Thursday, November 20, 2008

Try - இதை அகராதியிலிருந்து விலக்கிடுங்க

வணக்கம்.

சில நாட்களுக்கு முன்பு படித்தது. யார் சொன்னாங்கனு சரியாத் தெரியல, ஆனா படிக்க நல்லா இருந்தது. என்ன சொல்லியிருக்காங்கனா, "Try" என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து விலக்கிவிடுவது நல்லதுனு சொல்லியிருக்காங்க. சரி அப்படி என்ன தான் அந்த வார்த்தைல பிரச்சனைனு பாக்கலாம்.

Try என்ற சொல் நம்முடைய மூளைக்கு வெற்றிய மறைச்சு, தோல்விக்கான வழிய காட்டுதாம். என்னடா சிறுபிள்ளைத்தனமாக இருக்குனு நீங்க நினைக்கிற மாதிரி தாங்க நானும் நினைச்சேன். மேல படிச்சாத்தான் இது கூட ஒரு விதத்துல சரீன்னு பட்டுது. ஒரு உதாரணத்தோட விளக்கியிருக்காங்க.

ஒரு குழந்தைக் கிட்ட ஒரு பென்சில் தந்து, "Try dropping this pencil" அப்படீன்னு சொல்றதா வெச்சிக்குவோம். அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடும். அந்தக் குழந்தைக் கிட்ட மறுபடியும் போய் "நான் உன்கிட்ட பென்சிலக் கீழ போட சொன்னேனா? பென்சிலக் கீழ போட 'Try' பண்ணுனு தானே சொன்னேன்" அப்படீன்னு சொன்னா, அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடாம, பென்சிலோட ஒரு முனையப் புடிச்சிக்கிட்டு கீழ போட்ற மாதிரி பாவனை பண்ணும். ஆனா பென்சிலக் கீழ போடாது.

ஆக, ஒரு வேலைய செய்ய Try பண்ணுனு சொல்லும் போது, நாம் நமது முளைக்கு அந்த வேலையைச் செய்யாதேன்னு தான் சொல்றோம். இது கிட்டத்தட்ட வெற்றியை மறைத்துத் தோல்வியைத் தான் முன்னிறுத்துது. அதனால தான் Try என்கிற வார்த்தையை அகராதில இருந்து விலக்கச் சொல்றாங்க.

யாராவது அவங்க வீட்டுக்கு உங்களக் கூப்பிட்டா, "I will come" இல்ல "I will not come" அப்படீன்னு தெளிவாச் சொல்லனுமாம். மாறாக "I will try to come" அப்படீன்னு சொன்னா, நாம கண்டிப்பா போகமாட்டோமாம். அதேபோல, உங்கக்கிட்ட இந்த வேலைய முடீன்னு சொன்னா, ஒன்னு, "Yes, I will do it" அப்படீன்னு சொல்லணும், முடியலேன்னா, "No, I cant do it", அப்படீன்னு சொல்லணுமாம். அப்படிச் சொல்லாம, "I will try to do it" அப்படீன்னு சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. என்ன சரிதானே?

உங்கக் கருத்துக்களைக் கமெண்டுங்க.

பி.கு: இதைக் கூறியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அப்படீன்னும் இருந்திச்சு. இது உண்மையான்னு தெரியல.

Friday, November 14, 2008

புரிந்த புதிர்; புரிஞ்சதோட சரி. - 1

வணக்கம் மக்களே...

ஒரு விடுகதையோட உங்க முன்னாடி வந்திருக்கேன். இதுக்கு முடிஞ்சா பதில் கண்டுபிடிங்க. என்ன சந்தேகம் இருந்தாலும் கமெண்டுங்க. டிஸ்கஸ் பண்றாதா இருந்தாலும் கமெண்டுங்க. சரி இனி விடுகதைக்கு போவோம்.

மூனு பேரு வேல வெட்டி இல்லாம இருக்காங்க. A, B, C அப்டீனு வெச்சிக்குவோம்.

C என்ன பண்றான், 2ல இருந்து 100குள்ள ரெண்டு நம்பர மனசுல நெனச்சிக்கிறான். அந்த ரெண்டு நம்பர் X, Y அப்டீனு வெச்சிக்கலாம்.

C என்ன பண்றான்:
-- A கிட்ட போய், X+Y யோட விடைய சொல்றான்.
-- B கிட்ட போய், X*Y யோட விடைய சொல்றான்.

