Friday, May 29, 2009

ஓடி விளையாடி...

சின்ன வயதிலிருந்தே எனக்கு விளையாட்டு புத்தி மிக அதிகம். அதனால் தான் என்னவோ, ஒரு விளையாட்டையும் விட்டுவைக்காமல் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், டேபில் டென்னிஸ், வாலிபால், பேஸ்கட்பால், ஸ்னூக்கர், லாங்க் ஜம்ப், ட்ரிபிள் ஜம்ப் இன்னும் பல, என அனைத்து விளையாட்டுகளையும் அளவிற்கும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்த்து, நிஜ வாழ்க்கையில் எதிலும் பெரியதாக விளையாடியதில்லை. ஒவ்வொரு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் நான் விளையாடியவைகளை அலசியதில்...

நான் இப்போது சொல்லப் போகும் விளையாட்டை நீங்கள் இரண்டே இடத்தில் தான் பார்த்திருப்பீர்க்ள். ஒன்று ஒலிம்பிக்ஸ், மற்றொன்று மகாபாரதம்/இராமாயணம். இவ்விரண்டையும் தாண்டி சரித்திரத்தில் எங்களின் பெயரை பதிக்க நானும் எனது கசினும் இதை விளையாட ஆரம்பித்தோம். வில் அம்பு தான் அது. மகாபாரதம் பார்த்து அர்ஜுனின் தீவிர ரசிகர்களாகி, வீட்டைப் பெருக்க வைத்திருந்த தென்னங்குச்சியால் செய்யப்பட்ட துடைப்பங்களிலிருந்து அம்புகளும் (ஆமாங்க நிறைய) ஆளுக்கு ஒரு வில்லும் செய்து கொண்டோம். துடைப்பங்கள் பாதி காணாமல் போகும் போது நாங்களும் காணாமல் போனது தனி கதை.

அம்புகள் தரையில் தேய்த்துக் கூர் செய்யப்பட்டது. எதிரிகளைக் கொலை செய்ய வேண்டும் அல்லவா எங்களின் தென்னை அம்புகள், அதற்காகத் தான் இந்தக் கூர் செய்யும் வேலை. சிரிக்க வேண்டாம். கூர் செய்யும் போது கவனம் வேண்டும், இல்லையெனில் அம்பு உடைந்து விடும். உடைந்தால் மீண்டும் துடைப்பத்தைத் தேடும் போது மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. ஒரு தென்னங்குச்சியை வளைத்து நூலால் கட்டிப் பார்த்தோம், மற்றொன்றை ரப்பர் (தூய தமிழில் லப்பர் தானே?) பேண்டில் கட்டிப் பார்த்தோம். நூலை விட ரப்பர் பேண்டு வில்லிற்கு மிக அதிக ஆற்றல் இருந்ததினால் வீட்டில் ரப்பர் பேண்டுகளும் குறைய ஆரம்பித்தது.

இனி விதிகளை நிர்ணயிக்க வேண்டும். எங்களின் வில்லை எவ்வளவு வளைத்து அம்பு தொடுத்தாலும் அம்பு ஐந்து அல்லது ஆறு மீட்டர் தாண்டிச் செல்லவில்லை. மீறினால் புதிய வில்லைத் தயார் செய்ய வேண்டியிருக்கும். அதனால யாருடைய அம்பு அதிக தூரம் செல்கிறது என்று தான் போட்டியை முதலில் ஆரம்பித்தோம். பின்னர் இதன் மீதுள்ள மோகம் அதிகரித்ததால் சுய மூளையை கசக்கிப் பிழிந்து சுவாரசியமான சில விதிகளைப் புகுத்தினோம். சதுரங்கக் காய்களை ஆட்டத்தில் சேர்த்தோம். இராஜா, இராணி, மந்திரி, குதிரை, யானையை வரிசையாக நிற்க வைத்து, ஒரு பத்து அடி தூரத்திலிருந்து அவற்றை அடிக்க வேண்டும். எதை அடிக்கிறோம் (கொல்கிறோம்) என்பதை வைத்துப் புள்ளிகள். ஆட்டம் கலை கட்டியது. பின்னர் கூட்டம் கூடியது. இருவர் ஆரம்பித்த விளையாட்டைப் பின்னர் பக்கத்து வீட்டு பொடிசுகளுடன் விளையாடினோம்.

