Sunday, March 29, 2009

எனது பெயர் நாகவள்ளி : பாகம் 2

பாகம் ஒன்று

இரவு எட்டு மணி:
இராஜன் தனது இரு கைகளையும் பிசைந்து கொள்ள அவனது கைகள் முழுவதும் இரத்தக் களரியாக மாறியது. எனக்கு அதிர்ச்சி. கைகளில் எப்படி இரத்தம்? முன்னமே கைகளில் காயம் இருந்திருக்குமோ? இதை நமது கேமராக்கள் பதிவு செய்யத் தவறியிருக்குமோ? என எனக்குள் ஏகப்பட்டக் கேள்விகள்.

'யாரு தாயீ?' என விடையைத் தெரிந்துக் கொண்டே கேட்டாள் ஒரு எழுபத்தைந்து வயதுக் கிழவி.
'எனது பெயர் நாகவள்ளி', என்றான்.
'உனக்கு என்ன வேணும் தாயீ?', ஒரு பயம் கலந்த நடுக்கத்துடன் அதே கிழவி கேட்டாள்.

நாகவள்ளியாக இருந்த இராஜன் கேட்டது அனைத்தும், ஏற்கனவே அவனது தாய் தயாராக சமைத்து வைத்தது தான். கிட்டத்தட்ட பத்து பேர் உண்ணக்கூடிய அளவிற்கு அவன் தனியாக உண்டான். இரத்தக் கைகளால் உண்டு நடு நடுவே எச்சிலுக்குப் பதிலாக இரத்தத்தைத் துப்பவும் அவன் தவறவில்லை. எனது கேமெராக்கள் இதில் எதையும் பதிவுச் செய்யவும் தவறவில்லை. இவனிடம் பேசக் கூட எனக்கு சற்றே தயக்கமாகத் தான் இருந்தது. ஏதோ ஒரு திகில் படத்தை நேரில் பார்த்த உணர்வு எனக்கு. சென்னைக்குத் திரும்பிச் சென்ற பின்னர் பதிவு செய்ததைப் பார்த்து இதை ஆராயலாம் என்று முடிவு செய்தேன். அவனது களேபரம் சுமார் முப்பது நிமிடங்கள் ஓடியது. பின்னர் இராஜன் மயங்கி விழுந்தான்.

'பார்த்தீர்களா? இப்படிப்பட்ட அமானுஷ்ய சக்திகளுடன் நம்முள் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இராஜனைப் போலவே உங்களுக்கு யாராவது தெரிந்திருந்தால் கீழே தெரியும் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். இராஜனைப் போன்று அமானுஷ்ய சக்தியுடன் வாழும் வேறொருவருடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். வணக்கம்' என்று கூறி, ஒரு வாரத் தொடருக்கு வேண்டியதை பதிவு செய்து கொண்டு முடித்தேன்.

அன்று இரவு, வேலூர் விடுதியில்:
'என்ன சார் இதெல்லாம்', தாமு கேட்டான்.
'இது வெறும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டின்னு சொல்லி ஒதுங்கிக்க முடியாது தாமு. இட்ஸ் சம்திங் ஃபிஷ்ஷி'
'எனக்கு புரியல சார், எத்தனையோ கேஸ் ஹேண்டில் பண்ணியிருக்கீங்க. இது அப்படி என்ன சார் கஷ்டம்?'
'பல கேள்விகள் இருக்கு தாமு. கைகளத் தடவும் போது எதுக்கு இரத்தம் வரணும்? அதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட அவன் அவனோட நண்பர்களோட பேசிக்கிட்டு தானே இருந்தான்?'
'ஆமா சார். இராஜனோட எல்லா மூவ்மெண்ட்ஸ் நம்ம கேமரால இருக்கு. அவன் எங்கேயும் போய், எதுவும் எடுக்கல. அதுக்கு நம்ம கேமெராமென் காரண்டி.
'ஒரு மனுஷனால எப்படி பத்து பேரு சாப்டுற அளவுக்கு சாப்பிட முடியும்? வாயில இருந்து எப்படி இரத்தம் வரும்? சாப்பாடு ஐடெம்ல எதாவது இரத்தம் கலந்து இருப்பாங்களா?'
'இல்ல சார். அவங்க கொண்டு போனத எல்லாம் நாங்க ஒரு முறை செக் பண்ணினோம். வெறும் ட்ரை ஃபுட் தான் சார்'
'ம்ம்ம். ஒன்னுமே விளங்கல தாமு. நான் ஒன்னு பண்ணறேன். இதே ஊருல, இராஜனுக்குக் கூடத் தெரியாம ஒரு மாசம் தங்கி அவனோட செயல்களைக் கண்கானிக்கப் போறேன். அடுத்த மாசம், அமாவாசைக்கு அடுத்த நாள் வீ வில் ப்ரேக் ஆல் த பசுல்ஸ்'
'ஷூர் சார்'