Aக்கு தெரிஞ்சது:
-- X+Y யோட விடை தெரியும்.
-- B கிட்ட X*Y யோட விடை இருக்குனு தெரியுமே தவிர, X*Y யோட விடை என்னான்னு தெரியாது.

Bக்கு தெரிஞ்சது:
-- X*Y யோட விடை தெரியும்.
-- A கிட்ட X+Y யோட விடை இருக்குனு தெரியுமே தவிர, X+Y யோட விடை என்னான்னு தெரியாது.

இது வரைக்கும் புரிஞ்சிதா? புரியலேனா go to step 1 :-) அட மறுபடியும் முதல்ல இருந்து படிங்கப்பா.

சரி இப்போ Aவும் Bயும் அந்த ரெண்டு நம்பர கண்டுப்புடிக்றாங்க. எப்படின்னா...
Statement 1: B கிட்ட A சொல்றான்: எனக்கு அந்த ரெண்டு நம்பரும் தெரில, உனக்குக் கூட கண்டிப்பா தெரியாதுனு எனக்குத் தெரியும்.
Statement 2:A கிட்ட B சொல்றான்: ஆமா, எனக்கு அந்த ரெண்டு நம்பர் முதல்ல தெரியாமத் தான் இருந்திச்சு. ஆனா, உன்னோட statement 1 கேட்டப் பிறகு, எனக்கு அந்த ரெண்டு நம்பர் தெரிஞ்சிப் போச்சு.
Statement 3: B கிட்ட A சொல்றான்: ஆஹா, உன்னோட இந்த statement 2 வ கேட்டுட்டப் பிறகு எனக்குக் கூட அந்த ரெண்டு நம்பர் தெரிஞ்சிப் போச்சு.

அப்படீனு சொல்றாங்க.

ஆக, X மற்றும் Y என்னான்னு கண்டு புடிங்க.

பி.கு1. A கிட்ட B பொய் சொன்னான். B கிட்ட A பொய் சொன்னான், அப்டீங்கற மொக்கைக்கெல்லாம் இங்குட்டு இடம் கிடையாது.
பி.கு.2 இந்த கேள்விக்கு பதில் என்கிட்டயும் இல்ல.

Thursday, November 13, 2008

புரியாத புதிர்- பாகம் 2


இதுக்கு விளக்கம் எல்லாம் வேணாங்க. உடம்புல தெம்பும் இல்ல. செய்திய எல்லோரும் படிச்சிருப்பீங்க.
என்னத்த சொல்ல...
நல்லா காட்றாங்க டா ரியாக்ஷன.

வேடிக்கை பாத்திச்சு போலிஸ்.

இவங்கள என்னங்க பண்றது? எனக்கு ஒன்னுமே புரியல.

நமது பள்ளிகளும், பிள்ளைகளும்

வணக்கம்
இந்தப் பதிவ ரொம்ப அவசர அவசரமா எழுதறதால, கண்டிப்பா நெறய தவறுகள் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க.

அது வேற ஒன்னும் இல்லேங்க. "வீட்டுப்பாடம் பெற்றோர்களுக்கா? பிள்ளைகளுக்கா!!!" அப்டீங்கற பதிவ நந்து இங்க இருக்கு, படி, படிச்சிட்டு மனசுல தோன்றத கமெண்டு அடீனு சொன்னாரு. அதுக்கு கமெண்டு அடிக்கனும்னு பாத்ததுல மனசுல நெறய விஷயங்கள் பட்டிச்சு. அவ்ளோவும் கமெண்டா போட முடியாதுனுத்தான் ஒரு பதிவாவே போட்றேன்.

