கு வந்தடைந்த போது இரவு ஒன்பது மணி. எங்கள் வண்டியைப் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

ரிசெப்ஷனில் ஒரு தேவதை மாறுவேடத்தில் இருந்தாள். கோதுமை நிறத்தில் உடல். லேசான சுருட்டை முடியை இடதோரம் வகுடெடுத்து வாரியது அழகு. மீன்களே அங்கு கண்களாகி இருந்தன. கண்ணுக்கே தெரியாதவாறு ஒரு சின்ன பொட்டு. யாரும் வெட்டுப் படலாம், ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தது அவளது மூக்கு. உதடுகள் இரண்டும் குறள் போல் மிகவும் சிறியது. குரல் சங்கீதம் பாடுகிறது. பற்கள் அனைத்தும் சீராக அடுக்கி இருந்தது. சிங்கப் பல் மட்டும் சிறுது எடுப்பாக இருந்தது. அதுவும் அவளுக்கு அழகைக் கூட்டியது.

'வெல்கம் சார், வெல்கம் மேடம்', என்று எங்களை வரவேற்றாள்.
நாங்கள் எங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம்.
'ஒ வாங்க, நீங்க ஏற்கனவே புக் பண்ணியிருந்தீங்களா?', தேவதை பாடினாள்.
'இல்லேங்க ஆனா, கால் பண்ணும் போது, கிளம்பி வாங்க பாத்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க', என்று நான் சொன்னது தான் தாமதம். என்னவள் என்னை பின் தள்ளி அந்த தேவதையிடம் பேசத் தொடங்கினாள்.
'சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க, ஐ வில் செக் அண்ட் லெட் யூ நோ', இதுவும் சங்கீதம் தான்.

நாங்கள் இருவரும் ரிசெப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தோம்.

'சாரி சார். இப்போ ஆக்சுவலா ரூம்ஸ் அவேலபலா இல்ல', என்றாள் தேவதை.
'என்ன மேடம் சொல்றீங்க? இனிமே எங்க போக முடியும்? இப்போவே லேட் ஆயிடுச்சு',
'சாரி சார், இப்போ ஒருத்தர் செக் அவுட் செய்யணும். ஆனா அவர் செய்யல. அது தான் இப்போ பிராப்ளம்'

அவளின் பின் ஒரு மரப்பலகையில் சாவிகளைத் தொங்கவிடுவதற்கான கொக்கிகள் இருந்தன. அதில் பதின்மூன்றாவது அறையின் சாவி தனியாக ஆடிக் கொண்டிருந்தது. அந்த சாவியை அவளிடம் காட்டி, 'ஹவ் அபௌட் தட் கீ', என்றேன்.
'இல்ல சார், அந்த ரூம் யாருக்கும் தரமாட்டோம் சார். அட்மின் இந்த ரூம் யாருக்கும் தர வேண்டாம்னு சொல்லியிருக்காங்க', என்றாள்.
'ஏன்?', ஆர்வத்துடன் நான்.
'தெரியல சார், அங்க இதுக்கு முன்னாடி பல பேரு தற்கொலை பண்ணியிருக்காங்க. அது தற்கொலையா, இல்ல கொலையான்னு கூட இன்னும் கண்டு பிடிக்கலை'
'எங்களுக்கு இதெல்லாம் தெரியுங்க. தெரிஞ்சுட்டு தான் கேட்கிறேன். நான் வேணும்னா உங்க அட்மின் கிட்ட பேசறேன்', என்றேன்.
'சாரி சார், அட்மின் இப்போ அப்ராட் போயிருக்காங்க'.
'இல்லேங்க, எங்களுக்கு ரூம் 13 தாங்க வேணும். நான் ஒரு தனியார் டி.வில வேலை பார்க்கிறேன். நான் ஒரு ரிப்போர்ட்டர். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் நாங்க பாத்துக்குறோம்', என்றேன்.

