Saturday, November 21, 2009

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு - 2

முதல் பகுதி

அதான் E கிடைத்துவிட்டதே என்ற சந்தோசம் ஒரு இரு நிமிடங்கள் கூட இருந்திருக்கவில்லை. யாரோ இரண்டு பேர் அவர்களுக்கு வந்த சீட்டுகளை மாற்றிக் கொண்டு விட்டதால் ஆரம்பித்தது அவலம். வரிசையில் நிற்கவேண்டிய கட்டாயம். முடிந்தது இனி என முடிவானது. மறுபடியும் நான் செல்லும் போது அங்கு ஒரே சீட்டு தான் இருந்தது. 'கமான் டேக் ஒன்' என்று எனது வயிறெறிச்சலை கட்டிக் கொண்டார். இருந்த ஒன்றை எடுத்துக் கொண்டேன். அதில் L என்றிருக்க நடக்க ஆரம்பித்தேன் தூரத்தில் இருக்கும் பட்டறையை நோக்கி.

இங்கே நான் சில விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும். எனது அக்கா கல்லூரியில் எனக்கு இரண்டு வருட சீனியர். அவர் Electricals and Electronics Engg [EEE] டிபார்ட்மெண்ட். அவர் அதிபுத்திசாலி என்பதால் அவருக்கு அவருடைய டிபார்ட்மெண்ட் HODயிடம் மிக நல்லப் பெயர். எனக்கு அங்கிருக்கும் மிஷன்களின் பெயர்கள் கூட சரிவரத் தெரியாது. எந்த கேள்விற்கு எங்கே போய் எந்த மிஷனை ஓட்ட வேண்டும் என்பது கூட சரிவரத் தெரியாது. அன்று எங்களுக்கு வைவாவிற்கு வந்தவர் EEEயின் HOD தான். அக்காவின் தயவில் ஏற்கனவே எனக்கு அவரிடம் நல்ல பெயர் இருந்து வந்தது.

அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குலுக்கல், வழக்கம் போல் கடைசியாக மீதமிருந்த ஒன்று தான் எனக்கு. கடைசியாக மிச்சமிருந்த ஒரு சீட்டை எடுத்தேன். ஏதோ ஷண்ட் மோட்டார் பற்றிய கேள்வி என்று நினைக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன்? இதை எளிதாக செய்து கிழிக்கலாம் என்றா? அதெல்லாம் இல்லை. இதே ஷண்ட் மோட்டார் தான் என்னுடைய மாடல் பரிட்சையிலும் வந்தது. அதனால் இந்த ஷண்ட் மோட்டார் எங்கே இருக்கிறது என்பது மட்டும் தெரியும். சரியாக அங்கே சென்று நின்று கொண்டேன். அப்போது லேப் அசிஸ்டெண்ட் ஒருவர், 'ஏன்பா அங்க நிக்குற? அங்க போலாம்ல' என்றார். அவ்வளவு தான். சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. நான் சரியான மிஷனில் தான் நிற்கிறேனா என்று. ஒரு முறை அவர் சொன்ன மிஷினைப் பார்த்தேன். அது அச்சு அசலாக இருந்தது. 'சார்...' என்று இழுக்க, 'சரி இது தான் உன்னோட ராசியான இடம்னா நின்னுகோ, இரண்டும் ஒரே ஷண்ட் மோட்டார் தான்', என சொன்ன பிறகு தான் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டேன். சரியான இடத்தில் தான் நிற்கிறோம் என. இனி இருக்கும் வயர்களை எங்கே மாட்ட முடியும் என்று லாஜிக்காக யோசித்து (இதில் யோசித்து யோசித்து செய்த ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன்) அங்கே இங்கே என்று மாட்டிவிட்டு, குல தெய்வங்களை எல்லாம் ஒன்றிற்கு நாற்பதேழு முறை வேண்டிக் கொண்டு மோட்டாரை ஆன் செய்தேன். இருக்கும் மீட்டர்களில் உள்ள எண்களை எழுதி, ஒரு முறை கேள்வியைப் படித்து, அதிலிருந்து ஷண்ட் மோட்டர் எதற்கு தேவைப் படுகிறது என்று தெரிந்துக் கொண்டு அதையே எழுதி, ஒரு வழியாக செய்து முடித்தேன். அடுத்தது வைவா.

வைவாவில் HODயும் எனது ஆசிரியையும் இருந்தார்கள். எனது ஆசிரியைக்கு எனது அக்கா பற்றி தெரியாது. எனது அக்காவிற்கு ஆசிரியையை விட அதிகமாகவே தெரியும் என்பது வேறு கதை. ஒருவேளை எனது அக்காவைப் பற்றி தெரிந்திருந்தால் அமைதியாக இருந்திருக்கக் கூடும். தெரியாததனால், 'சார் இவனைக் கொஞ்சம் நல்லா கேள்வி கேளுங்க சார், ரொம்ப தான் பேசறான்', என்று HODயிடம் சொல்ல, அவர், 'ச்சே இந்தப் பையனுக்கு எல்லாமே தெரியும்' என்று அவர் சொல்ல எனக்குப் பீதியில் இங்கும் அங்குமாய் படித்தவை எல்லாம் மறந்தே போனது.