இதுல முக்கியமான விஷயம் என்னான, எனக்கு சரீனு படறதத்தான் எழுதறேன்.
முதல்லெ, வீட்டுப்பாடம் (இனி இத வீ.பா னு தான் சொல்லுவேன்) வேணுமானு கேட்டா, கண்டிப்பா வேணுங்க. ஆனா வீ.பா என்னானு தான் நாம முடிவு பண்ணனும். அது பொது அறிவ ஊட்ற மாதிறி இருக்கனும். பள்ளிபுத்தகள்ல இருக்றதையே வீட்லயும் பண்ணச் சொன்னா, வீட்ல பண்ணவேண்டியத, பள்ளிலயா பண்ணமுடியும்? இதுல என்னக் கொடுமைனா, ஆனுவல் (Annual தமிழ்ல தெரிலீங்க) பரிட்சை முடிஞ்சப்பறம் கூட, handwriting நல்லா இருக்கனும்னு பழைய புத்தகங்கள்ல இருக்கறதையே எழுதச்சொல்லுவாய்ங்க. ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் எழுதனுமாம். நானும் கேண மாதிறி எழுதியும் இருக்கேன். முழுசா முள்ளாங்கி பத்த மாதிறி 60 நாளையும் வீனடிச்சிருக்கேன். என்னத்த சொல்ல. லீவு முடிஞ்சி பள்ளிக்குப் போனா, அதப் பத்தி வீ.பா கொடுத்தவங்களும் மறந்திருப்பாங்க. இப்படித் தான் நானும் வளந்தேன்.

என்னப் பொருத்த வரையில் வீ.பா என்ன தரனும்? உன்னோட இஷ்டப்படி எதாவது பண்ணு. வரையவோ, இல்ல handwork, இல்ல பாட்டு பாட்றதோ, இல்ல, கிரிக்கெட் விளயாடறதோ அப்படி என்ன வேணும்னாலும் பண்ணு. முக்கியமா, இந்த வரைஞ்சது, handwork பண்ணினத பாத்தவுடனே, இத பண்ணது யாருனு தெரிஞ்சிடும். புள்ள பண்ணியிருந்தா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் முழு மதிப்பெண் கொடுக்கனும். இதுவே அப்பவோ, அம்மாவோ பண்ணியிருந்தா, அவங்கள கூட்டியாந்து, என்ன ப்ரச்சன உங்களுக்கு, குழந்தைக்கு கொடுத்தத நீங்கயேன் பண்றீங்க? உங்களுக்கு வேல இல்லயானு கேக்கனும். அத விட்டுட்டு, மாத்தி பண்ணா, நந்து சொன்ன மாதிறி குழந்தை ப்ராயிலர் கோழியாத் தான் வளரும். இது ஒன்னுல இருந்து அஞ்சாவது வரைக்கும் செல்லும். ஆறாவதுக்கு மேல, நாட்ல என்ன நடக்குது, அது அரசியலோ விஞ்ஞானமோ, விளையாட்டோ என்ன வேணும்னாலும் இருக்கட்டும், அதப் பத்தி தெரிஞ்சிட்டு வாங்கனு சொல்லலாம். நான் உக்காந்துகிட்டு தாங்க இத எழுதறேன். எனக்கே இவ்ளோ தோனுதுனா, ரூம் போட்டு, மல்லாக்காப் படுத்து, குப்புறப் படுத்து, நின்னு, நடந்து, உக்காந்து யோசிக்கிறவங்களுக்கு இன்னும் நெறயவே ஐடியா வரும்.

"பட்டு, ஸ்கூல்ல சிங்கிங் காம்பெடிஷன்ல ஃப்ஸ்டு ப்ரைஸ் வாங்கினியே, அந்த பாட்ட அங்கிள்க்கு பாடி காட்டுமா" அப்டீனு சொல்றத விடனும். "எங்க பையன் மேத்ஸ்ல எப்பமே செண்டம்" அப்டீனு கணக்கே வராத பையனோட அம்மாகிட்ட சொல்றத அறவே ஒழிக்கனும்.

அடுத்து நம்ம சிலபஸ்க்கு வருவோம். நாம பத்தாவதுல படிச்சத இப்போ இருக்ற குழந்தைங்க அஞ்சாவதுல படிக்குதுனா, (இத சொல்லும் போதே எனக்கு ரொம்ப வயசான மாதிறி ஒரு பீலிங்கு, அது உண்ம தானடானு சொல்றீங்களா? :-) ) அதுக்கு அர்த்தம், இப்போ நெறய புதுசு புதுசா கண்டுப்பிடிச்சிருக்காங்க. அவ்ளொ தான். சிலபஸ் எல்லாம் ஒன்னும் அதிகம் இல்லேங்க. நாம படிச்சத விட இப்போயிருக்ற புள்ளைங்க நெறய படிக்றதுல தப்பு இல்ல. ஆனா, அதச்சொல்லித்தற வாத்தியாருங்கள்ல எத்தன பேருக்கு இந்தப் புது சிலபஸ் புரியுதுனு தான் மேட்டரே.