அப்போது ஒருவர் தன் மனைவியுடன் தனது பெட்டிகளுடன் செக் அவுட் செய்ய ரிசெப்ஷனுக்கு வந்தார்.
'சார், இந்த ரூம் எடுத்துக்கோங்க. ரூம் நம்பர் 14. பத்து நிமிஷத்துல க்ளீன் பண்ணி, ரெடி பண்ணச் சொல்றேன்', என்றாள் அக்கறையுடன்.
நானும் என்னவளும் அமைதியாக இருந்தோம். தேவதை செக் அவுட் செய்வதற்காக வந்தவரிடம் சில இடங்களில் கையெப்பம் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது வலது கையில் 14. இடது கையில் 13.
'சொல்லுங்க சார். இனி உங்க சாய்ஸ் தான். எது வேணும். 13ஆ இல்ல 14ஆ?'
நான் என்னவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்து கண்ணடித்து விட்டு, 13ஆம் நம்பர் சாவியை எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் எங்களது பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவள் காட்டிய வழியில் நடந்தோம். 16, 15, 14, அதோ இருக்கிறது 13. நான் திரும்பி தேவதையைப் பார்த்தேன். அவள் சற்று பயத்துடன் சிரித்தாள். அவளது சிங்கப் பற்கள் அழகாக இருந்தது.

தேனிலவு இனி தான் ஆரம்பம்...

Tuesday, July 14, 2009

எதிர்பார்ப்பு



அடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.

நீ என்னைக் காதலிக்கும் உண்மை
உனக்குத் தெரியும் முன்னே
எனக்குத் தெரிந்து விட்டதால் தான் என்னவோ
நான் உன்னை அவ்வளவு காதலிக்கிறேன்.

காதலில் எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம்
என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்ல?

உண்மையில், எதிர்பார்ப்பால் காதல்
எவ்வளவு அழகாகிறது தெரியுமா?
எதிர்பார்ப்பே இல்லாமல் போனால்,
நமது ஆறாவது அறிவு அறவே காணாமல் போகிறது.
நமக்கும் ஆட்டு மந்தைக்கும் உள்ள
இன்னொரு வேறுபாடும் எதிர்பாப்பு தான்.

அது இல்லை, இது தான் வேண்டும்
என்று கட்டளையிட்டு பெறுவது
காதலில் எத்தனை அழகு தெரியுமா?
கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போவதென்றால்
நான் எதற்கு உனக்கு
நீ எதற்கு எனக்கு?

உன்னுள் இருண்டு கிடப்பதை
நான் தோண்டி எடுப்பது எதிர்பார்ப்பு என்றால்
எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் தான்.
இது எனக்கு பிடித்தே இருக்கிறது.

அடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.

Monday, July 13, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 6

இதுவரை பயணித்தது...

ரயில் ரைன் நீர்வீழ்ச்சியை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ரைன் நீர்வீழ்ச்சியின் அழகை நாங்கள் ரசிக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது. ரயில் கடைசி நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது.

'சரி கடைசியா கையில எப்போ பைய வெச்சிகிட்டு இருந்தேன்னு ஞாபகம் இருக்கா?', என்றேன்.
'தெரியல டா', என்றான்.
'யூத் ஹாஸ்டல்ல இருந்து கிளம்பும் போது எடுத்துகிட்டு வந்தியா?'
'ம்ம், ஜூரிக்ல என்கிட்ட பை இருந்திச்சு'.

ரயில் மீண்டும் கிளம்பி இப்போது ரைன் நீர்வீழ்ச்சி வந்து சேர்ந்தது. ஆதி ரயிலில் இருந்த ஒர் காவலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
'மச்சி அப்போ நாம ரைன் பால்ஸ் பாக்க முடியாதா?', என்று கேட்டான் கார்த்தி.
'ங்கொய்யால, ஊருக்குப் போய் சேருவோமான்னே தெரியல ரைன் பால்ஸ் ரொம்ப முக்கியம்', என்றேன்
'ஜுரிக்ல ட்ரெய்ன் ஏறும் போது கூட பை இருந்திச்சு டா, ஷூர். ஆனா விண்டர்தூர்ல இருந்த போது நம்ம சாப்பாட்டு மூட்டையெல்லாம் எடுத்துகிட்டு இறங்கினேன். பை எடுத்துக்கிட்ட மாதிரி ஞாபகம் இல்லே டா', என்றான் ஆதி.
'அப்போ நாம ஏறின ஜுரிக் டூ விண்டர்தூர் ட்ரெயின் இப்போ எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சு அதுல தேடலாம்', என்றேன்.