நான் எனது முழு வேலையாக இராஜனை ரகசியமாகத் தொடர்ந்தேன். இராஜனுடைய வாழ்க்கை மிகவும் எளிமையாகத் தான் காணப்பட்டது. அவனுண்டு வயலுண்டு என்றிருந்தான். அவனைப் பற்றி அவனுடைய நண்பர்களிடம் கேட்டுப் பல உண்மைகளைக் கண்டறிந்தேன். நாகவள்ளியும் இராஜனும் காதலித்திருந்தார்களாம். சாதிப் பிரச்சனையின் பெயரில் அவர்களின் காதலை இராஜனின் வீட்டில் சம்மதிக்கவில்லையாம். வேறு வழி தெரியாமல் நாகவள்ளி தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் பின் இராஜனின் உடலில் நாகவள்ளி புகுந்து கொண்டாளாம். மற்றபடி இராஜனின் வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்திருக்கிறது. இதிலுள்ள சந்தேக முடிச்சுகளை அவிழ்க்க நான் ஒரு மன நிலை ஆலோசகரைச் சந்தித்தேன்.

மன நிலை ஆலோசகரிடமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் - நாகவள்ளி இறந்து போனது அவனது உள்மனதை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அவனது உள் மனம், நாகவள்ளியின் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நாகவள்ளி இறந்து போன நாளன்று, இராஜனின் உள் மனது அவனது மூளையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இது இராஜனுக்குத் தெரிவதில்லை. இராஜனின் உள் மனதால் வெறும் முப்பது நிமிடங்கள் மட்டுமே அவனது மூளையை ஆக்கிரமிக்க முடிகிறது. அதனால் முப்பது நிமிடங்களுக்குப் பின்னர், நாகவள்ளி வெளியே சென்றுவிடுகிறாள். அதாவது இராஜனின் மூளை விழித்துக் கொள்கிறது.

இராஜனின் உடம்பிலிருந்து நாகவள்ளியை விரட்ட வேண்டுமெனில் இராஜனின் உள்மனது இராஜனை முப்பது நிமிடங்கள் ஆட்கொள்ளும் போது, அந்த முப்பது நிமிடங்களுக்குள் இராஜனின் மனதை விழிக்க வைக்க வேண்டும். அதற்கு அந்த முப்பது நிமிட நேரத்தில் இராஜனின் மூளையைத் தட்டி எழுப்ப வேண்டும்.

சரி நமக்கு முகவரி தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அன்றிலுருந்து, நான் ரகசியமாகத் தொடர்வதை நிறுத்திக் கொண்டு, அவனுடைய நண்பர்களுள் ஒருவனானேன். அவனுக்கு பிடித்தமான விஷயங்கள் எவை என்று தெரிந்துக் கொண்டேன். முப்பது நிமிடங்களுக்குள் அவனது மூளையை எழுப்பவதற்காக அவனுக்கு பிடித்தமான விஷயங்களைக் கண்டுபிடித்தேன். இராஜனின் தினசரி வாழ்க்கையில் அவனுக்குப் பிடித்தமானவற்றைக் குறிப்பெடுத்தேன்.