ரெயில்வே ரிசர்வேஷன் ஃபார்ம் ஃபில் பண்ண தெரில, வௌச்சர்னா என்னனு தெரில, இது தெரில, அது தெரில ஆனா, சிலபஸ் மட்டும் அதிகமா இருக்குனு சொல்றதுல அர்த்தமே இல்லேங்க. சரியாச் சொல்லித்தற வாத்தி இல்ல. அவ்ளோ தான். Integration, differentiation, taylor approximation, rho, vega, tau derivatives எல்லாம் நான் படிக்கும் போது, இத எல்லாம் எதுக்குத் தான் டா படிக்றோம்னு எரிச்சலோடு தான் நானும் படிச்சேன். அப்போ புரியல. இன்னைக்கு என்னோட ப்ரோக்ராம்ல taylor approximationம், differentiationம் இருக்குனு சொன்னா நீங்க நம்பித் தாங்க ஆகனும். புரியாம படிக்க சொல்லித்தந்தத தப்புன்னும் சொல்ல முடியல. ஏனா அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தாங்க. இப்போ எனக்கு இத பத்தி நல்லாவேத் தெரியும். ஆனா இங்க வாங்குற சம்பளம் பள்ளிலயோ, கல்லூரிலயோத் தந்தா பாடம் நடத்த நான் தயார்.

இத படிக்றவங்க பலப்பேர் ஏன்ஸ்டீனோட "தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி" பத்தி படிச்சிருப்பீங்க. சொல்லப்போனா, அது ஆறாவதோ, எட்டாவதோ படிக்கும் போதே வந்திச்சு. கரெக்டா? ஒரு சின்ன கேள்வி. ஒரு ரெண்டு கைக்கடிகாரங்கள் எடுத்துக்குவோம். ரெண்டு கடிகாரத்திலும் ஒரே டைம செட் பண்ணிடுவோம். அதாவது ரொம்ப ரொம்பச் சரியா ஒரே டைம். இதுல ஒரு கடிகாரத்த ஒரு செயற்கைக்கோள்ல வெச்சு அனுப்பிடுவோம். அது உலகத்த விட்டு ஒரு அம்பது வருஷம் வெளிலயே சுத்தட்டும். அம்பது வருஷம் கழிச்சுப் பாத்தா ரெண்டு கடிகாரமும் வெவ்வேரு டைம காட்டும். வெளில சுத்தின கடிகாரம் கொஞ்சம் டைம குறைவாக் காட்டும். எப்படி தெரியுமா? ஒன்னுல பேட்டரி காலி ஆச்சுனு மொக்கத்தனமா எல்லாம் சொல்லக்கூடாது. ஒரு பொருள் பயணிக்குதுன்னா அது டைம சேமிக்கும். ஆக ஒரு மனுஷன் அந்த செயற்கைக்கோள்ல இருந்திருந்தா, அவன் திரும்பி உலகத்துக்கு வரும் போது உலகம் வெள்ளிக்கிழமையா இருக்கும், ஆனா அவனோட கடிகாரம் படி அது இன்னும் வியாழக்கிழமையாக் கூட இருக்கலாம், ஆனா கண்டிப்பா, உலகத்துல இருக்கிற கடிகாரத்த விட டைம் கம்மியாத்தாங்க காட்டும். அது தாங்க தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி. இதெல்லாம் கண்டுப் பிடிக்கலேனா, இன்னைக்கு சந்திராயன் - 1 எல்லாம் பறந்திருக்காது. இத புரிஞ்சி எத்தன பேருங்க படிச்சோம்?

Teaching is not a profession, its a service அப்டீனு சொன்னா வேலைக்காகாது. IT industryய விட அதிகமா இல்லேனாலும் அதுல முக்காவாசி சம்பளத்த வாத்திக்கு தந்தா, பள்ளிலயும், கல்லூரிலயும், பசங்க எதிர்காலம் நல்லவே இருக்கும். ஆனா, இங்க தாங்க ட்விஸ்டு, அவ்ளோ அதிகமா சம்பளம் தரனும்னா, பள்ளிலயும், கல்லூரிலயும் ஃபீஸ் அதிகமாயிடும்.

ஆக இதுக்கு தீர்வு என்னனு கமெண்டுங்க.