ஒரு பத்து நிமிடத்தில் ரயில் விண்டர்தூர் வந்து சேர்ந்தது. எங்களிடம் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான ரசீது இருந்ததால், நாங்கள் எந்த ரயிலில் சென்றோம் என்பதற்கான குறியீடுகள் அதில் இருந்தது. அதை டிக்கெட் கவுண்டரில் காண்பித்த இப்போது அந்த ரயில் எங்கு இருக்கிறது என்பதைக் கேட்டோம். அந்த ரயில் இன்னுமொரு நாற்பத்தைந்து நிமிடங்களில் விண்டர்தூர் வந்து சேரும் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

சரி இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் இருக்கிறதே என்று நாங்கள் விண்டர்தூரைச் சுற்றலாம் என்று எண்ணி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு அரை மணி நேரம் அருகிலிருந்த தோட்டங்களையும், சில சாலைகளையும் சுற்றினோம். விண்டர்தூரில் தான் நாங்கள் முதன் முறையாக ட்ராம் மற்றும் பஸ்சின் கலவையைப் பார்த்தோம். அதாவது பேருந்து போன்ற உடலமைப்பு இருந்தது. டையர்கள் உட்பட, ஆனால், மேலே மின்சாரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தான் செயல் படுகிறது. கீழே தண்டவாளங்களும் இல்லை.




பின்னர் மீண்டும் நாங்கள் விண்டர்தூரில் எங்களது ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் முதல் வகுப்பு ஏறினோம் என்பதால், ரயிலில் உள்ள முதல் வகுப்புகளில் நாங்கள் மூவர் ஏறி, பையைத் தேடுவது என்று முடிவு செய்தோம். அதனால் ரயில் வந்தவுடன் மூவரும், பிரிந்து முதல் வகுப்புகளில் ஏற வேண்டும் என முடிவு செய்தோம்.அங்கே ஒரு ரயில் அதிகாரி நாங்கள் முன்னும் பின்னும் நடப்பதைப் பார்த்து எங்களிடம் வந்தார்.
'Are you guys ok?', என்றார்.
நாங்கள் நடந்தவற்றை எல்லாம் சொன்னோம்.
'Don't worry', என்று சொல்லி விட்டு, அவருடைய அலைப்பேசி எடுத்து யாருடனோ தொடர்பு கொண்டு, ஒரு சில நிமிடங்கள் கழித்து, 'the train is approaching this station in few minutes', என்றார்.
'Thanks', என்றான் ஆதி.
'Where in India are you from?', என்றார்.
இவருக்கு எப்படி இது தெரிந்ததென்று எங்களுக்குப் புரியவில்லை. 'From Chennai', என்றேன்.
'Oh Chennai, it was Madras once', என்றதும் எங்களுக்கு ஆச்சர்யம்.
'How do you know this?', கார்த்தி கேட்டான்.
'I had been in India for 7 to 8 years', என்றார்.
'Where in India?'
'From east to west and Kashmir to Kanyakumari, I have travelled almost every place in India. Its a nice country'

உண்மையில் பெருமையாக இருந்தாலும், இது வரை நாங்கள் லண்டன் என்று சொன்னதை நினைத்து சிறிது வெட்கமாகத் தான் இருந்தது.