பின்னர் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மாட்டைப் பற்றி கேட்டால், மரத்தைப் பற்றி சொல்லிவிட்டு 'அந்த மரத்தில் தான் எசமான் அந்த மாட்டைக் கட்டி வெச்சிருந்தாங்க' என்பது போல் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அவர் கேட்டதில் இன்னும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் கேள்வி - saturation.

'வாட் ஈஸ் சேச்சுரேஷன்' என்று கேட்டார்.
படித்ததையெல்லாம் மறந்தாச்சு. இதில் படிக்காததை எப்படிச் சொல்ல? அமைதியாகவே இருந்தேன்.
அவரே சொன்னார், 'இப்போ நீ எல்லாத்தையும் படிச்சுட்டு வந்திருக்கே...'
'ஆமாம் சார்'
'இப்படி த்ரெஷோல்ட் லெவெலுக்கு அதிகமா படிச்சா ஒரு நேரத்துல அதுக்கு மேல படிக்க முடியாது'
'ஆமாம் சார்'
'ஒரு லெவெலுக்கு மேல போக முடியாத போறது தான் சேச்சுரேஷன்'
'ஆமாம் சார்'
'நீ அந்தளவுக்கு படிச்சதுனால தான் இப்போ உனக்கு எதுவுமே நினைவுல இல்ல'
'ஆமாம் சார்'

என்ன நினைத்தாரோ தெரியவில்லை மார்க் மட்டும் நல்லாவே வந்திருந்தது.

ஒரு கட்டுரையில் படித்த நினைவு - நமக்கு என்ன வேண்டும் என்று பூவா தலையா போடும் போது, நாணயத்தை சுண்டிவிட்டு, அதை பிடித்துப் பார்ப்பதற்கு முன்பே, நமது மனதில் பூ அல்லது தலை இதில் இரண்டில் ஒன்று வேண்டும் என நினைத்திருப்போம். மனதில் எது வேண்டும் என்பது நாணயத்தைச் சுண்டி விடுவதற்கு முன்பே நமக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது பூ விழுந்ததா, தலை விழுந்ததா என்று பார்க்கத் தேவையில்லை. உண்மையில் சாய்ஸே தேவையில்லை.

8 comments:

sri said...

நாங்கெல்லாம் முழிசிருந்த நாட்களா விட தூங்கின நாட்கள் தான் அதிகம்......

ஏனா.................

எங்கம்மா பதில் தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொல்லுவாங்க....

Sankar said...

ஹா ஹா .. இந்தக் கதையை எவ்வளவு தபா பேசினாலும், படிச்சாலும் ஏனோ போரடிக்கவே மாட்டேங்குது மச்சி ..

ஸ்ரீ’யோட கமெண்ட் டாப்பு :-)

Truth said...

@ஸ்ரீ
:-) பின்னிட்டீங்க...

******************************
@சந்தி(ப்)பிழை
கரெக்ட் மச்சி. சஷி கல்யாணத்துல பாலாஜிய பத்தி சின்னி சொன்னது தான் நினைவுக்கு வருது :-)

புன்னகை said...

//அதில் L என்றிருக்க நடக்க ஆரம்பித்தேன் தூரத்தில் இருக்கும் பட்டறையை நோக்கி.//
இப்படி தான் இருக்கும்னு தோனுச்சு! ராசி அப்படி இல்ல? அதான்! :-)

//லாஜிக்காக யோசித்து//
இது என்ன புதுக்கதை??? ;-)

//'ச்சே இந்தப் பையனுக்கு எல்லாமே தெரியும்'//
இது 3rd meaning இல்லையே??? ;-)

//'நீ அந்தளவுக்கு படிச்சதுனால தான் இப்போ உனக்கு எதுவுமே நினைவுல இல்ல'//
பேசாம ஒன்னு செய்யலாம். உங்களையும் இப்படி நம்புற ஆட்களுக்கு ஒரு டோக்கன் சிஸ்டம் போட்டுடுங்க, refer பண்றதுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும். Top 10-ல என்னோட பெயரும் இருக்கும்னு நம்புறேன்! :P

Rajalakshmi Pakkirisamy said...

//'நீ அந்தளவுக்கு படிச்சதுனால தான் இப்போ உனக்கு எதுவுமே நினைவுல இல்ல'//

aaha... angaye aarambichiducha...

Truth said...

நன்றி புன்னகை
நன்றி ராஜி

Vidhya Chandrasekaran said...

ஷண்ட் மோட்டார். ஏதோ நினைவுகள்:)

Truth said...

நன்றி வித்யா :-)