Wednesday, November 05, 2008

பச்சை நிறமே பச்சை நிறமே

காலை 8:00

"ஆஹா, எவ்ளோ அழகா இருக்கு, பச்சப் பசேல்னு", புல்லைப் பார்த்து ரசித்தபடி ஆஃபீஸ்ல காலடி வைக்கும் போது, புல்லை வெட்டுகிற பெண்கள், என் கண்களில். "இவங்களும் பச்சப் புடவ கட்டியிருக்காங்க. அது சரி, இவங்களுக்கு எப்போமெ, பச்சப் புடவ தானே" என்று எனக்குள் சொல்லிக்கொண்டு, உள்ளே நுழைய, ஒரு பச்சோந்தி இடமிருந்து, வலம் போனது. நேற்று வரையில், சாம்பல் நிறத்தில் சுற்றிக்கொண்டிருந்தது, இன்று பச்சை நிறத்தில். "அது சரி, அப்பப்போ கலர மாத்தறவன் தானெ நீயி", என்று இன்னொரு முறை எனக்குள் முனுமுனுத்துக்கொண்டு, ஒன்றும் நடக்காதது போல் என்னுடைய சீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில்...

"அட இன்னுமாடா உன் சீட்டுக்கு போகல, எவ்ளோ நேரம் தான்டா நடப்பே" என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழாமல் இல்லை. அதற்கு என்னங்க செய்ய முடியும்? நம் படத்தின் கதாநாயகனை முதல் ஷாட்டில் காலைக் காட்டிவிட்டு, பிறகு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து சண்டைப் போடவிட்டு, அந்த அனல் பறக்கும் சண்டையை முடித்தவுடன் ஷாட்டை அங்கு கட் செய்து, சுவிஸில ஓபன் செய்து தீபிகா படுகோனேவுடன் ஒரு பாட்டு வைக்கவா முடியும? இருக்கிற பட்ஜெட்டில் இவ்வளவுதாங்க முடியும். அட கதாநாயகன் யாருன்னு கேக்கறீங்களா? நீங்க தாங்க. ஆக இந்தக் கதையில் எங்கெல்லாம், 'நான்' அல்லது 'என்' என்று சொல்கிறேனோ, அங்கெல்லாம் உங்களை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். சரிங்களா? இனி மேல படிங்க.

என்னோட சீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் என்னுடைய, செல்ஃபோனில 'பச்சை நிறமே பச்சை நிறமே' பாட்டு பாடியபடி ஒரு கால். இளம்பச்சை, கரும்பச்சை, பாட்டில் க்ரீன், கிளிப்பச்சை, அவ்வளவு ஏங்க, சினேகா பச்சையைக் கூட விடாமல், எல்லா வகையான பச்சை நிறங்களிலும் பச்சைப் பச்சையாகப் பேசும் விஜயின் ஃபோன் கால். இல்ல இல்ல வெறும் மிஸ்டு கால். எல்லா விதமான பச்சை ஷேடுகளில் பேசுவதால் அவனுக்கு இந்த ரிங்டோன். அவன் மிஸ்டு கால் தந்தால் "இங்க தான்டா இருக்கேன், வெயிட் பண்ணு வரேன்" என்று அர்த்தம். திரும்பிப் பார்த்துத் தேட, அவன் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

எனக்கு ஒரு நிமிடம் பித்துப் பிடித்தது போல் இருந்தது. இது வரைக்கும், ராமராஜன் கூட, இந்த கலர் காம்பினேஷன்ல வந்ததில்ல. பச்சை சட்டை, பச்சை பேண்டு. பச்சை சட்டை ஒகே. ஆனா பச்சை பேண்டு? நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது, என்னோட பயாலஜி சார், ஒரு நாள் சிவப்பு நிறத்தில் பேண்ட் அணிந்த போது, "ஏன் சார், இந்த கலர்ல பேண்டு பிட்டு எங்க சார் கிடைக்குது" என்று கேட்டவன் நான். அதற்கு அவர், பதில் சொல்லாமல் சிரித்துவிட்டு சென்றார். அதன் பின்னர் பல கடைகளில் சிவப்பு நிறத்தில் பேண்டு பிட்டோ, அல்லது ரெடி மேட் பேண்டோ கிடைக்குமா என்று பல வருடங்கள் தேடியது தனிக்கதை. சரி இவன் பச்சை பேண்ட எங்கே வாங்கினான் என்று தெரிந்து கொண்டு அங்கேயேச் சென்று சிவப்பு பேண்டு கிடைக்குமா என்று பார்த்து விடலாம் என அவனிடம் கேட்டேவிட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லாமல் வரும் வழியில பார்த்த பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்.