நாகவள்ளியை விரட்ட வேறொரு வழியையும் கண்டுபிடித்தேன். அதாவது, இராஜனுக்குப் பிடித்தமானவற்றைக் குறிப்பெடுப்பது மட்டுமின்றி, நாகவள்ளிக்குப் பிடிக்காதவற்றையும் கண்டுபிடிக்க முயற்சித்தேன். இதற்காக, நாகவள்ளியின் பிறந்தநாள் முதல் அவள் வாழ்ந்த வீடு, பள்ளி, அவளுடைய தோழிகள், அவளுக்கு பிடித்த, மற்றும் பிடிக்காதவற்றை கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுள் கண்டுபிடித்தேன். நாகவள்ளிக்கு இராஜனின் பெற்றோர் மீது மிகுந்த கோபம் இருப்பதாகத் தெரிந்தது. நாகவள்ளியைப் பற்றிய குறிப்புகளை எழுத எனக்கு சுமார் இருநூறு தாள்கள் தேவைப்பட்டது.

இப்போது நான் தயார் நிலையில்! இன்று அமாவாசைக்கு அடுத்த நாள். எனது குழு தனது வேலைகளை கச்சிதமாக உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. நான் தாமுவிடம் எனது திட்டத்தைப் பற்றிச் சொன்னேன்.
'எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே சார்', என்றார் தாமு.
'கேட்ட கதை இல்ல தாமு, பாத்த கதை தான்', என்றேன், சிரித்துக் கொண்டே.

நான் இராஜனின் தாயிடம், நாகவள்ளிக்குப் பிடிக்காத உணவை தயார் செய்யச் சொன்னேன். அவரும், சிறிது தயக்கத்திற்குப் பின்னர் சம்மதித்தார்.

இரவு எட்டு மணி:
இராஜன் கைகளைத் தடவினான். இரத்தம் கொட்டியது.
'எனது பெயர் நாகவள்ளி என்றான்'
'என்ன தாயீ வேணும்', இம்முறை கேட்டது இராஜனின் தாய்.
இராஜனின் முகம் சிவந்தது. 'உன்ன யாருடி என்கூட பேசச்சொன்னது?' கொதித்தபடி இராஜனாகிய நாகவள்ளி கேட்டாள்.
பின்னர் நாகவள்ளிக்குப் பிடிக்காத உணவு பரிமாறப்பட்டது. நாகவள்ளி எழுந்து ருத்திரத் தாண்டவம் ஆடத் தொடங்கினான். இதைக் கண்டு இராஜனின் தாய் மயங்கி வீழ்ந்தாள். இதை இங்கேயே விட்டு விட்டால், இராஜனின் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இராஜனின் நண்பர்களைப் பக்குவப்படுத்தி இராஜனிடம் பேச வைத்தேன். இராஜனின் உயிர் நண்பனாகிய செல்வம், நிலைமையை கச்சிதமாகப் புரிந்து கொண்டு, பழைய நினைவுகளைக் கூறி, இராஜனின் மூளையை எழுப்ப முயன்றான்.

இரவு எட்டு மணி, இருபத்து ஐந்து நிமிடம்:
இன்னும் ஐந்து நிமிடங்களுள் இராஜனை எழுப்ப வேண்டியிருக்கிறது. செல்வம் பேசப் பேச இராஜனின் முக பாவங்களில் மாற்றங்கள் தெரிந்தது. நாகவள்ளியும், இராஜனும் மாறி மாறி வந்து போயினர். ஆனால் இராஜன் முழுவதாக விழிக்க வில்லை.

இரவு எட்டு மணி, இருபத்து எட்டு நிமிடம்:
பிரச்சனையின் உச்சக் கட்டத்தை புரிந்துக் கொண்டு, ஏற்கவனே தயார் செய்யப்பட்டுள்ள நாகவள்ளியின் உருவப் பொம்மை ஒன்று இராஜனின் கண் முன் நிருத்தப்பட்டது. நாகவள்ளி இறந்து போன போது உடுத்தியிருந்த உடைகளைப் போலவே அந்த உருவப் பொம்மைக்கும் உடுத்தப் பட்டது. அந்த பொம்மையை தூக்கிலிட்டால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நாகவள்ளி வரவேண்டும் என எண்ணி, அந்த பொம்மையை தூக்கிலிட சைகை செய்தேன்.

அப்போது நடந்தது அந்த அதிசயம்.

தொடரும்...

11 comments:

Sankar said...

ஓஹோ. இப்படி போகுதா கதை. இதுக்கப்புறம் எப்படி வித்தியாசப்படுத்தப் போறீங்கறது தான் மேட்டர்.

Vidhya Chandrasekaran said...