அடுத்த வருடம் நான் விளையாட சென்ற போது கடைகளில் ப்ளாஸ்டிக்கிலான வில்லும் அம்பும் விற்றுக் கொண்டிருந்தனர். கடைசி வரை சதுரங்கக் காய்கள் வில்-அம்பிற்காக உதவியதே தவிர நான் சதுரங்கம் ஆடியதாக நினைவில்லை. இது தான் எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் நாங்களே கண்டுபிடித்து விளையாடிய விளையாட்டு.

பின்னர் உண்மையாகவே சதுரங்கம் ஆட வேண்டும் என்று தோன்றிய வயதில் வீட்டில் சதுரங்கக் காய்களோ, சதுரங்க அட்டையோ இல்லை. இதற்கெல்லாம் பயந்தால் எப்படி என்று, எனது நோட்டு புத்தகத்தின் (நடு சென்டர் மாதிரி தான் இந்த நோட்டுப் புத்தகமும். பழைய பேப்பரை போடும் கடைகளில் நோட்டுப் புத்தகத்திற்கு ஒரு விலையும், புத்தகத்திற்கு ஒரு விலையும் இருக்கும். இரண்டும் ஒன்று என்று இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை) அட்டையை எடுத்துக் கொண்டு, அதில் சதுரங்க அட்டையைப் போல வரைந்து பென்சில் முழுவதும் தேய்ந்து விடும் அளவிற்க்கு கருப்பை அடித்து சதுரங்க அட்டையை தயார் செய்தேன். பின்னர் சின்னச் சின்ன சதுரமான அட்டைகள் (சுமார் 2 செ.மீ x 2 செ.மீ) வெட்டி அதில் சிப்பாயிலிருந்து, இராஜா வரையில் முழு சேனையும் வரைந்து, வெள்ளை கருப்பு என தெளிவாகத் தெரியும் பொருட்டு கருப்பு நிறக் காய்களுக்கு கருப்பை அடித்ததில் சதுரங்கம் ஆட அனைத்தும் தயார், ஆடுவதற்கு எதிராளி தவிர.

இப்படிப்பட்ட கேவலமான ஒரு சதுரங்க அட்டையில் ஆட அனைவரும் மறுக்க, மீண்டும் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவர்களை (நான் நான்காவது படித்துக் கொண்டிருக்கும் போது) அழைக்க, அவர்களின் பெற்றோர், 'செஸ் விளையாடினா அறிவு வளரும்' என்று சொல்லி குழந்தைகளை அனுப்ப, நான் அந்தப் பாவப்பட்ட சிறுவர்களை ஏமாற்றி வெற்றி பெற்றது நினைவிருக்கிறது. வருடா வருடம் என்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் சதுரங்க அட்டையும், காய்களும் தரத்தில் உயர்ந்துக் கொண்டிருந்தது. இவற்றை பத்திரமாக வைத்துக் கொள்ள ஒரு சிறிய பெட்டியையும் செய்துக் கொண்டேன் (அதே நோட்டுப்புத்தக அட்டையில் தான்). சில வருடங்களுக்குப் பின்னர், என்னிடம் பலமுறை ஏமாந்து தோற்ற சிறுவன் என்னை விளையாட அழைக்க, நான் என்னுடைய சதுரங்கப் பெட்டியுடன் அவனது வீட்டிற்குச் செல்ல, அவன் புத்தம் புதிதாக பிரம்மாண்டமாக ஒரு சதுரங்க அட்டையுடன் காத்துக் கொண்டிருந்தான். அன்று தான் நான் கடைசியாக சதுரங்கம் ஆடியது.