'I have asked the guard in the train to look for the bags in the first class compartments, and apparently there is one, but not sure if that is your bag', என்றார்.
அவருடன் நாங்கள் இருந்தது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, இருப்பினும் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த மரியாதை வந்தது. இரண்டொரு நிமிடங்களில் ரயில் வந்தது. அவர் சொன்ன ரயில் பெட்டியில் நான் ஏறினேன். கார்த்தியும் ஆதியும் வேறொரு பெட்டியில் ஏறினார்கள். கண்ணுக்கெதிரே இருந்தது அவனது பை.



அவருக்கு நன்றிகளைச் சொல்ல, அவரோ நேரமின்மையால் விடைபெற்றுக் கொண்டார். நாங்கள் பின்னர் மீண்டும் ரைன் நீர்வீழ்ச்சிக்குப் பயணித்தோம்.

ரைன் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. (மிக உயரமானது அல்ல. நயாகரா தான் உயரமானது). அங்கு செல்ல காட்டுப் பகுதிகளில் சுமார் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். நம்முடன் எப்போதுமே ஒரு கூட்டம் இருப்பதால் பயமில்லாமல் செல்லலாம்.



தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சியின் சத்தம் நமக்கு கேட்கிறது. அருகில் சென்றதும் நாம் பேசுவது யாருக்கும் கேட்பதில்லை.

ரைன் நதியில் ஒரு கரையிலிருந்து படகு ஏறி நாம் நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்கே செல்லலாம். படகு ஒரு கரையில் ஆரம்பித்து, இன்னொரு கரைக்குச் செல்கிறது. அங்கு பல்நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. அங்கிருந்து வேறொரு படகில் ஏறி நாம் நீர்சீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் செல்லலாம்.



நாங்கள் முதல் படகில் ஏறி மற்றொரு கரைக்குச் சென்றோம். போகும் போது ஏதோ ஒரு கடலில் போவது போல் ஒரு வியப்பு. நம்மைச் சுற்றி முழுவதும் தண்ணீர், ஆழம் தெரியவில்லை. மீண்கள் தெரிந்தன. ஒரு பத்து நிமிடங்களில் மற்றொரு கரைக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போகும் போது மணி சுமார் பன்னிரெண்டு இருந்ததால், நாங்கள் அங்கே இருக்கும் உணவகத்தில் ஏதோ கேட்க, அதைக் கஷ்டப்பட்டு முடித்தோம்.

பின்னர் அங்கிருந்து இன்னொரு படகில் ஏறி நீர்வீழ்ச்சியின் மையப் பகுதிக்குச் சென்றோம். அதன் அருகே செல்லும் போதே நம் மீது சாரல் அடிக்கிறது. குழந்தைகளுடன் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பார்க்க வேண்டிய இடம். இனி படங்கள்.








ரைன் நீர்வீழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்று மாலை நாங்கள் விமான நிலையத்திற்குப் போக வேண்டும். நேரம் இருந்ததால் நாங்கள் ஜூரிக் நகரம் சுற்றிப் பார்த்தோம். ஷாப்பிங் செய்வதற்கான மிகச் சிறந்த இடம். ஜுரிக் சின்ன நகரமாக இருந்தாலும் எங்கும் அழகாகவே இருக்கிறது.



சுவிஸில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி சொல்லிவிட்டேன். வாங்க வேண்டியவை சில இருக்கிறது.
சுவிஸில் பிரபலமானது
1) சுவிஸ் கத்தி

2) குக்கூ கடிகாரம்.


எங்களது ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குச் சென்றோம். சிறிது தாமதமாகச் சென்றதால் எங்கள் மூவருக்கும் ஒரே வரிசையில் இடம் கிடைக்கவில்லை. மற்ற இருவர் எங்கு அமர்ந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. நான் ஏதோ கிடைத்த இடத்தில் அமர்ந்துக் கொண்டேன். எனது அருகில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருந்தார். விமானம் பாதி வழியில் பறந்து கொண்டிருந்தது.
'Where are you from? Swiss or England?', என்று நான் கேட்டேன்.
'I am from England, London. And you?'
'India'

பயணம் முடிந்தது.