சரி, இடத்திற்க்கு போகும்போது, "குட் மார்னிங்"னு சொல்லிவிட்டு அனிதா இந்த பக்கமாக போனாள். திரும்பி "குட் மார்னிங்"னு சொல்வதற்க்குள் வாய் அடைத்துப் போனேன். அவளும் பச்சை நிற சல்வாரில். எனக்குள் சிறிது பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. உள்ளே நுழைந்ததும் சுவரெங்கும் பச்சை. ஒரு வேளை பாசி பிடித்திருக்குமோ? இல்லை இன்டீரியர் டெகரேஷனாக இருக்குமோ? இல்லை பச்சை நிறத்தை சுவற்றில் அடித்தால் லாபம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று அதிகாலையில் டிவியில் எவனாவது சொல்லித் தொலைத்திருப்பானோ என பயத்துடன் கூடிய கேள்விகளுடன் மேலும் நடந்தேன்.

சிறிது யோசித்ததில், 'ப்ளு டே' என்று ஒரு நாள் எங்க ஆஃபீஸ்சில் கொண்டாடியது நினைவிற்க்கு வந்தது. அன்று அனைவரும், நீல நிறத்தில் சகலமும் அணிந்து ஆஃபீஸ்சிற்க்கு வந்ததும் நினைவிற்க்கு வந்தது. ஓ ஒருவேளை இன்று 'க்ரீன் டே'வாக இருக்குமோ என்று சரவணன் இருக்குமிடத்திற்க்கு சென்றேன்.

அவனிடம், "என்னடா சரவணன், இன்னைக்கு எதாவது 'க்ரீன் டே'யா"? என்று கேட்க, அவன் பச்சை சீட்டில், பச்சை உடை அணிந்து, பச்சை ஆப்பிளை வாய் நிறைய மென்று கொண்டிருந்தான். "என்ன கொடும சரவணா இது" என்று கேட்டுவிட்டு, ஒருவேளை உண்மையாகவே 'க்ரீன் டே'வாக இருக்குமோ என்று எனது மெயில் பாக்ஸ்சில் ஒரு முறை பார்த்துவிடலாமென்று என்னுடைய சீட்டிற்க்கு வந்தேன்.

வந்ததும் அதிர்ச்சி. என்னோட சீட்டு மட்டுமில்லை, எனது கம்ப்யூடரும் பச்சை நிறத்தில். மெயில் பாக்ஸ்சும் பச்சை நிறத்தில். ஒவ்வொரு மெயிலும் பச்சை நிறத்தில். 'க்ரீன் டே' பற்றி மட்டும் ஒரு மெயிலும் இல்லை. கண் பார்வை கோளாறுகளில் நான் படித்தது மையோப்பியா மற்றும் ப்ரொடனாப்பியா. இவை இரண்டில் ஒன்று பச்சை நிறத்தை மட்டும் அதிகமாக காட்டும், மற்றொன்று சிவப்பு நிறத்தை மட்டும் அதிகமாக காட்டும். வயதாக ஆக தூரப்பார்வை தானே வரும்? இதென்னடா புதுசா என்று பயந்து கொண்டு வெளியே வர, என் கண்களில் எனது உடையும் பச்சை நிறத்தில் தெரிந்தது.

சிதறடித்துக்கொண்டு என்னுடைய இடத்திலிருந்து வெளியே வர, என் கண்களில் அனைவரும், அனைத்தும் பச்சை நிறத்தில். எனது கைகளை பார்த்ததில், அவையும் பச்சை நிறத்தில். இது வரையில் சந்தேகமென்று நினைத்திருந்த மையோப்பியா அல்லது ப்ரொடனாப்பியா இரண்டில் ஒன்று என்னைத் தாக்கியுள்ளதென்பது உருதியானது.