ஆறாவது, ஏழாவது படிக்கும் போது அனைவரைப் போல் எனக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனது வகுப்பில் ஒரு பத்துப் பேரை வைத்துக் கொண்டு ஒரு டீம் அமைத்தோம். கிரிக்கெட் மட்டை இருப்பவன் தான் கேப்டன் என்று சொல்லி என்னுடைய நண்பன் ஒருவனை கேப்டனாக்கினார்கள், அனைவரும் சேர்ந்து. நோட்டுப் புத்தகங்களின் அட்டையில் மட்டும் கிரிக்கெட் மட்டை செய்ய முடிந்திருந்தால், நான் கேப்டனாகி இருந்திருப்பேன். பின்னர் வெயில் மழை என்று பாராமல் தீவிரமாக ப்ராக்டிஸ் செய்தோம். அக்கம் பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் ஒருவனைப் பிடித்து, அவர்களின் பள்ளி டீமோடு விளையாட முடிவெடுத்தோம். அனைத்துப் பள்ளிகளுடனும் விளையாடி ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டோம்.

பின்னர், ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றோம் என்று நினைவில் இருக்கிறது (அட விடுங்கப்பா, உண்மையாவே ஜெயிச்சியிருக்கோம்). அதன் பின்னர் படிப்பு படிப்பு என்று இருந்ததினால், பத்தாவது படிக்கும் போது கிரிக்கெட் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் மைதானத்தில் விளையாடியதை விரல் விட்டு எண்ணலாம். மொட்டை மாடியிலும், சிறிய சந்துகளிலுமே எங்கள் கிரிக்கெட் நடைபெற்றது. இதில் மூன்றாவது அம்பையர் வேறு! நாங்கள் விளையாடும் சந்தின் அருகில் இருக்கும் வீட்டின் ஜன்னலிலிருந்து பராக் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் மூன்றாவது அம்பையர். அவனை விட எங்களுக்கு தான் அதிகாமக தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் ஒரு 'அன்செர்டனிட்டி ஃபேக்டர்' வேண்டும் என்று, இப்படி ஒரு ஏற்பாடு.

அதன் பின்னர் சில நாட்கள் வாலிபாலிலும், ட்ரிபிள் ஜம்பிலும் எனது பள்ளியில் சிறந்து (உண்மையாகத் தான், செர்டிஃபிகேட் எல்லாம் இருக்கு) விளங்கி( வெளங்கிரும் இல்லை விளங்கி), கல்லூரியில் பெயருக்காக அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொண்டேன். இப்போது எனது விளையாட்டு முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டியுடனே முடிந்து விடுகிறது. இப்படி இருக்க சென்ற வாரம் எங்கள் அலுவலகத்தில் கூடைப்பந்து ஆடி, இரண்டாம் இடத்திற்கு வந்தது சந்தோஷமாகவே இருக்கிறது.

பி.கு.1:
சதுரங்க அட்டைக்குப் பின்னர், நான் நோட்டுப் புத்தக அட்டையில் பல சாதனைகளைச் (?) செய்திருக்கிறேன். முதலுதவிப் பெட்டி, புகைப்பட ஃப்ரேம், சின்னதாய் ஒரு வீடு (சரியாக படிக்கவும்), இப்படிப் பல. கடைசியாக செய்ய முயன்று செய்ய முடியாமல் போனது ஒரு மிதிவண்டி. உண்மையாகத் தான். சங்கிலி செய்யும் போது பொறுமையை இழக்க நேர்ந்தது. அதன் பின்னர் மரக்கட்டை மீது அளவிலாத ஆர்வம் வந்து ஒரு மேசையும், ஒரு கட்டிலையும் தனி ஆளாக செய்து முடித்ததை இங்கு சொன்னால் 'blowing my own trumpet' மாதிரி ஆகி விடும் என்பதால் சொல்லப் போவதில்லை :-)

பி.கு.2:
கூடைப்பந்து கூட சும்மா காமெடி கூடைப்பந்து தான். நின்ற இடத்திலிருந்து சரியாகக் கூடைக்குள் போட்டால், இரண்டு புள்ளி. ஓடி வந்து போட்டால், மூன்று புள்ளிகள். அப்படி. பெருசா சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்னும் இல்லை, எங்கள் வில் அம்பிற்கு ஒப்பிடும் போது.