சூப்பர்..படிக்க படிக்க காட்சிகள் கண்முன்னே விரிகிறது. அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்.

Vijay said...

ம்ம்ம்....மேல சொல்லுங்க.....

Truth said...

//@Sankar Balasubramaniam(சங்கர்) said...
ஓஹோ. இப்படி போகுதா கதை. இதுக்கப்புறம் எப்படி வித்தியாசப்படுத்தப் போறீங்கறது தான் மேட்டர்.

தெரில சங்கர். போற வரைக்கும் போகட்டும் :-)

************************

//@வித்யா said...
சூப்பர்..படிக்க படிக்க காட்சிகள் கண்முன்னே விரிகிறது. அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்.

நன்றி விதயா. அடுத்த பதிவு சீக்கிரமா போட்டுடறேன்.

************************

@Vijay said...
ம்ம்ம்....மேல சொல்லுங்க.....

இதோ சொல்றேன்.

Manu said...
This comment has been removed by the author.
புன்னகை said...

//நாகவள்ளியும் இராஜனும் காதலித்திருந்தார்களாம்//
பாதி விடை கிடைத்துவிட்டது :-)

//'கேட்ட கதை இல்ல தாமு, பாத்த கதை தான்', என்றேன், சிரித்துக் கொண்டே//
இப்படி நீங்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டாலும், கண்டிப்பாக கதையின் முடிவில் "Kiran's touch" இருக்கும் என்ற நம்பிக்கையோடு, முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

சங்கர் G said...

கதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது... அடுத்த பாகம் எப்பொழுது வெளியிட உள்ளாய்?

Arasi Raj said...

அப்போது நடந்தது அந்த அதிசயம்.

தொடரும்...
////////////

அட பாவி மக்கா...சஸ்பென்ஸ் தாங்கலியே....சீக்கிரம் போடுங்க அடுத்த பாகம் ..அதுல தயவு செஞ்சு முடிவு சொல்லிடுங்க

Arasi Raj said...

சத்தியமா சொல்றேன்....கோர்வை ரொம்ப நல்லா இருக்கு...தேர்ந்த கதாசிரியர் எழுதுற மாதிரி இருக்கு .....

Good job :o)

Truth said...

//Manu said...

பாராட்டியதற்க்கு நன்றி மனோ.

//கதை படிக்கும் போழுது என் கைகளை நான் பிசைந்து பிசைந்து..கைகள் சிவந்தே போய் விட்டன

கையில என்ன வெச்சிக்கிட்டு இருந்தீரு?

//நான் ஒரு புத்தகத்தில் படித்து உள்ளேன்..அதாவது கற்பனை வளம் அதிகம் உள்ளவர்கள், நிஜ வாழ்கையில் மிகவும் அமைதியாகவும், சாதுவாகவும் இருப்பார்கள் என்று படித்து உள்ளேன்...இது சரியா???

எந்த புத்தகம்?

***************************************

//புன்னகை said...
//இப்படி நீங்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டாலும், கண்டிப்பாக கதையின் முடிவில் "Kiran's touch" இருக்கும் என்ற நம்பிக்கையோடு, முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அது யாரு Kiran? ஜெமினி படத்துல வந்தவளா? அவளோட டச் எதுக்கு?

*************************

//சங்கர் G said...

கதை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது... அடுத்த பாகம் எப்பொழுது வெளியிட உள்ளாய்?

நன்றி சங்கர். அடுத்த பாகம் தோ, இன்னைய ராவுல.

*********************************

//நிலாவும் அம்மாவும் said...
அட பாவி மக்கா...சஸ்பென்ஸ் தாங்கலியே....சீக்கிரம் போடுங்க அடுத்த பாகம் ..அதுல தயவு செஞ்சு முடிவு சொல்லிடுங்க

சொல்லிடறேங்க இன்னைக்கு. :-)

//சத்தியமா சொல்றேன்....கோர்வை ரொம்ப நல்லா இருக்கு...தேர்ந்த கதாசிரியர் எழுதுற மாதிரி இருக்கு .....

பெரிய வார்த்தை அதெல்லாம் :-) ரொம்ப நன்றிங்க.

எல் கே said...

நல்லா இருக்குன் தொடருங்கள்