பயம் ஒருபுறம் இருக்க, பச்சைத் தரையில் வேகமாக ஓடி, பச்சை நிறப் பலகையில், பச்சை நிறத்தில் 'ஆண்கள்' என் எழுதியிருந்த பச்சைக் கதவைத் திறந்து பச்சைக் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்க்க, எனது முகமும் 'ஹல்க்'கைப் போல் பச்சை நிறத்தில் இருந்தது. பச்சைக் கண்ணாடி முன் முழுமையாக சகலமும் பச்சை நிறத்தில் நின்று கொண்டிருந்தேன். வேறு வழியின்றி, பச்சை முகத்தைக் கழுவ நினைத்து, பச்சைக் குழாயிலிருந்து பச்சை நிறத்தில் வந்த நீரை எனது வலது பச்சைக் கையில் நிறப்பிக்கொண்டு, எனது இடது பச்சைக் கையால் எனது பச்சைக் கண்ணாடியை கழற்ற உலகம் அழகானது.

Monday, November 03, 2008

புரியாத புதிர்- பாகம் 1

அறியாமையா என்னனு தெரியலை, எனக்கு பல விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. அப்படி பல விஷயங்கள் இருக்கிறதனால இந்தப் பதிப்ப, பாகம் 1 அப்படின்னு பேரு வெச்சிருக்கேன்.

இலங்கைத் தமிழர்களுக்கான சினிமாத்துறை மக்கள் உண்ணாவிரதம்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் இப்படி பல பேர் பேசிட்டுப்போனாங்க. இது ஒரு உணர்ச்சிய வெளிப்படுத்திற போராட்டம்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு? இவங்க இங்க பேசறத பாத்து, இலங்கை அரசாங்கம் "ரஜினி சொல்லிட்டாரு, கமல் சொல்லிட்டாரு, மற்றும் பல நடிகர்களெல்லாம் சொல்லிட்டாங்க. அதனால போர நிறுத்திட்டு வீட்டுக்கு வாங்கடா" அப்படினு இராணுவத்திடம் சொல்லப்போறதில்ல.

இது, உண்ணாவிரதம் இருந்த சினிமாத்துறை மக்களுக்கும் நல்லாவே தெரியும். மேடை போட்டு பேசி பன்சு டயலாக் அடிக்கும் போது, ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பாட்டம் பண்ணி சிரிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆஹா மக்களே, இந்தக் கூட்டம் எதுக்குனே மறந்துட்டீங்களே.

காவிரிப் பிரச்சனை இருக்கும் போது நெய்வேலிக்கு போய் மின்சாரத்தை நிறுத்தினாங்க. ஒகேனக்கல் பிரச்சனையில் சினிமாத்துறைல இருக்கிறவங்க உண்ணாவிரதம் இருந்தாங்க. இப்போது இலங்கைப் பிரச்சனையிலும் இராமேஸ்வரத்துல, சென்னைல மேட போட்டும், உண்ணாவிரதமும் இருந்தாங்க. ஆனா எல்லா சம்பவங்களிலும், ஒன்னுமே நடக்கலேங்க. அடுத்த நாள் செய்தியிலும், பத்திரிக்கையிலும் இவங்க, அவங்க பேசினாங்கனு படம் வந்ததே தவிர, பிரச்சனைக்கு தீர்வு வரல.

ஆக பிரச்சனைக்கு இது தீர்வு இல்லேனு முடிவாகுது. அப்போ என்ன பண்ணனும்? ஒரு வேள சேரன் சொன்ன மாதிரி, "இந்த பிரச்சனை தீரும் வரை இனி தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்", அப்படினு வாக்குறுதி எடுத்துக்கிட்டா? எடுத்த அடுத்த விநாடி இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு. இத சேரன் இராமேஸ்வரத்துலயே தெள்ளத்தெளிவா, எல்லோருக்கும் புரிகிற மாதிரி, நெத்தில செம்மட்டையால அடிச்சு சொன்னாரு. அவருக்கு ஒரு சபாஷ். ஆனா இத டி.வில, நேர்ல, இண்டெர்னெட்ல எல்லாம் பாத்துட்டு கூட, சென்னைல நடந்த உண்ணாவிரதத்துல பன்சு டயலாகுக்கு எதுக்கு கைத்தட்டி, விசில் அடிச்சு, சிரிச்சீங்க ரசிகர் பெருமக்களே?

எனக்கு சத்தியமா புரியல. உங்களுக்கு புரிஞ்சா கமெண்டுங்க.