12 comments:

புன்னகை said...

Me de 1st :-)

புன்னகை said...

//சதுரங்கம் ஆட அனைத்தும் தயார், ஆடுவதற்கு எதிராளி தவிர.//
அந்த நேரத்துல நீங்க நம்ம ஊர்ல இல்ல, நான் என்ன செய்றது? ;-)

//அதன் பின்னர் படிப்பு படிப்பு என்று இருந்ததினால்//
நம்பிட்டேன்!!! next...

//'அன்செர்டனிட்டி ஃபேக்டர்'//
அடங்கவே மாட்டீங்களா நீங்க?

//செர்டிஃபிகேட் எல்லாம் இருக்கு//
உங்க வீட்டு விலாசம் என் கிட்ட இருக்கு :-)

//பெருசா சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்னும் இல்லை, எங்கள் வில் அம்பிற்கு ஒப்பிடும் போது.//
கண்டிப்பா!!! பின்ன என்ன? நீங்க யாரு!!! ஹி ஹி ஹி... இதுக்கு மேல முடியாது பா! :P

self - damageல உங்கள மிஞ்ச யாருமே இல்ல! :-)

Vidhya Chandrasekaran said...

:)

ப்ரியா கதிரவன் said...

nice nostalgic post....
irunthaalum comment kettu vanguradhu konjam jasti thambi!

ராமலக்ஷ்மி said...

//சிரிக்க வேண்டாம். //

முடியவில்லை:))!

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்:)!

sujatha said...

Script is so good. simply superb

அ.மு.செய்யது said...

நீங்க‌ புனேல‌ எங்க‌ இருக்கீங்க‌ தல‌..

நானும் அங்க‌ தான் குப்ப‌ கொட்டிட்ருக்கேன்.

Truth said...

என்ன கொடுமைங்க, நான் கூடைப்பந்து கெலிச்சிருக்கேன்னு சொன்னதுக்கு ஒருத்தரு கூட வாழ்த்தவே இல்ல. ஒரு வேலை காமெடில அது மறைந்து போச்சோ?

Truth said...

வாங்க புன்னகை.
//self - damageல உங்கள மிஞ்ச யாருமே இல்ல! :-)
இத இப்படி வேற நினைச்சிக்குவாங்களா?

:-)

சிரிச்சுட்டுப் போனதுக்கு நன்றி வித்யா. :-)


ப்ரியா அக்கா, நன்றி, கமெண்டுனதுக்கு. சேட்ல சொன்னா மறந்து போயிடும்ன்னு தான் சேட்ல சொன்னத கமெண்டுங்கனு சொன்னே :-)

Truth said...

@ராமலக்ஷ்மி
//நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்:)!
ரொம்ப நன்றிங்க.

@மனு
//நீ எந்த விளையாட்டை பற்றி சொல்றே??? (இல்ல இல்ல...யாருடன் விளையாடின விளையாட்டை நீ சொல்றே???)

பதிவு முழுக்க உங்க கேள்விக்கான பதில் தானே இருக்கு. அப்புறம் என்ன கேள்வி? நல்லா கேக்றாங்கயா கேள்விய...

Truth said...

@சுஜாதா.
நன்றி அக்கா :-)

Truth said...

@அ.மு.செய்யது
//நீங்க‌ புனேல‌ எங்க‌ இருக்கீங்க‌ தல‌.. நானும் அங்க‌ தான் குப்ப‌ கொட்டிட்ருக்கேன்.

நீங்க எதுக்கும் இத ஒரு முறை படிச்சுடுங்க. நான் எங்க இருக்கேன்னு உங்களுக்கு தெரிஞ்சுடும்.